(தலைவனது பிரிவினால் வருந்துந் தலைவி காமமிகுதியாற் கடலை நோக்கி, “நீ நள்ளிரவிலும் ஒலிக்கின்றனையே; யாரால் வருத்த முற்றாய்?” என இரங்கிக் கூறியது.)
 163.   
யாரணங் குற்றனை கடலே பூழியர் 
    
சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன 
    
மீனார் குருகின் கானலம் பெருந்துறை 
    
வெள்வீத் தாழை திரையலை  
5
நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே. 

என்பது தன்னுட் கையாறெய்திடு கிளவி. (கையாறு - செயலறுதல்.)

அம்மூவன்.

    (பி-ம்) 1.‘கடலே யூழி’;4.‘தாழைத்திரை’.

    (ப-ரை.) கடலே---, பூழியர் - பூழி நாட்டாரது, சிறு தலை - சிறிய தலையையுடைய, வெள்ளை தோடு பரந்தன்ன - வெள்ளாட்டின் தொகுதி பரவினாற்போன்ற, மீன் ஆர் குருகின் - மீனை உண்ணும் கொக்குகளையுடைய, கானல் பெரு துறை - சோலை சூழ்ந்த பெரிய துறையினிடத்து, வெள் வீ தாழை - வெள்ளிய பூவையுடைய தாழையை, திரை அலை - அலைகள் அலைக்கின்ற, நள்ளென்கங்குலும் - நடு இரவிலும், நின் குரல் கேட்கும் - நினது ஆரவாரம் செவிப்படும்; யார் அணங்கு உற்றனை - நீ யாரால் வருத்த மடைந்தாய்?

    (முடிபு) கடலே, கங்குலும் நின்குரல் கேட்கும்; யார் அணங்குற்றனை?

    (கருத்து) கடலே, நீ யார் பிரிவுபற்றி வருந்துகின்றாய்?

    (வி-ரை.) தலைவனைப் பிரிந்த காம மயக்கத்தால் கடலைப் பார்த்துத் தலைவி கூறியது இது. நள்ளென் கங்குலிலும் துயிலாமல் அரற்றும் நிலையையுடைய அவள் கடலையும் தன்னைப் போன்றதெனக் கருதி,“யான் ஒரு தலைவனால் அணங்குற்றது போல நீயும் ஒரு தலைவனால் அணங்குற்றனைபோலும்! அத்தலைவன் யார்?” என்று வினவினாள்.

    பூழி நாட்டினர் ஆட்டு நிரையுடையரென்ற செய்தி, “பூழியர், உருவத் துருவி னாண்மேய லாரும்” (நற். 192:3-4) என்றவிடத்தும் காணப்படுகின்றது. வெள்ளை - வெள்ளாடு (மலைபடு. 414, ந.) கானலம் பெருந்துறை: அம் சாரியை. கானல் - கடற்கரைச் சோலை. வெள்வீத் தாழை யென்றாள் செந்தாழையும் உண்மையின்.

    நள்ளென் கங்குலில் நின்குரல் கேட்குமென்றமையால் அதனைக் கேட்பாளாகிய தலைவியும் அந்நள்ளிரவில் துஞ்சாமை பெறப்படும்.

    (மேற்கோளாட்சி) மு. கடலொடு கவலல (களவியற்.)

    ஒப்புமைப் பகுதி 2. சிறுதலை வெள்ளைத்தோடு: “இடையன், சிறுதலையாயமொடு குறுகல் செல்லா” (புறநா. 54: 11-2.)வெள்ளை:அகநா. 104:9, 107, 156.14. ஆட்டின் தோடு:“ஆடுதலைத் துருவின் றோடு” (அகநா. 274:4.) 3.மீனார் குருகு:அகநா.40:3. கானலம்பெருந்துறை: அகநா. 90:3, 280:14. மு. அகநா.300:4.

    4. தாழையின்மலர் திரையால் அலைக்கப்படுதல்: “தயங்குதிரை பொருத தாழை வெண்பூ” (குறுந். 226:5.)

    நள்ளென் கங்குல்: குறுந். 6:1, ஒப்பு; 160:4, ஒப்பு.

 மு. 
“பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல் 
  
 தூவறத் துறந்தனன் றுறைவனென் றவன்றிறம் 
  
 நோய்தெற வுழ பார்க ணிமிழ்தியோ வெம்போலக் 
  
 காதல்செய் தகன்றாரை யுடையையோ நீ”        (கலி. 129:8-11); 
  
    “மணிநிற நெய்த லிருங்கழிச் சேர்ப்பன் 
  
     அணிநல முண்டகன்றா னென்றுகொ லெம்போற் 
  
     றிணிமண லெக்கர்மே லோதம் பெயரத் 
  
     துணிமுந்நீர் துஞ்சா தது”                           (ஐந். எழு. 60); 
  
    “பூங்கணை வேளைப் பொடியாய் விழவிழித் தோன்புலியூர் 
  
     ஓங்கணை மேவிப் புரண்டு விழுந்தெழுந் தோலமிட்டுத் 
  
     தீங்கணைந் தோரல்லுந் தேறாய் கலங்கிச் செறிகடலே 
  
     ஆங்கணைந் தோர்நின் னையுமுள ரோசென் றகன்றவரே”(திருச்சிற். 179); 
  
    “காமுற்றா யாமன்றே காளத்தி யான்கழற்கே 
  
     யாமுற்ற துற்றா யிருங்கடலே - யாமத்து 
  
     ஞாலத் துயிரெல்லாங் கண்டுஞ்சு நள்ளிருள்கூர் 
  
     காலத்துந் துஞ்சாதுன் கண்”                        (கைலைபாதி. 64); 
  
    “தன்போற் சினத்துரு மேந்திய கோன்கன்னித் தண்டுறையும்  
  
     பொன்போன் மலர்புன்னைக் கானலு நோக்கிப் புலம்புகொண்ட 
  
     என்போ லிரவினெல் லாந்துயி லாதுநின் றேங்குதியால் 
  
     அன்போ டொருவற் கறிவழிந் தாயோ லைகடலே”         (பாண்டிக்.); 
  
    “உன்னையு நீத்தகன்றா ருண்டோ வுடல்கருகிப் 
  
     புன்னை கமழும் பொருகடலே - என்னைப்போல் 
  
     நெஞ்சா குலம்பெருகி நீயு மிரவெல்லாம் 
  
     துஞ்சாத தென்கொலோ சொல்”                     (கிளவித்தெளிவு.) 

குறிப்பு: இத்தகைய செய்யுட்கள் பல பிற்காலத்துப் பிரபந்தங்களில் உண்டு; திவ். திருவாய். 2. 1:3 முதலியன.

(163)