(தலைவன் கூறிச் சென்ற கார்காலம் வந்த பொழுது தலைவி வருந்த, "இது கார்காலமன்று; இப்பொழுது பெய்வது காலம் அல்லாத காலத்துப் பெய்யும் மழை" என்று தோழி வற்புறுத்திக் கூறி ஆற்று வித்தது.)
 251.   
மடவ வாழி மஞ்ஞை மாயினம் 
    
கால மாரி பெய்தென வதனெதிர் 
    
ஆலலு மாலின பிடவும் பூத்தன 
    
காரன் றிகுளை தீர்கநின் படரே 
5
கழிந்த மாரிக் கொழிந்த பழநீர் 
    
புதுநீர் கொளீஇய வுகுத்தரும் 
    
நொதுமல் வானத்து முழங்குகுரல் கேட்டே. 

என்பது பிரிவிடைத் தோழி, "பருவமன்று; பட்டது வம்பு" என்று வற்புறுத்தியது (பி-ம். வற்புறுத்தது.)

    (வம்பு - காலம் அல்லாத காலத்துப் பெய்யும் மழை.)

இடைக்காடன்.

    (பி-ம்.) 1. ‘மடவரல்வாழி’, ‘யாயினம்’; 2. ‘காலைமாரி’; 3. ‘ஆலுமாலின’;7. ‘நொதுமலர்’.

    (ப-ரை.) இகுளை - தோழி, கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர் - சென்ற கார்காலத்தில் பெய்யாது எஞ்சி இருந்த பழைய நீரை, புது நீர் கொளீஇய - புதிய நீரைக் கொள்ளும் பொருட்டு, உகுத்தரும் - சொரிகின்ற, நொதுமல் வானத்து -அயன்மையை உடைய மேகத்தினது, முழங்கு குரல் கேட்டு - ஒலிக்கின்ற ஓசையைக் கேட்டு, மஞ்ஞை மா இனம் - மயில்களாகிய கரிய கூட்டங்கள், காலம் மாரி பெய்தென -பருவத்துக்குரிய மழை பெய்தது என்று தவறாக எண்ணி, அதன் எதிர் - அம் மழைக்கு எதிரே, ஆலலும் ஆலின - ஆடுதலைச் செய்தன; பிடவும் பூத்தன - பிடாவும் மலர்ந்தன;மடவ - அவை அறியாமையை உடையன; கார் அன்று -இது கார்காலம் அன்று; ஆதலின்; நின் படர் தீர்க - நின் துன்பத்தை விடுவாயாக.

    (முடிபு) இகுளை, கேட்டு மஞ்ஞையினம் ஆலின; பிடவும் பூத்தன;மடவ; காரன்று; நின் படர் தீர்க.

    (கருத்து) இது கார்காலம் அன்று.

    (வி-ரை.) தலைவன் கார் காலத்தில் மீள்வதாகக் கூறிச் சென்றான். அக் காலம் வந்தும் அவன் வாராமையின் தலைவி துயர் கூர்ந்தாள். அது கண்ட தோழி, "இஃது அவர் கூறிச் சென்ற கார்ப்பருவம் அன்று"என்றாள். "மழை பெய்கின்றது; மயில் ஆடுகின்றது; பிடா மலர்கின்றது.இவை கார்ப் பருவத்திற்கு உரியன அல்லவோ?" என்று வினாவிய தலைவிக்குத் தோழி கூறியது இது.

    மடவ: இந்நூல், 66, வி-ரை பார்க்க. வாழி: அசை நிலை.

    மாயினம் - கரிய திரள்; "மாயிருஞ் சோலை" (குறுந். 232:6) என்புழிப் போல யகரம் பெற்றது. காலமாரி என்றது கார்காலத்து மழையை.பிடா கார்காலத்தில் மலர்வது.

    ஒழிந்த - பெய்யாது எஞ்சிய. நொதுமல்வானம் என்றாள், தலைவிதுன்புறுவாள் என்பதை அறியாது முழங்குதலின்;

   
"என்னெனப் படுங்கொ றோழி மின்னுபு  
   
 வானேர் பிரங்கு மொன்றோ வதனெதிர் 
   
 கான மஞ்ஞை கடிய வேங்கும்  
   
 ஏதில கலந்த விரண்டற்கென் 
   
 பேதை நெஞ்சம் பெருமலக் குறுமே"          (குறுந். 164)  

என முன் வந்துள்ளது காண்க.

   
"பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த  
   
 நன்மை பயக்கு மெனின்"                       (குறள். 292)  

என்பது பற்றித் தோழி கார்காலம் வரவும் அன்றென்று கூறினாள்.

    மேற்கோளாட்சி மு. இகுளை வம்பென்றது (நம்பி. 170.)

    ஒப்புமைப் பகுதி 1. மடவ: நற். 316:1. மஞ்ஞையினம் மடவ:குறுந். 391.

    2. காலமாரி: குறுந். 200:5, 3. ஆலலும் ஆலின: குறுந். 37:1; "மோக்கலு மோந்தனன்", "மருட்டலு மருட்டினன்", "தொழலுந்தொழுதான் றொடலுந் தொட்டான்" (கலி. 54:8-14, 55:19.) பிடவு கார்காலத்தில் மலர்தல்: "சேணாறு பிடவமொடு" (முல்லைப், 25); "பூவலர் குரவோடும் புடைதவழ் பிடவீனும், மாவலர் சொரிசூழல்" (கம்ப. வனம்புகு.7.)

    1-3. மயில் வம்பமழையைக் கண்டு ஆலுதல்: "பொய்யிடி யதிர்குரல் வாய்செத் தாலும், இனமயின் மடக்கணம் போல, நினைமருள் வேனோ வாழியர் மழையே" (நற். 248:7-9.) மஞ்ஞையும் பிடவும் மடவ:" பிடவங் குருந்தொடு பிண்டி மலர, மடவ மயில்கூவ" (கைந்நிலை, 36.)

    5. பழநீர்:குறுந். 220:1, 261:1. மு.குறுந். 66; நற். 99.

(251)