பெரும்பாக்கன் (பி-ம். பெரும்பாகன்.) (பி-ம்.) 3. ‘அறுகழிச்’, ‘முணையிற்’; 4. ‘கண்ணார்’; 8. ‘நும்மிதிற்’,‘நும்மினிற்’, ‘நுமிதற்’.
(ப-ரை.) தோழி--, அம்ம - ஒன்று கூறுவன் கேட்பாயாக: புன்னை அலங்கு சினை இருந்த அம் சிறை நாரை -புன்னையினது அசைந்த கிளையினிடத்திருந்த அழகிய சிறகையுடைய நாரை, உறுகழி சிறு மீன் முனையின் - மிக்க கழியிடத்துச் சிறுமீன் உணவை வெறுத்ததாயின், செறுவில் - வயலிலுள்ள, கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும் - கள் மணக்கின்ற நெய்தற் பூவை நெற்கதிரோடு விரும்புகின்ற, தண் அம் துறைவன் காணின் - தண்ணிய அழகிய துறைவனைக் கண்டால், முன் நின்று - அவன் முன்னே நின்று, தொடியோள் இன்னள் ஆக - வளையை அணிந்த தலைவி இத்தன்மை யுடையளாகும்படி, துறத்தல் - பிரிந்து செல்லுதல், நும்மின் தகுமோ - உமக்குத் தகுமோ, என்றனை துணிந்து கடிய கழறல் ஓம்புமதி - என்று துணிந்து கடுமையான சொற்களைக் கூறி இடித்துரைத்தலைப் பாதுகாப்பாயாக.
(முடிபு) தோழி, துறைவற்காணின் முன்னின்று, “துறத்தல் தகுமோ?”என்றனை துணிந்து கழறல் ஓம்புமதி.
(கருத்து) இங்ஙனம் பிரிந்து வருதல் பற்றித் தலைமகனை நீ கழறற்க.
(வி-ரை.) வாழி: அசை நிலை. தொடியோள் இன்னளாக - தொடியை யணிந்த தலைவி அத்தொடியை யிழந்து மெலிந்து வருந்தும் இந்நிலையி னளாக.
தோழி கழறாமை வேண்டுதல் தலைவி கருத்தன்று; சிறைப்புறத்தானாகிய தலைவன் தன் துயர்நிலையையறிதல் வேண்டுமென்பதே கருத்து.
மேற்கோளாட்சி 5. தண்ணந்துறைவனென்றது விரிக்கும் வழி விரித்தது (தொல். எச்ச. 7, இளம், சே.)
ஒப்புமைப் பகுதி 1. அம்ம வாழி தோழி: குறுந். 77:1, ஒப்பு.
1-2. புன்னையில் நாரை இருத்தல்: குறுந். 236:4-5, ஒப்பு.
4. கண்ணாறு நெய்தல்: சிலப். 7:33.
7. இன்னள்: குறுந். 173:5, ஒப்பு.
7-8. குறுந். 185:3.
(296)