(காப்பு மிகுதியால் வருந்திய தலைவி, வரையாது வந்தொழுகும்தலைவனிடத்துச் சிறிது வேறுபாடுடையளாகியும் அவ்வேறுபாடுஅவனைக் கண்டக்கால் மறைவதைத் தன் நெஞ்சை நோக்கிக் கூறுவாளாய்க் கூறியது.)
  306.    
மெல்லிய வினிய மேவரு தகுந 
    
இவைமொழி யாமெனச் சொல்லினு மவைநீ 
    
மறத்தியோ வாழியென் னெஞ்சே பலவுடன் 
    
காமர் மாஅத்துத் தாதமர் பூவின் 
5
வண்டுவீழ் பயருங் கானற்  
    
றண்கடற் சேர்ப்பனைக் கண்ட பின்னே  

என்பது காப்பு மிகுதியால் நெஞ்சுமிக்கது வாய் சோர்ந்து கிழத்தி உரைத்தது.

    [நெஞ்சு மிக்கது வாய் சோர்ந்து - நெஞ்சில் மிகுதியாக உள்ளது தன் முயற்சி யின்றியே வெளிப்பட்டு (இறை. 18, உரை)]

அம்மூவன்.

     (பி-ம்.) 4. ‘மாஅத் தாதமர்’: 5. ‘வண்டுவீழ்வ பயருங்’; 6. ‘றெண்கடற்’.

     (ப-ரை.) என் நெஞ்சே--, மெல்லிய இனிய - ஓசையால்மெல்லியனவும் பொருளால் இனியனவும், மேவரு தகுந -விரும்பத்தக்கனவுமாகிய, இவை - இச்சொற்களை, மொழியாம் - மொழியேம், என சொல்லினும் - என்று நினக்குநான் சொன்னாலும், காமர் மாஅத்து - அழகிய மாமரத்தினது,தாது அமர் பூவின் - தாதுகள் பொருந்திய மலரினிடத்து,வண்டு பல உடன் - வண்டுகள் பல ஒருங்கே, வீழ்புஅயரும் - வீழ்தலைச் செய்யும், கானல் - சோலையையுடைய, தண்கடல் சேர்ப்பனை - தண்ணிய கடற்கரையையுடைய தலைவனை, கண்டபின்--, நீ அவை மறத்தியோ -நீ நான் கூறிய அவற்றை மறந்து விடுகின்றாயோ?

     (முடிபு) நெஞ்சே, மொழியாமெனச் சொல்லினும் சேர்ப்பனைக்கண்டபின், நீ அவை மறத்தியோ?

     (கருத்து) தலைவனைக் காணின் எல்லாத் துன்பங்களையும் மறந்துவிடுகின்றேன்.

     (வி-ரை.) கானல் - கடற்கரைச்சோலை. தலைவன் வரையாதுவந்தொழுகுதலை விரும்பாத தலைவி, ‘அவன் வரின் இன்மொழி கூறேன்’என’ எண்ணியிருந்தும், அவன் வந்த காலத்து நெஞ்சின்கண் உள்ளஆதரவினால் மீட்டும் இன் மொழி கூறி அளவளாவினாள். அவனைக்கண்டவுடன் தான் கொண்டிருந்த உறுதி தளர்ந்து போதலை இதிற்கூறினாள்;

  
“புலப்ப லெனச்சென்றேன் புல்லினே னெஞ்சம்  
  
 கலத்த லுறுவது கண்டு”         (குறள், 1259.) 

     வாழி : அசை நிலை.

     ஒப்புமைப் பகுதி 1-2. “மெல்லிய வினிய மேவரக் கிளந்து” (குறிஞ்சிப். 138.)

     3. வாழி யென் னெஞ்சே: குறுந். 11:4.

     4-5. கடற்கரைச் சோலையில் மாமரம் இருத்தல்: “கொக்கார்கொடுங்கழிக் கூடுநீர்த் தண்சேர்ப்பன்” (கைந்நிலை, 55.) ‘மாஞ்சோலைநிறைந்த வளைந்த கழியினையுடைய பொருந்திய நீர்த்தண்சேர்ப்பன்’ என்பது இதன் பழையவுரை.

(306)