(தலைவன் செய்த குறியென்று பிறிதொன்றை யெண்ணிச் சென்று அவனை எதிர்ப்படப்பெறாமல் ஒரு நாள் மீண்ட தலைவி, பின் ஒரு நாள் அவன் வந்தமை கூறிய தோழியை நோக்கி, “நீ உரைப்பது உண்மையோ? முன் அவன் வாராமையால் துன்புறுகின்றேன்” என்று கூறியது.)
 121.    
மெய்யோ வாழி தோழி சாரல் 
    
மைபட் டன்ன மாமுக முசுக்கலை் 
    
ஆற்றப் பாயாத் தப்ப லேற்ற் 
    
கோட்டொடு போகி யாங்கு நாடன் 
5
தான்குறி வாயாத் தப்பற்குத்  
    
தாம்பசந் தனவென் றடமென் றோளே. 

என்பது இரவுக்குறி வரும் தலைமகன் செய்யுங்குறி பிறிதொன்றனால் நிகழ்ந்து மற்று அவன் குறியை ஒத்தவழி அவ்வொப்புமையை மெய்ப்பொருளாக வுணர்ந்து சென்றாள், ஆண்டு அவனை (பி-ம். சென்றாண்டவனைக்) காணாது தலைமகள் மயங்கியவழிப் பின்னர் அவன் வரவுணர்த்திய தோழிக்குத் தலைமகள் கூறியது.

     (இரவுக்குறி........ மயங்கியவழி - தலைவி அல்ல குறிப்பட்டு மீண்ட விடத்து. பின்னர் - பின் ஒரு நாள்.)

கபிலர்.

     (பி-ம்.) 1. ‘மெய்யே’; 2. ‘மைப்பட்டன்ன’; 3. ‘லொற்ற’; 4. ‘கேட்டொடு’; 5. ‘வாராத்’.

     (ப-ரை.) தோழி---, மெய்யோ - இப்பொழுது தலைவன் வந்ததாக நீ கூறியது உண்மையோ? முன்பு, சாரல் - மலைப்பக்கத்தில், மை பட்டன்ன மா முகம் முசு கலை - மைப்பட்டாற் போன்ற கரிய முகத்தையுடைய ஆண்குரங்கு, ஆற்ற பாயா தப்பல் - கொம்பு தாங்கும்படி பாயாத தவற்றினது பயன், ஏற்ற கோட்டொடு போகியாங்கு - அக்குரங்கை ஏற்றுக்கொண்டு முறிந்த அக் கொம்பினிடத்துச் சென்றாற் போல, நாடன் - தலைவன், குறி வாயாதப்பற்கு - குறிப்பை வாய்ப்பச் செய்யாத தவற்றின் பொருட்டு, என் தட மெல்தோள் பசந்தன - என்னுடைய பரந்த மெல்லிய தோள்கள் பசலையை அடைந்தன.

     (முடிபு) தோழி, மெய்யோ? நாடன் தப்பற்கு என் தோள் பசந்தன.

     (கருத்து) ஏற்ற குறியைச் செய்யாது முன்னர்த் தவறிய தலைவன் இப்போது வந்தான் என்று நீ கூறுதல் மெய்யோ?

     (வி-ரை.) அல்லகுறிப்பட்டு மீண்டவளாதலின், தோழியும் அவ்வாறே பிரிதொரு குறிப்பைத் தலைவன் செய்ததாக எண்ணி அவன் வந்தான் என்று கூறுகின்றாளோவென ஐயுற்று, மெய்யோவென்றாள். வாழி: அசை நிலை; மெய்யாயின் அவனது வரவாகிய நற்செய்தியை உரைத்த நீ வாழ்வாயாகவெனப் பொருள் கொள்ளுதலும் பொருந்தும். முசுவென்பது முகமட்டும் கரியதாயிருக்கும் ஒருவகைக் குரங்கு. ஆற்ற - முற்றவென்பதும் ஒன்று. நாடன் - குறிஞ்சி நிலத் தலைவன்; குறுந். 3, வி-ரை. தப்பல் - தப்பு, தவறு.

     தான், தாம், ஏ : அசை நிலைகள்.

     தான் செய்த குறியையறிந்து தலைவி வந்திலளென்று தலைவன் கூறுதல் கூடுமென்று நினைத்தவளாதலின் இங்ஙனம் கூறினாள்.

     “குரங்கு, கொம்பு ஏற்றுக் கொள்ளும்படி பாயாமையால் அது முறிந்து போனதுபோல, தலைவர் நான் அறியும் வண்ணம் குறி செய்யாத தவற்றால் என் தோள்கள் பசந்தன” என்று தலைவி கூறினாள்.

     தலைவியின் தோள் பசந்தமைக்குக் காரணம் தலைவனை எதிர்ப் படாமை.

     மேற்கோளாட்சி 2. கலையென்னும் பெயர் முசுவிற்கு வந்தது (தொல். மரபு. 46, பேர்.)

     5-6. அல்ல குறிப்படுதல் (தொல். களவு. 42, ந.)

     மு. மெய்யே யென்ற லென்னும் மெய்ப்பாடு வந்தது: ‘இதனுட் கூறியதென ஒரு சொல்வர வேண்டும்’ (தொல். மெய்ப். 22, இளம்); இரவுக்குறி வரும் தலைவன் செய்யுங்குறி பிறிதொன்றனால் நிகழ்ந்து தலைவன் குறியை ஒத்தவழி அதனை மெய்யாக உணர்ந்து மயங்கிய வழித் தலைவிக்குக் கூற்று நிகழ்ந்தது; ‘கோடு ஆற்றப்பாயாது வேண்டியவாறு பாய்ந்து அதனை முறித்த முசுப்போல நாம் குறிபெறுங் காலத்து வாராது புள் தாமே வெறித்தியம்புந் துணையும் நீட்டித்துப் பின்பு வருதலின், குறி வாயாத் தப்பு அவன் மேலேற்றி, அதற்குத் தோள் பசந்தன வென்று பின் ஒருநாள் அவன் வந்துழித் தோழியை நோக்கி, இவ்வரவு மெய்யோ வெனவே தன்வயின் உரிமையும் அவன் வயிற் பரத்தையும் பெற்றோம்; (தொல். களவு. 20, ந.)

     ஒப்புமைப் பகுதி 1. மைபட்டன்ன மாமுக முசுக்கலை: “மைபட்டன்ன மாமுக முசுவினம்” (அகநா. 267:9.)

     மாமுக முசுக்கலை : முருகு. 303.

     3. தப்பல் : குறுந். 79:7, ஒப்பு.

     6. தோள் பசத்தல்: “கண்ணுந் தோளும்... பழநல மிழந்து பசலை பாய” (நற்.219:1-2); “வேய்புரை மென்றோட் பசலையும்” (கலி. 39:48)

     தடமென்றோள் : குறுந. 77:6, ஒப்பு.

     5-6. தலைவியின் துயரத்தைத் தோள் காட்டுதல் : குறுந். 77, வி-ரை.

     தலைவனது தவறு தோளின் தவறாதல் : “ தாம்பழி யுடையரல்லர் நாளும், நயந்தோர்ப் பிணித்த றேற்றா வயங்குவினை, வாளே ரெல்வளை நெகிழ்த்த, தோளே தோழி தவறுடை யவ்வே” (அகநா. 267: 14-7.)

(121)
  
 1 
‘இரவுக்குறி கழிதலென்பது அல்லற்குறிப்பட்டு மீண்ட
தலைமகன் வருந்துதல்’ (களவியற் காரிகையுரை.)