(தலைவன் கூறிச் சென்ற பருவம் வரவும் அவன் வாரானாக, “இனி அவர் வரினும் வாராவிடினும் நமக்குப் பயனொன்றுமில்லை; நான் இறந்து படுவேன்” என்று தலைவி கூறியது.)
 110.   
வாரா ராயினும் வரினு மவர்நமக் 
    
கியாரா கியரோ தோழி நீர 
    
நீலப் பைம்போ துளரிப் புதல 
    
பீலி யொண்பொறிக் கருவிளை யாட்டி 
5
நுண்மு ளீங்கைச் செவ்வரும் பூழ்த்த 
    
வண்ணத் துய்ம்மல ருதிரத் தண்ணென் 
    
றின்னா தெறிதரும் வாடையொ 
    
டென்னா யினள்கொ லென்னா தோரே. 

என்பது (1) பருவங்கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது.

     (2) தலைமகனைக் கொடுமைகூறித் தலைமகளைத் தோழி வற்புறீ இயதுமாம் (பி-ம். வற்புறுத்தியது.)

கிளிமங்கலங்கிழார் (பி-ம். கிள்ளிமங்கலங்கிழார்.)

     (பி-ம்.) 2-3. ‘நீர் நிலைப்’; 3-4. ‘புதன்மலியொண்’; 7.’றின்னா வெறி தரும்’, ‘றின்னா தெறி வரும்’.

     (ப-ரை.) தோழி---, நீர - நீரிலுள்ள, நீலம் பைம்போது உளரி - நீலத்தினது மலருஞ் செவ்வியையுடைய பேரரும்பை மலரச் செய்து, புதல - புதலிலே உள்ள, பீலி ஒள் பொறி கருவிளை - மயிற்பீலியின் ஒள்ளிய கண்ணைப் போன்ற கருவிளை மலரை, ஆட்டி - அலைத்து, நுண் முள் ஈங்கை செ அரும்பு ஊழ்த்த - நுண்ணிய முள்ளையுடைய ஈங்கையினது செவ்விய அரும்புகள் மலர்ந்த, வண்ணம் துய்மலர் - நிறத்தையும் துய்யையும் உடைய மலர்கள், உதிர - உதிரும் படி, தண்ணென்று - குளிர்ச்சியையுடையதாகி, இன்னாது எறிதரும் வாடையொடு - இன்னாததாகி வீசுகின்ற வாடைக் காற்றினால், என் ஆயினள் கொல் - எத்தன்மையினள் ஆனாளோ, என்னாதோர் - என்று நினைந்து கவலையுறாத தலைவர், வாராராயினும் - வாராவிடினும், வரினும் - வந்தாலும், நமக்கு யார் ஆகியர் - நமக்கு எத்தகைய உறவினராவர்? வருவதற்குள் இறந்து படுவேன்.

     (முடிபு) தோழி, என்னாயினள் கொல் என்னாதோர், வாராராயினும் வரினும் யாராகியர்?

     (கருத்து) தலைவர் வாராமையின் யான் இறந்துபடுவேன்.

     (வி-ரை.) “உயிரோடிருப்பின் அவர் வந்தால் இன்புறுவேன்; அவர் வருதற்குரித்தான இப்பருவத்தில் வாராமையின் யான் இனி இறந்து படுவேன்; யான் இறந்துபட்ட பின்னர் அவர் வரினும் வாராவிடினும் எனக்கு ஆகும் பயன் ஒன்றுமில்லை” என்று தலைவி கூறினாள்.

     இன்னாதெறிதரும் வாடையென்றது அவ்வாடையே தன் உயிர் நீத்தற்குரிய காரணமாகுமென்று குறிப்பித்தவாறு.

     துய் - பஞ்சின் நுனிபோன்றதொரு பொருள். ஓ, ஏ: அசைநிலை.

     இரண்டாவது கருத்து: “நம்மேல் அன்புடையராயின் நம்மைத் துன்புறுத்தும் இவ்வாடைக்காலத்தே வந்து துன்பத்தைப் போக்க வேண்டும். இதற்குப் பாதுகாப்பாக வாராவிடின் அவர் இனி வந்தும் பயனில்லை” என்று தோழி கூறியதாகக் கொள்க.

     மேற்கோளாட்சி 1-2. அகைப்பு வண்ணம் வந்தது (தொல். செய். 229, பேர். ந.)

     மு. பருவங்கண்டழிந்து தலைவி கூறியது (தொல். கற்பு. 6, ந. செய், 211, பேர் ந.)

     ஒப்புமைப் பகுதி 1. யாராகியர்: குறுந். 40:1.

     1-2. அவர் யாராகியர்: ‘வாரா தோர்நமக் கியாஅர்” (அகநா. 50:8.)

     4. கருவிளம்பூவிற்கு மயிற் பீலி: “தண்புனக் கருவிளைக் கண்போன் மாமலர், ஆடுமயிற் பீலியின் வாடையொடு துயல்வர” (நற். 262: 1-2.)

     3-4. புதல கருவிளை: “கருவிளை முரணிய தண்புதற் பகன்றை” (அகநா. 255:11.)

     5. நுண் முள் ஈங்கை: “கொடுமு ளீங்கை” (நற். 204:9; அகநா. 357:1.)

     5-6. ஈங்கையின் துய்ம்மலர்: “ஈங்கைய, வண்ணத் துய்ம்மலர்” (குறுந். 380: 5-6); “ஈங்கைத் துய்த்தலைப் புதுமலர்” (நற். 193:1-2); “ஈங்கைத் துய்யவிழ் பனிமல ருதிர”, “முட்கொம்பீங்கைத் துய்த்தலைப் புதுவீ” (அகநா. 252:9-10, 306:3.)

     5-7. வாடையால் ஈங்கைப்பூ உதிர்தல்: “ஈங்கைவா டுதிர் புக.... மேனின்ற வாடையால்” (கலி. 31:3-6.)

     4-7. கருவிளை, ஈங்கை, வாடை: “நீர்வார் கண்ணிற் கருவிளை மலரத், துய்த்தலைப் பூவின் புதலிவ ரீங்கை, நெய்த்தோய்த் தன்ன நீர்நனை யந்தளிர், இருவகி ரீருளி னீரிய துயல்வர... ஆனா தெறிதரும் வாடையொடு” (அகநா. 294:5-15.)

     மு. குறுந். 82.

(110)