(பகற்குறிக்கண் இடையீடின்றித் தலைவனோடு அளவளாவும்நிலைபெறாத தலைவி வருந்தி, தலைவன் சிறைப்புறத்தானாக, தோழிக்குக்கூறுவாளாய், “நீ அவரைக் கழறுதலை யொழி” என்று கூறும் வாயிலாகத்தன் நிலையைப் புலப்படுத்தியது.)
 296.    
அம்ம வாழி தோழி புன்னை 
    
அலங்குசினை யிருந்த வஞ்சிறை நாரை 
    
உறுகழிச் சிறுமீன் முனையிற் செறுவிற் 
    
கண்ணாறு நெய்தல் கதிரொடு நயக்கும் 
5
தண்ணந் துறைவற் காணின் முன்னின்று 
    
கடிய கழற லோம்புமதி தொடியோள் 
    
இன்ன ளாகத் துறத்தல் 
    
நும்மிற் றகுமோ வென்றனை துணிந்தே. 

என்பது காணும் பொழுதிற் காணாப் பொழுது பெரிதாகலான் ஆற்றாளாயதலைமகள், தலைமகன் சிறைப்புறத் தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

     [‘இவ்வகை பகற்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகனைக் காணும்பொழுதிற் காணாப் பொழுது பெரிதாகலான் ஆற்றாளாய்’ (இறை. 18,உரை.)]

பெரும்பாக்கன் (பி-ம். பெரும்பாகன்.)

     (பி-ம்.) 3. ‘அறுகழிச்’, ‘முணையிற்’; 4. ‘கண்ணார்’; 8. ‘நும்மிதிற்’,‘நும்மினிற்’, ‘நுமிதற்’.

     (ப-ரை.) தோழி--, அம்ம - ஒன்று கூறுவன் கேட்பாயாக: புன்னை அலங்கு சினை இருந்த அம் சிறை நாரை -புன்னையினது அசைந்த கிளையினிடத்திருந்த அழகிய சிறகையுடைய நாரை, உறுகழி சிறு மீன் முனையின் - மிக்க கழியிடத்துச் சிறுமீன் உணவை வெறுத்ததாயின், செறுவில் - வயலிலுள்ள, கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும் - கள் மணக்கின்ற நெய்தற் பூவை நெற்கதிரோடு விரும்புகின்ற, தண் அம் துறைவன் காணின் - தண்ணிய அழகிய துறைவனைக் கண்டால், முன் நின்று - அவன் முன்னே நின்று, தொடியோள் இன்னள் ஆக - வளையை அணிந்த தலைவி இத்தன்மை யுடையளாகும்படி, துறத்தல் - பிரிந்து செல்லுதல், நும்மின் தகுமோ - உமக்குத் தகுமோ, என்றனை துணிந்து கடிய கழறல் ஓம்புமதி - என்று துணிந்து கடுமையான சொற்களைக் கூறி இடித்துரைத்தலைப் பாதுகாப்பாயாக.

     (முடிபு) தோழி, துறைவற்காணின் முன்னின்று, “துறத்தல் தகுமோ?”என்றனை துணிந்து கழறல் ஓம்புமதி.

     (கருத்து) இங்ஙனம் பிரிந்து வருதல் பற்றித் தலைமகனை நீ கழறற்க.

     (வி-ரை.) வாழி: அசை நிலை. தொடியோள் இன்னளாக - தொடியை யணிந்த தலைவி அத்தொடியை யிழந்து மெலிந்து வருந்தும் இந்நிலையி னளாக.

     தோழி கழறாமை வேண்டுதல் தலைவி கருத்தன்று; சிறைப்புறத்தானாகிய தலைவன் தன் துயர்நிலையையறிதல் வேண்டுமென்பதே கருத்து.

     மேற்கோளாட்சி 5. தண்ணந்துறைவனென்றது விரிக்கும் வழி விரித்தது (தொல். எச்ச. 7, இளம், சே.)

     ஒப்புமைப் பகுதி 1. அம்ம வாழி தோழி: குறுந். 77:1, ஒப்பு.

     1-2. புன்னையில் நாரை இருத்தல்: குறுந். 236:4-5, ஒப்பு.

     4. கண்ணாறு நெய்தல்: சிலப். 7:33.

     7. இன்னள்: குறுந். 173:5, ஒப்பு.

     7-8. குறுந். 185:3.

(296)