(முடிபு) நாடன் அறவனாயினும், அல்லனாயினும், இச்சிறு குடியோர் நம் ஏசுவரோ? தம் இலர் கொல்லோ?
(கருத்து) தலைவன் செயல் பற்றி நம்மை ஏசுவோர் அறிவில்லாதவர்.
(வி-ரை.) தலைவன் வரைபொருட்குப் பிரிந்த காலத்தில் தலைவி,"தலைவன் கூறிய காலத்தில் வந்து மணப்பானோ? அல்லனோ? அங்ஙனம் மணவாவிடின் இவ்வூரினர் நம்மைப் பெரிதும் ஏசுவரே" என்று கவன்றனள்; அது கண்ட தோழி, " தலைவன் நல்லனாயினும் அல்லனாயினும் நம்மை ஏசுவதால் மட்டும் பயன் இல்லை; அறிவில்லாரே அங்ஙனம் செய்வர்" என்றாள்.
தமக்கு என்று ஒரு பயனை யிலரோ வெனலும் ஆம்; தம்குடித் தலைமகளுக்கு வரும் நன்மையைக் கண்டு உவத்தலும் அவளுக்கு வரும் தீமையைக் கண்டு துன்புறுதலும் குடியோர் கடமையாதலின் அவருக்கும்தலைவன் தொடர்பினால் பயனுண்மையைக் கூறினாள்.
பொருதமையினால் உண்டான புண்ணும், இயல்பாக உள்ளபுள்ளியும் காந்தள் மலரின் தோற்றத்தைத் தந்தன. துறு கல்லுக்கு யானை உவமை.
அறவன் - நல்லன் எனலும் பொருந்தும். தம் இலர் கொல் - தம்மை ஏசுதல் இலரோ என்பதும் அமையும்.
‘அறவனாயினும் - தான் வரைவொடு வருதலை ஏற்றுக் கொண்டால் தலைவன் அறநெறி வழி வரைந்து கொள்ளினும், அல்லனாயினும் - அங்ஙனம் ஏற்றுக் கொள்ளாரேல் மன வலி மிக்கு நின்னை உடன்அழைத்துச் சென்றானேனும்' என்று உரைத்தலும் ஆம். இக் கருத்தை, தலைவனைச் சுற்றத்தார் ஏற்றுக் கொள்வாரோ எனக் கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்ததாகக் கொள்க.
கொன்: இலைக்கு அடையாக்கி எலி, அணில் முதலியவற்றிற்கு அச்சத்தைத் தரும் ஈத்திலை என்று பொருள் உரைப்பினும் இயையும்;
| "வரிப்புற வணிலொடு கருப்பை யாடா |
| தியாற்றறல் புரையும் வெரிநுடைக் கொழுமடல் |
| வேற்றலை யன்ன வைந்நுதி நெடுந்தகர் |
| ஈத்திலை வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை" (பெரும்பாண். 85-8) |
என்பது காண்க.
குரம்பை - சிறு குடில். இன்னாமை தலைவி திறத்தமைந்தது. இன்னாது: வினையெச்சம்: "இன்னா துறைவி", "இன்னா துயங்கும்"(அகநா. 164:10;270:14.)
ஒப்புமைப் பகுதி 1-3. மலருக்கு யானையின் முகப்புண்: கலி. 48:1-6.
காந்தள் மலருக்கு யானையின் முகத்துவரி: "நிரைத்த யானை முகத்துவரி கடுப்பப், போதுபொதி யுடைந்த வொண்செங் காந்தள்" (நற். 176:5-6.) துறுகல்லிற்கு யானை: குறுந். 13:1-2, ஒப்பு.
4. அறவன், அல்லன்: புறநா. 44:11-3, 390:1-2.
7. இலைக்குரம்பை: பெரும்பாண். 88; மதுரைக். 310.
8. சிறுகுடி: குறுந். 184:2, ஒப்பு.
(பி-ம்.) 6. வாள்வெள்ளருவி: ஐங். 314:3, கலி. 42:11.
(284)