(தலைவன் பிரிந்தவிடத்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறுத்தினாளாக அவளை நோக்கி, "தலைவர் கொடிய பாலை நிலத்தைக்கடந்தனரோ என்னும் வருத்தத்தால் ஆற்றேனாயினேன்" என்று தலைவி கூறியது.)
 281.   
வெண்மணற் பொதுளிய பைங்காற் கருக்கின்  
    
கொம்மைப் போந்தைக் குடுமி வெண்டோட் 
    
டத்த வேம்பி னமலை வான்பூச் 
    
சுரியா ருளைத்தலை பொலியச் சூடிக் 
5
குன்றுதலை மணந்த கானம் 
    
சென்றனர் கொல்லோ சேயிழை நமரே. 
    

என்பது பிரிவிடை வேறுபட்டாளைக் கண்டு வற்புறுப்பாட்குக் தோழிகிழத்தி உரைத்தது.

குடவாயிற் கீரத்தன்.

     (பி-ம்.) 2-3. ‘வெண்டோ டத்த’.

     (ப-ரை.) செ இழை - சிவந்த பொன் அணியை உடையாய், நமர் - நம் தலைவர், வெள் மணல் பொதுளிய - வெள்ளிய மணலின் கண்ணே தழைத்த, பசு கால் கருக்கின் - பசிய அடியையும் கருக்கையும், கொம்மை போந்தை - திரட்சி யையும் உடைய பனையினது, குடுமி வெள் தோடு - உச்சியில் உள்ள வெள்ளிய குருத்தோலையின் கண் வைத்த, அத்த வேம்பின் - பாலை நிலத்தில் உள்ள வேப்ப மரத்தினது, அமலை வான் பூ - நெருக்கத்தை உடைய வெள்ளிய மலரை, சுரி ஆர் உளைதலை பொலிய சூடி - சுழித்தல் ஆர்ந்த மயிரை உடைய தலை விளங்கும்படி அணிந்து கொண்டு, குன்றுதலை மணந்த கானம் - மலைகளோடு சேர்ந்த காட்டை, சென்றனர் கொல் - கடந்து சென்றனரோ?

     (முடிபு) சேயிழை, நமர் கானம் சென்றனர் கொல்?

     (கருத்து) தலைவர் பாலையைக் கடந்து சென்றனரோ? இலரோ?

     (வி-ரை.) குடுமி - உச்சி. உச்சியில் உள்ளதென்றும் வெண்ணிறம்உடையது என்றும் சிறப்பித்தமையால் தோடு, குருத்தோலை ஆயிற்று. வேம்பு பாலை நிலத்திற்கு உரியது. வேம்பின் பூவைக் கூறினமையின்தலைவன் பிரிந்த பருவம் இளவேனில் என்பது பெறப்படும் (குறுந். 24.)

  
"அவரோ வாரார் தான்வந் தன்றே  
  
 வேம்பி னொண்பூ வுறைப்பத்  
  
 தேம்படு கிளவியவர் தெளிக்கும் பொழுதே" (ஐங். 50)  

என்னும் இளவேனிற் பத்துச் செய்யுளைக் காண்க.

     மலரைப் பனந்தோட்டில் வைத்துக் கட்டி அணிந்து கொள்ளல் மரபு. சுரி - சுருள். தலை மணந்த: தலை, அசை நிலை; இடமுமாம். குன்று தலைமணந்த கானம் என்றது குறிஞ்சியும் முல்லையும் கலந்து இயல்பு திரிந்த பாலை நிலம் என்றபடி.

    கொல்; ஐயம், ஓ, ஏ: அசை நிலைகள்.

     ஒப்புமைப் பகுதி 1-2. மணல் சூழ்ந்த பனை: குறுந். 372:1-2.


     3-4. வேப்பம் பூவை ஆடவர் அணிதல்: பெரும்பாண். 59-61.

     1-4. பூக்களைப் பனந்தோட்டுடன் வைத்துச் சூடுதல்: "போர்படுமள்ளர் போந்தொடு தொடுத்த, கடவுள் வாகைத் துய்வீ", "நாறிணர்க்கொன்றை வெண்போழ்க் கண்ணியர்" (பதிற். 66:14-5, 67:13); "வட்கர்போகிய வளரிளம் போந்தை, உச்சிக் கொண்ட வூசி வெண்டோடு,வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச், சுரியிரும் பித்தை பொலியச்சூடி", "ஓங்குநிலை வேங்கை யொள்ளிணர் நறுவீப், போந்தையந் தோட்டிற் புனைந்தனர் தொடுத்து" (புறநா. 100:3-6, 265:3-4); "வட்கர்போகிய வான்பனந் தோட்டுடன், புட்கைச் சேனை பொலியச் சூட்டி .... .,... .... .... வஞ்சி சூடுதும்" (சிலப். 25:146-9.)

(281)