(தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் ஆற்றாளெனக்கருதிக் கவன்ற தோழியை நோக்கித் தலைவி, “அன்று இனிதாயிருந்தநட்பைத் தலைவனோடு செய்தேம்; இப்போது அந்நட்பு நமக்கே பகையாய் முடிந்தது” என்று கூறியது.)
 304.    
கொல்வினைப் பொலிந்த கூர்வா யெறியுளி 
    
முகம்பட மடுத்த முளிவெதிர் நோன்காழ் 
    
தாங்கரு நீர்ச்சுரத் தெறிந்து வாங்குவிசைக் 
    
கொடுந்திமிற் பரதவர் கோட்டுமீ னெறிய 
5   
நெடுங்கரை யிருந்த குறுங்கா லன்னத்து 
    
வெண்டோ டிரியும் வீததை கானற் 
    
கைதையந் தண்புனற் சேர்ப்பனொடு 
    
செய்தனெ மன்றவோர் பகைதரு நட்பே.  

என்பது வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்திஉரைத்தது

கணக்காயன் தத்தன்.

     (பி-ம்.) 1. ‘தொல்வினைப்’; 2. ‘முனிவெதிர்’; 3. ‘தாங்கருவாய் நீர்’.

     (ப-ரை.) தோழி, கொல் வினை பொலிந்த - கொல்லுந்தொழிலிற் பொலிவு பெற்ற, கூர்வாய் - கூரிய முகத்தையுடைய, எறி உளி - எறிகின்ற உளியை, முகம் படமடுத்த -தன்னுடைய முகத்தின்கண் அமையும்படி பொருத்தப்பெற்ற, முளி வெதிர் நோன் காழ் - உலர்ந்த மூங்கிலின்வலிய காம்பை, தாங்கு அருநீர் சுரத்து எறிந்து - தாங்குதற்கரிய நீரையுடைய வழியின்கண் எறிந்து, வாங்கு - கைக்கொள்ளும், விசை கொடு திமில் பரதவர் - வேகத்தையுடையவளைந்த மீன் படகையுடைய பரதவர், கோடு மீன் எறிய -கொம்பையுடைய சுறா மீனை எறிய, நெடு கரை இருந்த -நெடிய கரையினிடத்தே இருந்த, குறு கால் அன்னத்துவெள் தோடு - குறிய கால்களையுடைய அன்னப்பறவைகளின் வெள்ளிய தொகுதி, இரியும் - கெட்டு ஓடும், வீததைகானல் - மலர்கள் நெருங்கிய சோலையையும், கைதை -தாழையையும், அம் தண் புனல் - அழகிய தண்ணிய நீரையுமுடைய, சேர்ப்பனொடு - கடற்கரையையுடையதலைவனோடு, மன்ற - நிச்சயமாக, ஓர் பகை தரு நட்புசெய்தனெம் - பகையைத் தருகின்றதொரு நட்பைச் செய்தேம்.

     (முடிபு) சேர்ப்பனொடு ஓர் பகைதரு நட்புச்செய்தனெம்.

     (கருத்து) தலைவனுடைய பிரிவினால் நான் மிக்க வருத்தத்தைஅடைந்தேன்.

     (வி-ரை.) கொல்லும் தொழிலினிடத்தே பொலிந்ததற்குக் காரணம்கூர்மை யென்பாள், பொலிந்த கூர்வா யெறியுளியென வைத்தாள்.கொல்வினை - கொற்றொழில் எனலுமாம். எறி உளி - படகிலிருந்தபடியேஎறிந்து கொல்லும் ஒருவகை ஆயுதம்; இதன் காம்பிற் கயிறு கட்டப்பட்டிருத்தலின் வாங்குதற்கு எளிதாயிற்று. தாம் கருநீர்ச் சுரத்தெனப்பிரித்துத் தாமென்பதை அசையாக்குதலும் ஒன்று.

     நீர்ச்சுரம் - நீரிலுள்ள வழி; என்றது படகு செலுத்தும் வழியை;

  
“திமின்மேற் கொண்டு திரைச்சுர நீந்தி 
  
 வாள்வாய்ச் சுறவொடு வயமீன் கெண்டி”     (நற். 111:6-7.)  

கோட்டுமீன் - சுறா மீன்; “கோட்டுமீன் கெண்டி” (அகநா. 10:11) என்பதன் உரையைப் பார்க்க. பறவைத் தொகுதியைத் தோடென்றுவழங்குதலை, இந்நூல் 34-ஆம் செய்யுளுரையால் உணரலாகும்.

    பகைதரு நட்பென்றாள், அந்நட்பு, பிரிவின்கண் ‘நற்கவின்றொலையவும் நறுந்தோ ணெகிழவும் புட்பிற ரறியவும் புலம்புவந்தலைப்பவும் உட்கரந் துறையு முய்யா வரும்படர்’ (குறிஞ்சிப். 9-11)உண்டாதற்குக் காரணமாதலின். இதுகாறும் எனக்கு நல்லராயவர் பகையும்நல்லனவாகி யவற்றின் பகையும் தரும் நட்பென்றலும் இயையும்.

     ஒப்புமைப் பகுதி 3. நீர்ச்சுரம்: “திரைச்சுரம்” (அகநா. 240:5.)

     4. திமிற் பரதவர்: குறுந். 123:5; பட். 112; நற். 111:6-7, 372:11- 2. கோட்டு மீன்: பட். 86; நற். 49:5; அகநா. 170:11; புறநா. 399:5; சீவக. 2325.

     1-4. மீன் வேட்டை: குறுந். 123:5, ஒப்பு; நற். 111: 6-7. பரதவர் எறியுளியாற் சுறாமீனை எறிதல்: “கயிறுகடை யாத்த கடுநடை யெறியுளித், திண்டிமிற் பரதவ ரொண்சுடர்க் கொளீஇ, நடுநாள் வேட்டம் போகி” (நற். 388:3-5); “பரதவர், எறியுளி பொருத வேமுறு பெருமீன்” (அகநா. 210:1-2.)

     8. பகைதரும் நட்பு: குறுந். 257:6, 394:7.

     7-8. சேர்ப்பனொடு செய்த நட்பு: குறுந். 247:6-7, ஒப்பு.

(304)