(தலைவன் சிறைப்புறத்தே இருப்ப, இரவுக் குறியின்கண் உண்டாகும் ஏதத்துக்கு அஞ்சுதலையும், தலைவனது வருகையின் இன்றியமையாமையையும் தோழி தலைவிக்குக் கூறி, வரைந்து கோடலே தக்கதெனப் புலப்படுத்தியது.)
 268.   
சேறி ரோவெனச் செப்பலு மாற்றாம்  
    
வருவி ரோவென வினவலும் வினவாம் 
    
யாங்குச்செய் வாங்கொ றோழி பாம்பின் 
    
பையுடை யிருந்தலை துமிக்கு மேற்றொடு 
5
நடுநா ளென்னார் வந்து 
    
நெடுமென் பணைத்தோ ளடைந்திசி னோரே. 

என்பது தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குத் தோழி சொல்லியது.

கருவூர்ச் சேரமான் சாத்தன் (பி-ம். கருவூர்ச் சேரமான் சிரத்தன்.)

    (பி-ம்.) 2. ‘மருவிரோ’; 4. ‘மேறொடு.’

    (ப-ரை.) தோழி , பாம்பின் பையுடை இரு தலை - பாம்புகளின் படத்தை உடைய பெரிய தலையை, துமிக்கும் - துணிக்கும், ஏற்றொடு - இடியொடு கூடிய, நடுநாள் - பாதியிரவு, என்னார் - என்று எண்ணாராகி, வந்து - ஈண்டுப் போந்து. நெடு மெல்பணை தோள் - நெடிய மெல்லிய மூங்கிலைப் போன்ற நின் தோள்களை, அடைந்திசினோர் - அடைந்த தலைவர் பால், சேறிரோ என - செல்கின்றீரோ என்று, செப்பலும் ஆற்றாம் - செப்புதற்கும் வன்மை இல்லே மாயினேம்; வருவிரோ என - சென்றால் மீண்டும் வருவிரோ என்று, வினவலும் வினவாம் - கேட்டலையும் செய்யோம; யாங்கு செய்வாம் - எவ்வாறு செய்வேம்!

    (முடிபு) தோழி, வந்து அடைந்திசினோர்பால், சேறிரோவெனச் செப்பலு மாற்றாம்; வினவாம்; யாங்குச் செய்வாம்!

    (கருத்து) தலைவர் வரைந்து கொள்ளுதலே நலம்.

    (வி-ரை.) தலைவனுடன் இடையீடின்றி இருத்தலை விரும்புபவ ராதலின் சேறிரோ எனச் செப்பும் ஆற்றல் இலராயினர். இடி முதலிய ஆற்றூறுகளை அஞ்சுபவராதலின் வருவிரோவென வினவ அஞ்சினர்.

    தலைவனது வரவினால் இன்பம் உண்டாயினும் ஆற்றில் நிகழும் ஏதம் நினைந்து அச்சமும், அவன் வாராமையின் அவ்வச்ச மின்றெனினும் அவனைக் காணாத் துன்பமும் உண்டாதலின் ‘யாங்குச் செய்வாம்!’ என மயங்கினாள். இடையீடின்றி உடன் உறைவதற்குரிய இல்லற நிலையே தக்கதென்றும், அதன் பொருட்டுத் தலைவன் வரைந்து கொள்ள வேண்டும் என்றும் உய்த்துணர வைத்தாள்.

    அடைந்திசினோர்: வினைமுற்றாகிக் பொருள் கொள்ளுதலும் பொருந்தும். கொல், ஏ: அசை நிலைகள்.

    ஒப்புமைப் பகுதி 2. வினவலும் வினவாம்: குறுந். 37:1, ஒப்பு.

    3. யாங்குச் செய்வாம்: குறுந். 217:3, ஒப்பு.

    3-4. இடி பாம்பை எறிதல்: குறுந். 158:1-2, ஒப்பு.

    5. தலைவன் நடுநாளில் வருதல்: குறுந். 88:4.

    6. பணைத்தோள்: குறுந். 131:1, 279:8, 315:4, 318:6, 326:1, 364:5.

    தோளுக்கு மூங்கில்: குறுந். 226:1-2. நெடுந்தோள்: குறுந். 163:5. மென்றோள்: குறுந். 90:7.

(268)