(பரத்தையிற் பிரிந்த தலைவனுக்குத் தூதாகப் புக்க தோழியைநோக்கி, “தலைவர் உடனுறைந்து அன்பு பாராட்டற்குரிய நிலையினராகஇருந்தும் அயன்மை தோன்ற ஒழுகுகின்றார்; அவர்பால் முன்புபரிவுடையேன்; இப்பொழுது அது நீங்கியது” என்று தலைவி மறுத்துக்கூறியது.)
 203.    
மலையிடை யிட்ட நாட்டரு மல்லர் 
    
மரந்தலை தோன்றா வூரரு மல்லர் 
    
கண்ணிற் காண நண்ணுவழி யிருந்தும் 
    
கடவு ணண்ணிய பாலோர் போல 
5
ஒரீஇ யொழுகு மென்னைக்குப் 
    
பரியலென் மன்யான் பண்டொரு காலே. 

என்பது வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

நெடும்பல்லியத்தன் (பி-ம். நெடும்பல்லியத்தை.)

    (பி-ம்.) 3. ‘யிருந்து’; 4. ‘கடவுணணிய’; 5. ‘வெரீஇயினொழுகு’, ‘ஒரீஇயின னொழுகு’, ‘வெரீஇயின னொழுகு’; 6. ‘பரியலெமன்’, ‘யாம்’.

    (ப-ரை.) தோழி, மலை இடை இட்ட நாட்டரும் அல்லர் -தலைவர் மலைகள் இடையிடுவதனாற் சேயதாகிய நாட்டினருமல்லர்; மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர் - தன்னிடத்துள்ளமரங்கள் நமக்குத் தோன்றாத சேய்மையிலுள்ள ஊரினரும்அல்லர்; கண்ணின் காண - கண்ணாலே காணும்படி, நண்ணுவழி இருந்தும் - விரைவில் வருதற்குரிய அணிமையிடத்திலிருந்தும், கடவுள் நண்ணிய பாலோர் போல - முனிவரைஅணுகி வாழும் பகுதியினரைப்போல, ஒரீஇ ஒழுகும்என்னைக்கு - மனத்தால் நீங்கி ஒழுகுகின்ற என் தலைவர்பொருட்டு, யான்--, பண்டு ஒருகால்-முன்பு ஒரு சமயத்தில்,பரியலென் - பரிதலையுடை யேனாயினேன்; மன்-அஃதுஇப்பொழுது கழிந்ததே!

    (முடிபு) நாட்டரு மல்லர்; ஊரரும் அல்லர்; நண்ணுவழியிருந்தும்ஒரீஇயொழுகும் என்னைக்குப் பண்டொருகால் யான் பரியலென்மன்.

    (கருத்து)இப்பொழுது என்னைப் புறக்கணித் தொழுகும்தலைவர்பால் யான் முன்பு பரிவுடையளாக இருந்தேன்.

    (வி-ரை.) மலையிடை யிட்ட நாட்டரென்றது வேற்று நாட்டாரென்றபடி; மரந்தலை தோன்றா ஊரரென்றது காடிடையிட்ட வேற்றூராரென்றபடி. மலையிடையிட்ட நாட்டினராயின் நினைத்தபோது காண்டற்குஅரிய நிலையினராவர்; வேற்றூராராயின் எப்பொழுதும் காணும்நிலையிலதாகும். கண்ணிற் காண நண்ணுவழி - கண்ணாலே காணுதற்குரிய அணிமை; என்றது கற்பொழுக்கத்திற்றலைப்பட்டு எப்பொழுதும் உடனுறையும் நிலையைக் குறித்தது.

    மரந்தலை - மரம்; தலை: அசைநிலை; ‘கயந்தலை’ போல; “மரந்தலை கரிந்து” (அகநா. 169:1.)

    முனிவரைக் கண்டார் தம் தூய்மையன்மை காரணமாக அஞ்சி விலகி யொழுகும் தன்மையைப் போல என்னிடத்தினின்றும் நீங்கி ஒழுகினா ரென்றாள். இவ்வுவமையால், தனது தூய்மையையும் தலைவனது பரத்தை மையாகிய தூய்மையன்மையையும் குறிப்பாலுணர்த்தினாள். கடவுள் - முனிவர் (மதுரைக். 41, ந.)

    அவர் இங்ஙனம் ஒழுகினும் என்பால் உரிமையுடையாரென்னும்கருத்துப் பற்றி என்னையென்றாள். பண்டென்றது களவுக்காலத்தைச்சுட்டியபடி.

    களவுக் காலத்து மலையிடையிட்டும் காடிடையிட்டும் உள்ள இடத்தி லிருந்து வருந்திவந்து என்னோடு இன்புற்ற அவர், இப்பொழுது என்றும் உடனுறைவதற்கேற்ற நிலையைப் பெற்றும் ஒருவி யொழுகினா ரென்றாள்.

    பண்டொருகால் பரிவையுடையேனென்றது, இப்பொழுது அதனைஒழிந்தேனென்னும் பொருள் பயந்து வாயில்மறுத்ததாயிற்று.

    வாயில் வேண்டிய தோழி, “நீ முன்பு அவர்பால் மிக்க அன்புடையை யாக இருந்தாயன்றே! ஆதலின் உடம்படுக” என்று கூறினாளாதலின், “அவரும் தம் பண்டை நிலையிற் பிறழ்ந்தார்; யானும் பரிவு நீங்கினேன்” என மறுத்தாள்.

    மன்: கழிவிரக்கப் பொருளில் வந்தது.

    மேற்கோளாட்சி 5. தலைமகள் தலைவனை என்னை யென்றது (தொல்.பொருள். 50, இளம்.) 5-6. மேற்படி (தொல். பொருள். 52, ந.)

    ஒப்புமைப் பகுதி 3. மு. பொருந. 76. மு. குறுந். 231.

(203)