(தலைவன் வரை பொருளுக்காகப் பிரிந்த காலத்தில், அவன் விரைந்து வாராமைபற்றிக் கவலையுற்ற தோழியை நோக்கி. “என் துன்பத்தை அறியாமல் துயில்கின்ற இவ்வூரின்றிறத்து யான் யாது செய்வேன்?” என்று தலைவி சினந்து கூறியது).
 28.    
முட்டு வேன்கொ றாக்கு வேன்கொல்
    
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்  
    
டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல் 
    
அலமர லசைவளி யலைப்பவென் 
5
உயவுநோ யறியாது துஞ்சு மூர்க்கே. 

என்பது வரைவிடை யாற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

ஒளவையார்.

    (பி-ம்.) 1. ‘மூட்டுவேன்கொல்’ 2. ‘ஓரே யானும்’

    (ப-ரை.) அலமரல - சுழலுதலை உடைய, அசை வளி - அசைந்து வருகின்ற தென்றல் காற்று, அலைப்ப - வருத்தா நிற்க, என் உயவு நோய் அறியாது - எனது வருந்துதலை உடைய காம நோயை உணர்ந்து கொள்ளாமல், துஞ்சும் ஊர்க்கு - கவலையின்றித் தூங்கும் ஊரில் உள்ளாரை, யான், முட்டுவேன் கொல் - முட்டுவேனோ? தாக்குவேன் கொல் - தாக்குவேனோ? ஓர் பெற்றி மேலிட்டு - ஒரு தலைக்கீட்டை மேற்கொண்டு, ஆஅ ஒல்லென - ஆவென்றும் ஒல்லென்றும் ஒலி உண்டாக, கூவுவேன் கொல் - கூப்பிடுவேனோ? ஓரேன் - இன்னது செய்வது என்பதை அறியேன்.

    (முடிபு) ஊரை முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்? கூவுவேன் கொல்? ஓரேன்.

    (கருத்து) என்னுடைய நோயைத் தாயர் முதலியோர் அறியாமையின் யான் ஆற்றேன் ஆயினேன்.

    (வி-ரை.) முட்டுதல் உடம்பாற்றீண்டுதல் என்றும், தாக்குதல் கோல் முதலிய கருவிகளால் தீண்டுதல் என்றும் கொள்க; முட்டுதல் - எதிர்த்தலுமாம் (தொல். களவு.21.) ஓர் பெற்றி மேலிட்டுக் கூவுதலாவது, ‘பாம்பு, பாம்பு’ என்றேனும், ‘திருடன் திருடன்’ என்றேனும் பிரிவாறேனும் கூவுதல். இங்ஙனம் கூவுதலால் ஊரார் எழுந்து அலர் தூற்றுவர்; அவ்வலர் தலைவன் தன்னை வரைந்து கொள்வதை விரைவில் கூட்டும் உபாயமாதலின் தலைவிக்கு இன்பம் பயக்கும்; “அலரெழ வாருயிர் நிற்கும்” (குறள், 1141.) உயவு: உயாவென்பதன் திரிபு; “உயாவே யுயங்கல்” (தொல்.உரி.71) உயவு நோய்: வருத்தத்தை உடைய காம நோய் (கலி. 35:22, ந.) நோய் அறியாது துஞ்சும் என்றமையால் தலைவி துஞ்சாமை பெறப்படும். ஊர்க்கு - ஊரை; உருபு மயக்கம்; “உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்” (சிலப். பதி. 56).

     ஊர்க்கு - ஊரினர்பொருட்டு, முட்டுவேன்கொல் - சுவர் முதலியவற்றில் முட்டிக் கொள்வேனோ? தாக்குவேன்கொல் - தாக்கிக் கொள்வேனோ என்று பொருள் கூறலும் ஆம்.

    ஒப்புமைப் பகுதி 3. ஆஅ: “ஆஅ வளிய வலவன்றன் பார்ப்பினொடு” (பழம் பாடல்): “ஆவம்மா வம்மாவென் னம்மா வகன்றனையே” (சீவக. 1804.)

    அசைவளி: குறுந். 273:2; கலி . 126:12.

    4. அசைவளி அலைத்தல்: “தைவர லசைவளி மெய்பாய்ந் துறுதரச், செய்வுறு பாவை யன்னவென், மெய்பிறி தாகுதல்” (குறுந். 195:5-7.)

    5. உயவு நோய்: கலி.35:22, 58:7, 113:3. துஞ்சும் ஊர்: குறுந். 302:7. தலைவி துஞ்சாமை: குறுந். 6:4, ஒப்பு.

(28)