(தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றாள் எனக் கவன்ற தோழியை நோக்கி, “தலைவன் என்னை மணந்த பின் என் நலன் இழந்தேன்” என்று தலைவி வருந்திக் கூறியது.)
 226.   
பூவொடு புரையுங் கண்ணும் வேயென 
    
விறல்வனப் பெய்திய தோளும் பிறையென 
    
மதிமயக் குறூஉ நுதலு நன்றும் 
    
நல்லமன் வாழி தோழி யல்கலும் 
5
தயங்குதிரை பொருத தாழை வெண்பூக் 
    
குருகென மலரும் பெருந்துறை் 
    
விரிநீர்ச் சேர்ப்பனொடு நகாஅ வூங்கே,் 

என்பது வரைவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்திஉரைத்தது.

மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதன்.

     (ப-ரை.) தோழி--, அல்கலும் - இரவுதோறும், தயங்குதிரை பொருத - விளங்கிய அலைகளால் மோதப்பட்ட,தாழை வெண் பூ - தாழையினது வெள்ளிய பூ, குருகு எனமலரும் - நாரையைப் போல மலர்தலைச் செய்வதற்குஇடமாகிய, பெருதுறை விரிநீர் சேர்ப்பனொடு - பெரியதுறைகளை உடைய அகன்ற நீர்ப்பரப்பை உடையசேர்ப்பனோடு, நகா ஊங்கு - நகுவதற்கு முன்பு, பூவொடுபுரையும் கண்ணும் - தாமரை மலரை ஒத்த கண்களும்,வேய் என விறல் வனப்பு எய்திய தோளும் - மூங்கிலைப்போல வெற்றியை உடைய அழகைப் பெற்ற தோள்களும்,பிறை என மதி மயக்குறூஉம் நுதலும் - பிறை என்றுகருதும்படி அறிவை மயங்கச் செய்யும் நெற்றியும், நன்றும்நல்ல - மிகவும் நல்லனவாக இருந்தன; மன் - அந்நிலைஇப்பொழுது கழிந்தது!

     (முடிபு)தோழி, சேர்ப்பனொடு நகாஅவூங்கு, கண்ணும் தோளும்நுதலும் நல்லமன்!

     (கருத்து) தலைவனது பிரிவினால் என் மேனி நலம் அழிந்தது.

     (வி-ரை.) பூவொடு: உருபு மயக்கம். விறல் வனப்பு - பிறர் தோள்வனப்போடு ஒப்பு நோக்குங்கால் தான் யாவற்றினும் விஞ்சி வெற்றி பெறும் வனப்பு.

   
“ஒண்ணுதற் கோஒ வுடைந்ததே ஞாட்பினுள் 
   
 நண்ணாரு முட்குமென் பீடு”              (குறள், 1088.)  

என்பதனால் நுதல் மதியை மயக்குதல் பெறப்படும். தம் உறுப்புக்களைப்புகழ்ந்தது தற்புகழ்ச்சியாகாது, கழிந்ததற்கு இரங்கினமையின். தலைவன்மயங்கிய படியை அவன் தனது நலம் பாராட்டிய வழிக் கூறக் கேட்டுஉணர்ந்தவளாதலின் நுதல் மதி மயக்கும் என்று கூறினாள்.

    வாழி: அசை நிலை. தாழை வெண்பூ என்றாள் செந்தாழையைவிலக்குதற்கு.

    நகுதல் - அளவளாவுதல்; இஃது இடக்கரடக்கிக் கூறியது. ஏகாரம்ஈற்றசை.

    ஒப்புமைப் பகுதி 1. கண்ணிற்குப் பூ: குறுந். 72:1-5, ஒப்பு. 101:4,ஒப்பு.

    2. விறல் வனப்பு: “விறனலன்” (கலி. 3:5, 124:15.)

    1-2. தோளுக்கு வேய்: குறுந். 268:6,ஒப்பு.

    3. மதிமயக்குறூஉம் நுதல்: “மதிமருட்டுஞ் சிறுநுதல்” (யா.கா.4.)

    2-4. நுதலுக்குப் பிறை: குறுந். 129:3-5; நற். 250:7; 263:1;பெருங். 1. 36:265, 4. 11:68, 5. 6:11; சீவக. 165.

    4. நல்லமன்: குறுந். 357: 4.வாழி தோழி; குறுந். 260:4.

    1-4. கண், தோள், நுதல் பழைய அழகு கெடுதல்: “தோளேதொடிகொட் பானா கண்ணே, வாளீர் வடியின் வடிவிழந் தனவே, நுதலும் பசலைபா யின்று” (நற். 133:1-3.)

    5. தாழை திரையால் அலைக்கப்படுதல்: குறுந். 163:4.

    5-6. தாழைப் பூவிற்குக் குருகு: குறுந். 228:1-2; “நெய்தற் குருகுதன் பிள்ளையென் றெண்ணி நெருங்கிச் சென்று, கைதை மடற்புல்குதென்கழிப் பாலை யதினுறைவாய்” (தே.திருநா.); “அருகு கைதைமலரக்கெண்டை, குருகென் றஞ்சுங் கூடலூரே” (திவ். பெரிய. 5.2:9.)“தாழை குருகீனும்” (தொல். பொருள்.290, மேற்.)

     7. தலைவனொடு நகுதல்: குறுந். 169:3, 320:5, 381:7, 394:7; மதுரைக். 420; நற். 135:9, 187:10, 299:9.

    மு.குறுந். 357.

(226)