ஒளவையார் (பி-ம். அவ்வையார்.) (பி-ம்.) 2. வருத்தின், வருந்தின்.
(ப-ரை.) உள்ளின் உள்ளம் வேம் - தலைவரை நினைந்தால் எம் உள்ளம் வேவாநிற்கும்; உள்ளாது இருப்பின் - நினையாமல் இருப்பேமாயின், எம் அளவைத்து அன்று - அங்ஙனம் இருத்தல் எமது ஆற்றலளவிற்கு உட் பட்டதன்று; காமம் - காமநோயோ, வருத்தி- எம்மை வருந்தச் செய்து, வான்தோய்வற்று - வானத்தைத் தோய்வது போன்ற பெருக்கத்தையுடையது; யாம் மரீஇயோர் - எம்மால் மருவப் பட்ட தலைவர், சான்றோர் அல்லர் - சால்புடை யாரல்லர்.
(முடிபு) உள்ளின் உள்ளம் வேம்; உள்ளாதிருப்பின் எம் அளவைத்தன்று; காமம் வான்தோய்வற்று; மரீஇயோர் சான்றோரல்லர்.
(கருத்து) தலைவர் தம் சொற்படி மீண்டு வாராமையின் ஆற்றேனா யினேன்.
(வி-ரை.) தலைவனை நினைந்த காலத்தில் அவனது பிரிவுத்துன்பம் தோற்றுதலின் உள்ளின் உள்ளம் வேமென்றாள். உள்ளம் வேதலாவது புறத்தேதுன்பம் தோற்றாவாறு உள்ளத்துள்ளே துயரத்தை அடக்கி நிற்றல்.
என் துயரத்தை அறியாராயினமையின் அன்பின்மையையும், தமது பிரிவு நீட்டித்தலால் எனக்கு உண்டாகிய வேறுபாடுகளையறிந்த ஊரார் தம்மைத் தூற்றுதலைக் கருதாது இன்னும் ஆண்டே உறைதலின் நாணமின்மையையும், இல்லறம் நிகழ்த்துவார் உரியகாலத்தே தலைவியருடன் இருந்து இன்புறும் உலகியலை மறந்தமையால் ஒப்புரவின்மை யையும், மெல்லியலாகிய என்துயர் நீங்க வாராமையின் கண்ணோட்ட மின்மையையும், தாம் கூறிய காலத்தில் மீளாமையின் வாய்மையின்மையையும் உடையரென்னும் கருத்தை உள்ளிட்டுச் சான்றோரல்லர் எனக் கூறினள்; “அன்புநா ணொப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ, டைந்துசால் பூன்றிய தூண்” (குறள், 983) என்பதை அறிக.
ஏகாரங்கள் அசைநிலை.
மேற்கோளாட்சி 1. கீழ்க்கதுவா யெதுகை வந்தது (தொல்.செய். 93, ந.); காதல் கைமமிகலென்னும் மெய்ப்பாடு வந்தது (சீவக. 996, ந.)
2-3. தொழில் நிகழ்த்தற்குரிய அல்லாப் பொருளை நிகழ்த்தினபோலக் கூறியது (தொல். பொருள் 19, ந.)
மு. காதல் கைம்மிகலென்னும் மெய்ப்பாடு வந்தது (தொல். மெய்ப். 23, பேர்.; இ.வி.580); வருத்தமிகுதியால் தலைவனை வழிபடுதலை மறுத்துத் தலைவி கூறியது (தொல். களவு. 20, ந.)
ஒப்புமைப் பகுதி 1. உள்ளின் உள்ளம் வேம்: (குறுந். 150:4); “உள்ளி னுள்ளம் வேமே” (நற். 184:6); “உள்ளினு முள்ளஞ் சுடும்” (குறள். 1207); “கருதின்வே முள்ளமும்” (கம்ப. தாடகை. 5.)
3. காமத்தின் பெருக்கம்: குறுந். 18:5. காமம் வான்தோய்வற்று : குறுந். 99:4-6.
4. தலைவன் சான்றோனல்லனெனப்படுதல்: நற். 233:8-9, 365: 8-9
(102)