(முடிபு) தோழி, மலையிறந்தோர் வைகவும் வாரார்; எல்லைஎல்லையும் தோன்றார்; யாண்டுளர் கொல்? இவர் சொல்லிய பருவமோ இதுவே.
(கருத்து) தாம் கூறிச் சென்ற பருவம் வந்த பின்பும் தலைவர் வந்திலர்.
(வி-ரை.) தலைவன் கூறிச் சென்ற பருவம் வந்து விட்டதை அறிந்து தலைவி கவன்று வேறுபட்டாள். அப்பொழுது தோழி, "தலைவர் விரைவில் வருவர்; நீ ஆற்றியிரு" என்று வற்புறுத்தினாள். அது கேட்ட தலைவி "ஒவ்வொரு நாளும் பகலிலும் இரவிலும் அவர் வரவை எதிர்பார்த்து நிற்கின்றேன். இரவில், விடிந்தால் வருவர் என்று எண்ணுவேன்; ஆயினும் விடிந்த பின் அவர் வந்திலர்; அது கண்டு பகல் கழிந்தால் தோன்றுவர் என எண்ணுவேன்; அப்பொழுதும் வந்திலர். அவர் கூறிய பருவம் இஃது என்பதிலோ ஐயமில்லை" என்று கூறினாள்.
நெஞ்சிற்கு அணியராதலின் இவர் என்றாள். ஆண் புறா, பெண் புறாவின் அருகிருந்து அழைத்து இன்புறுதலைத் தலைவரும் கண்டிருத்தல் கூடும் என்பதும் அக் காலத்தும் தன்னை நினைந்து மீண்டிலரே என்பதும் தலைவியின் எண்ணம்.
ஒப்புமைப் பகுதி 1. வைகல் வைகல் வைகுதல்: "வைகலும் வைகல் வரக் கண்டு மஃதுணரார், வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்" (நாலடி. 39.)
3. யாண்டுளர் கொல்லோ: குறுந். 176:5, ஒப்பு.
5. ஆண் புறா பெண் புறாவைப் பயிர்தல்: குறுந். 79:4.
8. வானுயர் பிறங்கல் மலை: குறுந். 144:7, 253:8.
(285)