(தலைவன் வரைந்து கொள்ளாமல் நெடுநாள் ஒழுகினானாக, “நான் ஊரார் அலருக்கு அஞ்சி மறைந்து ஒழுகுகின்றேன்; என் காமம் மெலிகின்றது; அதனை முற்றும் விடும் நிலையைப் பெறும் ஆற்றலில்லேன்” என்று கூறித் தலைவி வருந்தியது.)
 112.    
கௌவை யஞ்சிற் காம மெய்க்கும் 
    
எள்ளற விடினே யுள்ளது நாணே 
    
பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ 
    
நாருடை யொசிய லற்றே 
5
கண்டிசிற் றோழியவ ருண்டவென் னலனே. 

என்பது வரைவு நீட்டித்த வழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

ஆலத்தூர்கிழார்.

     (பி-ம்.) 3. ‘நிலம்படர்’; 4. ‘நாளுடை’.

     (ப-ரை.) தோழி---, கௌவை அஞ்சின் - பிறர் கூறும் பழி மொழியை அஞ்சினால், காமம் எய்க்கும் - காமம் மெலிவடையும்; எள் அற விடின் - பிறர் இழித்தல் அறும்படி அக்காமத்தை விட்டு விடின், உள்ளது நாணே - என்பால் இருப்பது நாண மட்டுமே ஆகும்; அவர் உண்ட என் நலன் - தலைவர் நுகர்ந்த எனது பெண்மை நலம், பெரு களிறு வாங்க - பெரியகளிறு உண்ணும் பொருட்டு வளைக்க, முரிந்து - வளைந்து, நிலம் படாஅ - நிலத்திற்படாத, நாருடை ஒசியல் அற்று - பட்டையை உடைய ஒடிந்த கிளையைப் போன்றது: கண்டிசின் - இதனைக் காண்பாயாக.

     (முடிபு) தோழி, கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்; விடின் நாணே உள்ளது; அவர் உண்ட நலன ஒசியலற்று; கண்டிசின்.

     (கருத்து) ஊரார் அலரை அஞ்சிக் காமத்தை மிகுதியாக வெளிப்படுத்தாமல் இருக்கின்றேன்.

     (வி-ரை.) கௌவை - பலர் கூறும் பழிமொழி. “என்பாலுள்ள காமத்தினால் உண்டாய வேறுபாடுகளை ஊரினர் அறிந்து பழிமொழி கூறுகின்றனர்; அப்பழிமொழிக்கு அஞ்சுவேன் ஆயின் என்பால் உள்ள காமம் குறைவுபடும்; அக்கவ்வை சிறிதேனும் உண்டாகாமலிருத்தற் பொருட்டு என் காமத்தை முற்றும் விடின் என்பால் எஞ்சியிருப்பது நாணம் ஒன்றுமேயாகும்; எனது பெண்மை நலனும் கற்பும் அழிந்து விடும். பெண்மை நலன் முன்னரே தலைவரால் உண்ணப்பட்டுச் சிறிதளவு எஞ்சி நிற்கின்றது” என்று தலைவி கூறினாள்.

     காமத்தை விடுவதாற் பயனில்லை யென்பது தலைவி கருத்து. கௌவையும் காமமும் ஒன்றுக்கொன்று முரணாக இருந்து தலைவியைத் துன்பத்துக்கிடமாக்கின;

   
“நலிதருங் காமமுங் கௌவையு மென்றிவ் 
   
 வலிதி னுயிர்காவாத் தூங்கியாங் கென்னை 
   
 நலியும் விழும மிரண்டு”              (கலி. 142:56-8)  

என்பதில் இக்கருத்து விளக்கமாக அமைந்துள்ளது.

     கௌவையும் நாணும் காமத்தைப் பெருகவிடாமல் தடை பண்ணுவன (குறள். 1163.)

     களிறு வளைத்துத் தழைகளை உண்டதனால் ஒடிந்த மரக்கிளை ஆனது தன்னுடைய இயல்பான நிலையை ஒழிந்து மீட்டும் அந்நிலையைப் பெறாத வண்ணம் இருப்பினும், முற்ற ஒடிந்து கீழே விழுந்து வாடி உலராமல் நாரின் தொடர்பினால் மீண்டும் தழைக்கும் நிலையில் இருத் தலைப்போல, தலைவனால் உண்ணப்பட்ட நலன் தன் பண்டை நிலைமையைப் பெறாத நிலையிலிருப்பினும், முற்றும் அழிந்தொழியாமையால் தலைவர் வரைவார் என்னும் கருத்தினால் பின் சிறக்கத்தக்க நிலையில் அமைந்துள்ளதென்று உவமையை விரித்துக்கொள்க.

     உண்ட நலனென்றது உண்ணப்படுவதற்குரியதல்லாத பொருளைப் பிறர் உண்டதுபோலக் கூறும் மரபுபற்றி வந்தது (தொல். பொருள். 21, ந.)

     இசின்: முன்னிலையில் வந்தது. நானே : ஏகாரம் பிரிநிலை; ஏனை ஏகாரங்கள் அசைநிலைகள்.

     மேற்கோளாட்சி மு. தலைவனை வழிபடுதலை மறுத்த தலைவியே அவனை ஏற்றுக் கோடலை விரும்பியபோது கூறியது; ‘இது நாணே உள்ளது; கற்புப் போமென்றலின் மறுத்தெதிர் கோடலாம்’ (தொல். களவு. 20, ந.)

     ஒப்புமைப் பகுதி 2. காமமும் நாணமும்: குறுந். 149:1-6; “காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே, யானோ பொறெனிவ் விரண்டு” (குறள். 1247.)

     5. கண்டிசிற்றோழி : குறுந். 220:7, 240:5.

     தலைவன் உண்ட நலம்: குறுந். 236:6; நற். 15:4.

(112)