பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணன். (பி-ம்.) 3. ‘தாழ்மண்டிலத்துப்’; 4. ‘படிம’; 5. ‘னின்செயலுள்ளும்’.
(ப-ரை.) பார்ப்பன மகனே பார்ப்பன மகனே---, செ பூ முருக்கின் - செம்மையாகிய பூவையுடைய புரச மரத்தினது, நல் நார் களைந்து - நல்ல பட்டையை நீக்கி விட்டு, தண்டொடு பிடித்த - அதன் தண்டோடு ஏந்திய, தாழ் கமண்டலத்து - தாழ்கின்ற கரகத்தையும், படிவம் உண்டி - விரதவுணவையுமுடைய, பார்ப்பன மகனே-, எழுதா கற்பின் - வேதத்தையறிந்த, நின் சொல்லுள்ளும் - நின்னுடைய அறிவுரைகளுள், பிரிந்தோர் புணர்க்கும் - பிரிந்த தலைவியரையும் தலைவர்களையும் சேரச் செய்யும், பண்பின் - தன்மையையுடைய, மருந்தும் உண்டோ - பரிகாரமும் இருக்கின்றதோ? இது - இங்ஙனம் நீ கழறுதல், மயல் - மயக்கத்தால் வந்ததாகும்.
(முடிபு) பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே, நின் சொல்லுள்ளும் மருந்துமுண்டோ? இது மயல்.
(கருத்து) நீ என்னை இடித்துரைத்தலால் வரும் பயன் யாதும் இல்லை.
(வி-ரை.) இது பார்ப்பனப் பாங்கன் காமநிலை யுரைத்துத் தேர்நிலை யுரைத்த போது (தொல். கற்பு. 36) தலைவன் கூறியது. முருக்கென்றதுபுரச மரத்தை; இது பலாசென்றும் கூறப்படும். தாழ் கமண்டலம் - உறியிலே தாழ்ந்த கமண்டலம்; "உறித் தாழ்ந்த கரகமும்’ (கலி. 9:2.) எழுதாக் கற்பு - எழுதாக் கிளவியைக் கற்ற கல்வி; அதாவது வேத முணர்தல். மருந்து - பரிகாரம்; "மருந்தில் கூற்றம்" (புறநா. 3:12.) மருந்துமுண்டோ வென்ற உம்மை பயனற்ற இடித்துரையே யன்றிப் பரிகாரமும் உண்டோவென்னும் பொருட்பயன் உடையது. ‘நாம் இடித்துரைத்தால் இவன் கொண்ட காமம் நீங்கும்' என்று பாங்கன் எண்ணிய எண்ணத்தை மயலென்றான். உண்டோ: ஓகாரம் எதிர்மறைப் பொருளது; மயலோ: ஓ அசை நிலை.
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோவென்றது என்னையும் தலைவியையும் சேர்த்து வைக்கும் முயற்சியே பயன்படுவதென்னும் குறிப்பையுடையது; எனவே நீ கழறுவதொழிந்து அது செய்க என்றானாயிற்று.
(மேற்கோளாட்சி) 1. முறைமை சுட்டா மகனென்னும் பெயர் ஏகாரம் பெற்று விளியேற்றது (தொல். விளி. 18, தெய்வச். ); உயர்திணைப் பெயர் ஏகார விளி யுருபு பெற்று வந்தது (நன். 304, மயிலை.)
4. முறைமை சுட்டா மகனென்பது விளிவேற்றுமைக்கண் ஏகாரம் பெற்றுவந்தது
(தொல். விளி.
12, ந.; இ.வி.207.)
3-4. அந்தணர்க்குக் கரகமும் முக்கோலும் உரியவை (தொல். மரபு. 70, பேர்.)
ஒப்புமைப் பகுதி 2. நாரென்பது பட்டைக்கு வருதல்: குறுந். 112:4, 274:5.
4. படிவவுண்டிப் பார்ப்பன மகன்: "படிவப் பார்ப்பான்" (முல்லைப். 37.)
6. பிரிந்தோர்ப் புணர்த்தல்: குறுந். 146:2.
(156)