(து - ம்,) என்பது, வினைவயிற்சென்ற தலைவன் குறித்த கார்ப்பருவங்கண்டு வருந்திய தலைவியைத் தோழி, இது கார்ப்பருவமன்று, அறியாமையாலே கடனீ ரையுண்ட முகில் மழையைப் பெய்யக்கண்டு கார் காலமாமெனப் பிடவுங் கொன்றையுங் காந்தளு மலர்ந்தன; அவற்றைநோக்கி நீ மயங்காதே கொள்ளென வற்புறுத்திக் கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும்பொருள்" (தொல்-கற்- 23) என்னும் நூற்பாவினுள் 'பிறவும் வகைபட வந்த கிளவி' என்பதன்கண் அமைத்துக் கொள்க.
| நீரற வறந்த நிரம்பா நீளிடைத் |
| துகில்விரித் தன்ன வெயிலவிர் உருப்பின் |
| அஞ்சுவரப் பனிக்கும் வெஞ்சுரம் இறந்தோர் |
| தாம்வரத் தெளித்த பருவங் காண்வர |
5 | இதுவோ என்றிசின் மடந்தை மதியின்று |
| மறந்துகடல் முகந்த கமஞ்சூல் மாமழை |
| பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல் |
| காரென்று அயர்ந்த உள்ளமொடு தேர்வில |
| 1பிடவுங் கொன்றையுங் கோடலும் |
10 | மடவ வாகலின் மலர்ந்தன பலவே. |
(சொ - ள்.) மடந்தை நீர்அற வறந்த நிரம்பா நீள் இடை - மடந்தாய்! தண்ணிதாகிய நீர்மை முற்றும் இல்லாத சென்று கடக்க முடியாத நீண்ட நெறியில்; துகில் விரித்து அன்ன வெயில் அவிர் உருப்பின் அஞ்சு வரப் பனிக்கும் வெம் சுரம் இறந்தோர்-வெளிய ஆடையை விரித்தாற் போன்ற வெயில் வீசுகின்ற வெப்பத்தாலே நோக்குவார் அஞ்சும்படியாக நடுக்கத்தைச் செய்யும் கொடிய காட்டின்கண்ணே சென்ற காதலர்; தாம்வரக் காண்வரத்தெளித்த பருவம் இதுவோ என்றிசின்-தாம் வருவேமென்று அழகு பொருந்தத் தெளியக் கூறிய பருவம் இதுதானோ ? என்று வினவாநின்றனை, இஃதன்று; மதி இன்று மறந்து கடல் முகந்த கமம் சூல் மா மழை - அறிவில்லாது பருவகாலத்தை மறந்து கடனீரையுண்டதனாலாகிய நிறைந்த சூலையுடைய கரிய மேகம்; பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல் கார் என்று அயர்ந்த உள்ளமொடு - தான் தாங்கமாட்டாமே பெய்தொழித்த வளவிய மழையை நோக்கி இது கார்காலமென மறதியுற்றவுள்ளத்துடனே; தேர்வு இல பிடவும் கொன்றையும் கோடலும் - அறியா தனவாய்ப் பிடவுங் கொன்றையுங் காந்தளும் இன்னும் பலவும்; மடவ ஆகலின் பல மலர்ந்தன - அஃறிணையாகிய அறிவில்லாப் பொருள்களாதலின் மிக மலர்ந்துவிட்டன; அவற்றைக் கண்டு நீ கார்காலமென மயங்காதேகொள் !; எ - று.
(வி - ம்.) நீர் - ஈரப்பண்பு. உருப்பு - வெப்பம். கமம் - நிறைவு. இறுத்தல் - பெய்தொழித்தல். கோடல் - காந்தள். மடவ - அறியாதன. இது பருவமன்றெனவே அவர் பொய்யுரையார், குறித்த பருவத்து வருவரெனத் தெளிவித்தனளாயிற்று. மெய்ப்பாடு - மருட்கை. பயன் - தலைவியைத் தெளிவித்தல்.
(பெரு - ரை.) அது கார்ப்பருவமேயாகவும் தலைவியை ஆற்றுதற்குப் பிறிதொரு வழி காணாமையால் தோழி இங்ஙனம் தன் படைத்து மொழியால் மருட்டி ஆற்றுவிக்கின்றாள் என்க. இச் செய்யுளோடு,
| "மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை |
| கல்பிறங்கு அத்தஞ் சென்றோர் கூறிய |
| பருவம் வாரா அளவை நெரிதரக் |
| கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த |
| வம்ப மாரியைக் காரென மதித்தே" (குறுந் - 66 ) |
எனவரும் குறுந்தொகைச் செய்யுளை ஒப்பு நோக்குக.
(99)