கூடலூர் கிழார். (பி-ம்) 1.‘நிறைபோத்’, ‘நிரைபெயர்த்’, ‘நிரைபோத்’; 3.‘மாந்தை’, ‘மாநகை’.
(ப-ரை.) தண் கடல் படு திரை பெயர்த்தலின் - குளிர்ந்த கடற்கண்ணே உண்டாகும் அலைகள் மீன்களைப் பெயரச் செய்வதனால், வெள் பறை நாரை நிரை - வெள்ளிய சிறகுகளையுடைய நாரையின் வரிசை, பெயர்ந்து அயிரை ஆரும் - நீங்கி அயிரை மீனை உண்ணுதற் கிடமாகிய, ஊர் மரந்தை - ஊராகியமரந்தை, நன்றுமன் - தலைவனோடு இருக்குங்கால் மிக நன்மையையுடையது; ஒரு தனி வைகின் - தலைவனைப் பிரிந்து தனியே தங்குவேமாயின், புலம்பு ஆகின்று - வருத்தத்தைத் தருவதற்குக் காரணமாகின்றது.
(முடிபு) மரந்தை நன்றுமன்; தனிவைகிற் புலம்பாகின்று.
(கருத்து) தலைவனைப் பிரிந்திருத்தல் துன்பத்துக்குக் காரணமாகின்றது.
(வி-ரை.) திரை மீனைப் பெயர்த்தாலும் நாரை அம்மீன் உள்ள இடத்தே சென்று அதனை ஆர்ந்தது போல, தாயர்முதலியோர் இற்செறித்துக் காப்பிடை வைப்பினும் தலைவன் தலைவியிருக்குமிடத்து வந்து கண்டு இன்புறல் வேண்டுமென்பது குறிப்பு.
மரந்தை இயற்கை யழகால் நன்மையையுடையது; ஆயினும் தலைவன் இல்லாத் தனிமையால் புலம்புடையதாயிற்றென்று கூறலும் பொருந்தும். மரந்தை கடற்றுறைப்பட்டினமாதலின் கடலில் நிகழும் நிகழ்ச்சியை அதற்கு அடையாக்கினாள். ஒருதனி - மிக்கதனிமை. தமக்கினிய சுற்றத்தார் சூழவிருப்பினும் தலைவனில் வழித் தனிமைத் துன்பம் தோற்றும்; இது புலம்பித் தோன்றலென்னும் மெய்ப்பாடு (தொல். மெய்ப். 18, பேர்.) புலம்பு - தனிமையால் வரும் வருத்தம்.
ஓ. ஏ: அசை நிலைகள். நன்று - முன்பு நன்றாக இருந்தது; மன் - அதுகழிந்ததே யெனலும் பொருந்தும்.
ஒப்புமைப் பகுதி 1. பறை: குறுந். 125:5, 172:1.
2. நாரை அயிரைமீனை உண்ணுதல்: (குறுந். 128: 1-3, ஒப்பு.); “தடந்தா ணாரை யிரிய வயிரைக், கொழுமீ னார்கைய” (பதிற். 29: 4-5) 3.மரந்தை: குறுந். 34:6, ஒப்பு.4.ஒரு தனி: மணி. 3:31, 4:9, 96, 8:27, 15:76, 16:33, 18:56, 20:94. ஆகின்று: குறுந். 15:4, ஒப்பு: 105:6. 3-4.தலைவரோடு கூடின் ஊர் நன்று, இன்றெனின் நன்றன்று: “இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல், கண்ணுறு விழுமங் கைபோ லுதவி, நம்முறு துயரங் களையாராயினும், இன்னா தன்றே யவரில் லூரே” (நற். 216:2-5); “தமரையில்லார்க்கு, நகரமுங் காடுபோன் றாங்கு” (பழ.3.)
(166)