(“தலைவி வேறுபாடு மிக்கனள்; ஆதலின் தாய் இற்செறிக்கக்கருதினாள்; இனி இவளை மணந்துகோடலே தக்கது” என்று தோழிதலைவனுக்கு உரைத்தது.)
 303.    
கழிதேர்ந் தசைஇய கருங்கால் வெண்குரு 
    
கடைகரைத் தாழைக் குழீஇப் பெருங்கடல் 
    
உடைதிரை யொலியிற் றுஞ்சுந் துறைவ 
    
தொன்னிலை நெகிழ்ந்த வளைய ளீங்குப் 
5    
பசந்தனண் மன்னென் றோழி யென்னொடு 
    
மின்னிணர்ப் புன்னையம் புகர் நிழற் 
    
பொன்வரி யலவ னாட்டிய ஞான்றே. 

என்பது செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது.

அம்மூவன்.

     (பி-ம்.) 1. ‘குறுங்கால்; 2. ‘ளிங்குப்’.

     (ப-ரை.) கழி தேர்ந்து - மீனுணவின் பொருட்டுக்கழியின் நீரை ஆராய்ந்து, அசை இய - உணவுண்டு தங்கிய,கருகால் வெள் குருகு - கரிய காலையுடைய வெள்ளியநாரைகள், அடைகரை தாழை - அடைகரையிலுள்ள தாழையினிடத்து, குழீஇ - கூடி, பெரு கடல் உடை திரைஒலியின் - பெரிய கடலில் கரையை மோதி உடைகின்றஅலையின் ஓசையினால், துஞ்சும் துறைவ - துயில்கின்றதுறையையுடைய தலைவ, என்னொடு--, மின்இணர்புன்னை அம் புகர் நிழல் - மின்னுகின்ற பூங்கொத்துக்களையுடைய புன்னை மரத்தினது அழகிய புள்ளியையுடைய நிழலில், பொன்வரி அலவன் ஆட்டிய ஞான்றே -பொன் போன்ற கோடுகளையுடைய நண்டுகளை அலைத்துவிளையாடிய போதே, என் தோழி - என் தோழியாகியதலைவி, தொல் நிலை நெகிழ்ந்த வளையள் - தம் பழையசெறிந்த நிலையினின்றும் நெகிழ்ந்த வளைகளையுடையளாகி, ஈங்கு மன் பசந்தனள் - இங்கே மிகப் பசந்தாள்.

     (முடிபு) துறைவ, என் தோழி அலவன் ஆட்டிய ஞான்றே நெகிழ்ந்தவளையல்; ஈங்குப் பசந்தனள் மன்.

     (கருத்து) இனித் தலைவியை மணத்தலே ஏற்புடையது.

     (வி-ரை.) அசைஇய - தங்கிய (முருகு. 176, ந.) அலவனாட்டியஞான்றே நெகிழ்ந்த வளையளென்றது, அது முதல் இவளது வேறுபாடுபெரிதாகி இப்பொழுது புறத்தே யாவரும் அறியும் பசப்பிற்குக்காரணமாயிற்றென்றபடி. வளை கழலினும், ‘சிறியவும் உளவீண்டுவிலைஞர் கைவளையே’ (குறுந். 117:6) என்பராதலின் மெலிவிற்கேற்றவளையணிந்து புறத்தாருக்கு வேறுபாடு புலனாகாமற் காத்தல் கூடும்;பசப்போ மாற்றுதற்கு அரிதாயிற்று. அவள் மிகப்பசந்தாளென்றதுதாயறிவுற்று இற்செறிப்பாளென்ற குறிப்புணர்த்தியவாறு.

     தலைவி தோழியோடு அலவனாட்டி விளையாடுகையில் தலைவன்வந்து அளவளாவிய இயற்கைப் புணர்ச்சியைக் குறிப்பாகக் கூறினாள்.

     என்னொடும் இன்னிணர்ப் புன்னையெனக் கண்ணழித்தலும் ஆம்.

     குருகு கழிதேர்ந்து வயிறு நிரம்ப உண்டு பின் தாழை மடலிலேதுஞ்சுமென்றது, இதுகாறும் களவொழுக்கத்தில் நின் உள்ள நிறைவுண்டாம் வண்ணம் அளவளாவினையாதலின் இனி வரைந்துகொண்டு நின்இல்லின்கண் உறைந்து இல்லறம் நடத்துவாயாகவென்ற கருத்தை உணர்த்தியது.

     ஒப்புமைப் பகுதி 1. “மீன்றேர்ந் தருந்திய கருங்கால் வெண்குருகு” (யா.வி.39, மேற்.)

     கருங்கால் வெண்குருகு: குறுந். 325:5; நற். 54:4, 67:3.

     6. இணர்ப்புன்னை: குறுந். 299:3.

     7. அலவன் ஆட்டல்: குறுந். 316:56; பட். 101: நற். 363:10; ஐங். 197:1.

     5-7. தலைவனும் தலைவியும் புன்னைநிழலில் அளவளாவுதல்: குறுந். 123:3-4, ஒப்பு. 299:3-4, ஒப்பு.

303