(தலைவனது குறையைத் தலைவி நயக்கும்படி, “தலைவனது தேர்வந்து வறிதே பெயர்வதாயிற்று; அவன் விருப்பம் கழிந்தது. அது கருதிவருந்துகின்றேன்” என்று தோழி கூறியது.)
     212.    
கொண்க னூர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர் 
    
தெண்கட லடைகரைத் தெளிமணி யொலிப்பக் 
    
காண வந்து நாணப் பெயரும் 
    
அளிதோ தானே காமம் 
5
விளிவது மன்ற நோகோ யானே. 

என்பது குறைநேர்ந்த தோழி குறைநயப்பக் கூறியது.

    (குறை நேர்ந்த - தலைவனது குறையை நிறைவேற்று வதற்குஉடம்பட்ட, குறை நயப்ப - தலைவனது குறையைத் தீர்த்தலைத்தலைவி நயக்கும் வண்ணம்.)

நெய்தற் கார்க்கியன்.

    (பி-ம்.) 1. ‘கொடிஞ்சி’, ‘கொடுஞ்சினை’; 2. ‘தெளிர்மணி’; 3. ‘கானல்வந்து’.

    (ப-ரை.) கொண்கன் ஊர்ந்த - தலைவன் ஏறிச் சென்ற,கொடுஞ்சி நெடு தேர் - கொடுஞ்சியை உடைய உயர்ந்ததேரானது, தெள் கடல் அடை கரை - தெள்ளிய நீரைஉடைய கடலை அடைந்த கரைக்கண், தெளி மணி ஒலிப்ப - தெளிந்த ஓசையை உடைய மணிகள் ஒலிக்கும்படி, காண வந்து நாண - நாம் காணும்படி வந்து பின்பு நாம் நாணும்படி,பெயரும் - மீண்டு செல்லா நிற்கும்; காமம்--, அளிது -இரங்கத் தக்கது; மன்ற விளிவது - நிச்சயமாக அழியக்கடவதாகும்; யான் நோகு - இவை கருதி யான் வருந்துவேன்.

    (முடிபு) கொண்கன் ஊர்ந்த தேர் வந்து பெயரும்; காமம் அளிது;அது விளிவது; யான் நோகு.

    (கருத்து) தலைவன் குறை பெறாமல் வருந்திச் சென்றான்.

    (வி-ரை.) கொண்கன் - நெய்தல் நிலத் தலைவன் (குறுந். 230:1,299:4); தமிழ் நெறி விளக்கம், 8-ஆம் சூத்திரம் பாரக்க.

    கொடுஞ்சி - தாமரை மொட்டின் வடிவமாகச் செய்து தேர்முன்நடப்படுவது; தேரூரும் தலைவர் இதனைக் கையால் பற்றிக் கொள்வதுவழக்கம்; “மணித்தேர்க் கொடுஞ்சி கையாற் பற்றி” (மணி. 4:48.) தம்பால்நயந்து வந்தோரது குறையைப் போக்குதல் அறநெறியாளர் கடனாதலின்,அதனைச் செய்யாமையால் வறிதே தலைவன் மீண்டது நாணத்தைத்தருவதாயிற்று; “இன்னா திரக்கப் படுத லிரந்தவர், இன்முகங் காணுமளவு” (குறள், 224); “இன்மை யுரைத்தார்க் கதுநிறைக்க லாற்றாக்கால்,தன்மெய் துறப்பான் மலை” (கலி. 43:26-7) என்பவற்றை ஓர்க.

    ‘நாம் காண வந்தானாயினும் நீ கண்டு குறைநயந்தா யில்லை’என்பது குறிப்பு. காமம் - தலைவனது காமம். தலைவன் நிலைக்குஇரங்கி, ‘யான் வருந்துவேன்” என்றாள். தலைவிக்கும் இரக்கம் உண்டாகிக் குறை நயத்தற் பொருட்டு.

    ஓகாரங்கள், ஏகாரங்கள், தான்: அசை நிலைகள்.

    கருப் பொருளால் இப்பாட்டு நெய்தற்குரியதாயிற்று; இங்ஙனமேநெய்தல் திணைக்குரிய பல செய்யுட்களைப் பாடிய காரணத்தால் இச்செய்யுளை இயற்றிய நல்லிசைப் புலவர், நெய்தல் கார்க்கியன் என்னும்சிறப்புப் பெற்றார் போலும்.

    ஒப்புமைப் பகுதி 1. கொண்கன்: குறுந். 229:4, 230:1. கொடுஞ்சி நெடுந்தேர்: குறுந். 345:1; பொருந. 163; பெரும்பாண். 416: மதுரைக். 752.

    1-3. தேர்மணி ஒலிப்பத் தலைவன் வருதல்: குறுந். 336: 3-4.

    4. அளிதோதானே: குறுந். 149:1, 395:7; புறநா. 109:2, 111:1.

    5. நோகோ யானே: குறுந். 131:6, ஒப்பு.

(212)