திணை : நெய்தல்.

    துறை : இது. சிறைப்புறமாகத் தோழி தலைவிக்குரைப்பாளாய் வரைவுகடாயது.

    (து - ம்,) என்பது, சிறைப்புறத்தானாகிய தலைமகன் கேட்டு வரையுமாற்றானே தோழி, தலைவியை நோக்கி 'அவர் நம்மைப் புணர்ந்த சோலை இதுவே' யென்றும். 'ஆடிக் கூந்தலைத் துவட்டின துறை உதுவே' யென்றும். 'தழையுடுப்பித்துச்சென்ற கானல் அதுவே' யென்றுங் கூறியுருகிப் பசந்தனையே, இனி எவ்வாறுய்குவாயென்று வருந்திக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை "களனும்பொழுதும் . . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) என்புழி வகை என்பதன்கட் கொள்க.

    
இதுவே, நறுவீ ஞாழல் மாமலர் தாஅய்ப் 
    
புன்னை ததைந்த வெண்மணல் ஒருசிறைப் 
    
புதுவது புணர்ந்த பொழிலே உதுவே 
    
பொம்மல் படுதிரை நம்மோடு ஆடிப் 
5
புறந்தாழ்பு இருளிய பிறங்குகுரல் ஐம்பால் 
    
துவரினர் அருளிய துறையே அதுவே 
    
1கொடுங்கழை நிவந்த நெடுங்கால் நெய்தல் 
    
அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇத் 
    
தமியர் சென்ற கானல் என்றாங்கு 
10
உள்ளுதோ றுள்ளுதோ றுருகிப் 
    
பைஇப் பையப் பசந்தனை பசப்பே. 

    (சொ - ள்.) நறு வீ ஞாழல் மாமலர் தாஅய்ப் புன்னை ததைந்த வெண்மணல் ஒருசிறை-தோழீ ! நறு மணம் கமழ்கின்ற பூவையுடைய ஞாழலின் சிறந்த மலரும் புன்னையின் சிறந்த மலரும் உதிர்ந்து பரவி நெருங்கிய வெளிய மணற்பரப்பினொருபால்; புதுவது புணர்ந்த பொழில் இது - என்னைப் புதுவதாக இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த சோலை இதுவே என்றும்; பொம்மல் படுதிரை நம்மோடு ஆடி புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் துவரினர் அருளிய துறை உது - பொலிவு பொருந்திய கடலில் நம்மோடு நீராடி என் முதுகிலே தாழ்ந்திருண்ட விளங்கிய ஐம்பாலாக வகுக்கும் கூந்தலைப் பிழிந்து துவட்டினராயருளிய துறை உதுவே என்றும்; கொடுங்கழை நிவந்த நெடுங்கால் நெய்தல் அம் பகை நெறித்தழை அணிபெறத் தைஇத் தமியர் சென்ற கானல் அது என்று - வளைந்த தண்டு உயர்ந்த நீண்ட காம்புடைய நெய்தலின் அழகிய ஒன்றோடொன்று மாறுபடத் தொடுத்த நெறிப்பையுடைய தழையை அழகுபெற எனக்கு உடுப்பித்துத் தமியராய்ச் சென்றுவிட்ட கழிக்கரைச் சோலை அதுவே யென்றும்; ஆங்கு உள்ளுதோறு உள்ளுதோறு உருகி பை இப்பையப் பசந்தனை - அவ்வண்ணம் நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் உள்ளமுருகி மெல்ல மெல்லப் பசப்பை மேற்கொண்டு பசந்து காட்டினை; இனி எவ்வாறுய்குவாய்?; எ-று.

    (வி - ம்.) பொம்மல் - பொலிவு. துவருதல் - துவட்டுதல். கழை - தண்டு.புணர்ந்தபொழிலிது என்பது முதலாய மூன்றுந் துன்பத்துப் புலம்பல். உள்ளுதோறுருகியென்றது ஆங்குநெஞ்சழிதல். பசப்புப் பசந்தனை யென்றது பசலைபாய்தல். ஏனை மெய்ப்பாடு - அவலத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் -வரைவுகடாதல்.

    (பெரு - ரை.) புணர்ந்த பொழில் இது. அருளிய துறை உது, சென்ற கானல் அது என்று இயைக்க. இது நலந்தொலைவு குறிப்பானுணர்த்தி வரைவு கடாயபடியாம்.

(96)
  
 (பாடம்) 1. 
கொடுங்கழி.