(வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவனை நினைந்து ஆற்றாளெனவருந்திய தோழியை நோக்கி, “தலைவர் பிரிந்தவுடன் என் நுதலிற்பசலை தானே பரந்தது” என்று தலைவி கூறியது.)
 205.    
மின்னுச்செய் கருவிய பெயன்மழை தூங்க 
    
விசும்பா டன்னம் பறைநிவந் தாங்குப் 
    
பொலம்படைப் பொலிந்த வெண்டே ரேறிக் 
    
கலங்குகடற் றுவலை யாழி நனைப்ப 
5    
இனிச்சென் றனனே யிடுமணற் சேர்ப்பன் 
    
யாங்கறிந் தன்றுகொ றோழியென் 
    
தேங்கமழ் திருநுத லூர்தரும் பசப்பே.  

என்பது வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்திஉரைத்தது.

உலோச்சன்.

    (பி-ம்.) 1. ‘கருவிப்பெயன் மழை’; 3. ‘வொண்டேரேறிக்’; 4. ‘றிவலை’.

    (ப-ரை.) தோழி-, இடு மணல் சேர்ப்பன் - அலைகள்கொண்டு வந்திட்ட மணலையுடைய கடற்கரையையுடைய தலைவன், மின்னு செய் கருவிய - மின்னலைச் செய்கின்றதொகுதியையுடையனவாகிய, பெயல் மழை தூங்க - பெய்தலையுடைய மேகம் பெய்யாநிற்ப, விசும்பு ஆடு அன்னம் - வானத்தில் அசையும் அன்னப் பறவை, பறை நிவந்தாங்கு - பறத்தலில் உயர்ந்ததைப்போல, பொலம்படை பொலிந்த - பொற்படைகளாற் பொலிவு பெற்ற, வெள் தேர் ஏறி -யானைமருப்பாற் செய்த வெள்ளிய தேரின்கண் ஏறி, கலங்கு கடல் துவலை - கலங்கிய கடலிலுள்ள அலையின் நீர்த்துளிகள், ஆழி நனைப்ப - அத்தேரின் சக்கரங்களை நனைக்க,இனி சென்றனன் - இப்பொழுது என்னைப் பிரிந்து சென்றான்; பசப்பு - பசலையானது, யாங்கு அறிந்தன்று - இதனை எப்படி அறிந்தது? என் தேம் கமழ் திருநுதல் ஊர்தரும் - எனது மணம் கமழ்கின்ற அழகிய நெற்றியிடத்துஅது பரவா நிற்கின்றது.

    (முடிபு) தோழி, சேர்ப்பன் ஏறி நனைப்பச் சென்றனன்; பசப்புயாங்கறிந்தன்று கொல்? நுதலில் ஊர்தரும்.

    (கருத்து) தலைவன் பிரிவினால் யான் பசலை நோயுற்றேன்.

    (வி-ரை.) பறை-பறத்தல்; சிறகுமாம். படை-தட்டு; பக்கத்திலமைத்தபலகைகளுமாம்; “இழையணி நெடுந்தேர்” (புறநா. 123:4) என்பதற்கு, ‘பொற்படைகளால் அணியப்பட்ட உயர்ந்த தேர்’ என்றுள்ள உரையைக்காண்க;

  
“கோடகத் தேர்படு குதிரை தாவிய 
  
 ஆடகத் தட்டிடை”                   (கம்ப. கிளைகண்டு.33) 

என்பதனால் பொன்னாலாகிய தேர்த்தட்டுண்மையை உணரலாகும்.வெண்டேர்: குறுந். 189, வி-ரை.

    இருபுறமும் உள்ள சக்கரங்கள் துவலையால் நனைய வெண்டேர்விரைந்து செல்லுதல் இரண்டு சிறகுகளும் மழைத்துளியால் நனையஅன்னம் விரைந்து போதலைப் போன்றது.

    பொலம்படையென்பதற்குப் பொன்னாலாகிய சேணமென்றுபொருள் கொண்டு அதனைக் குதிரைக்கு அடையாகக் கொள்ளலும்ஒன்று. அது சினைக்கும் முதலுக்கும் உள்ள ஒப்புமையால் வெண்டேரொடு முடிந்தது. “பொலம்படைப் பொலிந்த கொய்சுவற் புரவி” (மலைபடு. 574) என வருதல் காண்க.

    விசும்பாடன்னத்தைக் குதிரைக்கு உவமை கூறுவதன் பொருத்தம்,“விசும்புசெ லிவுளி” (பெரும்பாண்.492) என்பதனாலும் வலியுறும்.

    தேம் - மணம்; இனிமையுமாம். தேங்கமழ் திருநுதலென்றது,‘அத்தகைய அழகிய நுதலின் இயல்பு இப்பொழுது அழிந்ததே!’ எனக்கழிந்ததற்கு இரங்கியதாதலின் தற்புகழ்ச்சி யன்று. நுதல் இயற்கை மணமுடையது. கொல்: ஐயம்.

    தலைவன் பிரிந்தவுடன் பசலை பரந்ததென்றாள்; குறுந். 399,

    ஊர்தரும் பசப்பு யாங்கறிந்தன்றுகொலென எச்சமாக்கி முடித்தலும்ஒன்று. ‘அவர் பிரிவை யறிந்து யான் துன்புறுவதற்கு முன்பு இப்பசலைஅதனை எங்ஙனம் அறிந்தது!’ என வியப்புத் தோன்றக் கூறினாள்.

    மேற்கோளாட்சி மு. களவு அலராகாமல் யான் பிரிந்துழித் தலைவி கலங்குவ ளென்றஞ்சித் தலைவன் பிரியாது உறைதலின் பிரிவைக் கருதப்பெறாததலைவி அவ்வாறன்றிப் பிரிந்துழிக் கலங்கியது (தொல். களவு. 20, ந.)

    ஒப்புமைப் பகுதி 1. கருவி மழை: குறுந். 42:2, ஒப்பு.

    2. பறைநிவத்தல்: “துனைபறை நிவக்கும் புள்ளினம்” (மலைபடு.55.)

    3. பொலம்படைப் பொலிந்த குதிரை: புறநா. 116:19, 359:14,பு.வெ.276.

    2-3. குதிரையின் வேகத்திற்கு அன்னம்: மதுரைக். 385-7, அடிக்.

    5. இனி: குறுந். 84:2, ஒப்பு. 6. யாங்கறிந்தன்று: குறுந். 140:5.

    7. நறுநுதல்: குறுந். 22:5, ஒப்பு. நுதல் பசத்தல்: குறுந். 87:4,ஒப்பு.

    5-7. தலைவன் பிரிவினாற் பசலை தோன்றல்: குறள், 1185-6.

(205)