(தலைவன் சிறைப்புறத்தே நிற்ப, தலைவி தன் தோள் மெலிவைத்தோழிக்குக் கூறுவாளாய் வரைதல் வேண்டு மென்பதை அவனுக்குப்புலப்படுத்தியது.)
 299.    
இதுமற் றெவனோ தோழி முதுநீர்ப் 
    
புணரி திளைக்கும் புள்ளிமிழ் கானல் 
    
இணரவிழ் புன்னை யெக்கர் நீழற் 
    
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற் 
5
கண்டன மன்னெங் கண்ணே யவன்சொற் 
    
கேட்டன மன்னெஞ் செவியே மற்றவன் 
    
மணப்பின் மாணல மெய்தித் 
    
தணப்பின் ஞெகிழ்பவென் றடமென் றோளே. 

என்பது சிறைப்புறமாகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

வெண்மணிப் பூதி.

     (பி-ம்.) 1. ‘இதுவுமற்’; 3. ‘இணர்வீழ்’; 5. ‘மன்னங்’; 8. ‘ஞெகிழ்பவென்றட’, ‘ஞெகிழ்பதட’.

     (ப-ரை.) தோழி--, முதுநீர் புணரி திளைக்கும் -நிலத்திற்குப் பழையதாகிய கடலின் அலை அளவளாவுகின்ற, புள் இமிழ் கானல் - பறவைகள் ஒலிக்கின்ற கடற்கரைச்சோலையிலுள்ள, இணர் அவிழ் புன்னை எக்கர் நீழல் -பூங்கொத்துக்கள் மலர்ந்த புன்னை வளர்ந்த மேட்டிலுள்ளநிழலில், புணர் குறி வாய்த்த ஞான்றை - புணர்குறியைப்பெற்ற காலத்தில், எம் கண் - எம் கண்கள், கொண்கன்கண்டன - தலைவனைப் பார்த்தன; எம் செவி - எம்முடையகாதுகள், அவன் சொல் கேட்டன - அவனுடைய சொற்களைக் கேட்டன; எம் தட மெல் தோள் - எமது பரந்தமெல்லிய தோள்கள், அவன் மணப்பின் - அவன் எம்மைமணந்தால், மாண் நலம் எய்தி - மாட்சிமைப்பட்ட அழகைப்பெற்று, தணப்பின் - அவன் பிரிந்தால், ஞெகிழ்ப -சோர்வன; இது எவன் - இஃது என்ன வியப்பு!

     (முடிபு) தோழி, எம் கண் கண்டன; செவிகேட்டன; தோள் மணப்பின்நலம் எய்தித் தணப்பின் ஞெகிழ்ப.

     (கருத்து) தலைவன் இடையிட்டு வருவதால் யான் வருந்துவேனாயினேன்.

     (வி-ரை.) இது: செய்யுளாதலின் சுட்டு முன் வந்தது. மற்று, ஓ:அசைநிலைகள். நீர்க்குப் பின்னே நிலம் தோற்றுதலின் நீரை முதுநீரென்றாள். கொண்கன் - நெய்தனிலத் தலைவன் (குறுந். 212, வி- ரை.)

     ‘தலைவனைக் கண்ட கண்ணும் கேட்ட செவியும் வாளாவிருப்பத்தோள்கள் மட்டும் தம் மெலிவைப் புறத்தாரறியும்படி நெகிழ்ந்தன’ என்றாள். இடையிட்டு வந்து அளவளாவும் களவொழுக்கத்தில் தான் தலைவனைப் பிரிந்திருக்குங் காலத்தில் ஆற்றாமை மிகுமென்பதும், இடையீடின்றி அளவளாவும் கற்பொழுக்கத்திற்குரிய வரைவே இனி மேற்கொள்ளுதற்கு உரியதென்பதும் இதனால் தலைவனுக்குக் குறிப்பிக்கப்பட்டன.

     ஒப்புமைப் பகுதி 1. இதுமற்றெவனோ தோழி: குறுந். 181:1.

     3. புன்னை இணர்: குறுந். 303:6.

     4. ஞான்றை : குறுந். 393:5.

     3-4. புன்னை நீழற் புணர்குறி: (குறுந். 123:3-4, ஒப்பு.); “புன்னையங் கானற் புணர்குறி வாய்த்த” (நற். 227:3); “மின்னிலைப்பொலிந்த விளங்கிண ரவிழ்பொற், றண்ணறும் பைந்தா துறைக்கும்,புன்னையங் கானற் பகல்வந் தீமே”, “பூவேய் புன்னையந் தண்பொழில்,வாவே தெய்ய மணந்தனை செலற்கே”, “கழிசேர் புன்னை யழிபூங்கானற், றணவா நெஞ்சமொடு தமியன் வந்துநம், மணவா முன்னும்” (அகநா. 80:11-3, 240:14-5, 290: 9-11); “புன்னையங் கானலிருந்தேமாப் பொய்த்தெம்மைச,் சொன்னலங் கூறி நலனுண்டசேர்ப்பனை” (கைந்நிலை, 54); “கண்டலை யேகரி யாக்கன்னிப் புன்னைக்கலந்தகள்வர்” (திருச்சிற். 177.)

     7. மாணலம்: குறுந். 74:5, ஒப்பு.

     தோள் தலைவனை மணப்பின் நலமெய்தல்: ஐங். 120.8. தலைவனைப் பிரிந்தமையால் தோள் நெகிழ்தல்: குறுந். 87:5, ஒப்பு.; குறிஞ்சிப்.9;நற். 14:1, 309:1; ஐங். 230:3; கலி. 37:11, 45:15.

     தடமென்றோள்: குறுந். 77:6, ஒப்பு. 87:5.

     7-8. தோள் மணத்தல்: குறுந். 36:4, ஒப்பு, 50:5, ஒப்பு.

     தோள் மணப்பின் நலம் பெற்றுத் தணப்பின் ஞெகிழ்தல்: “தணந்தமை சால வறிவிப்ப போலும், மணந்தநாள் வீங்கிய தோள்” (குறள், 1233.)

     5-8. “கண்டன வுண்கண் கலந்தன நன்னெஞ்சம், தண்டப்படுவதடமென்றோள் - கண்டாய், உலாஅ மறுகி லுறையூர் வளவற்,கெலாஅமுறைகிடந்த வாறு” (முத். 55.)

(299)