தாயங்கண்ணன். (பி-ம்.) 3. ‘பொருந்திய’ 5. ‘மாழைப்’ 6. ‘நன்னிறஞ்’.
(ப-ரை.) தோழி--, மான் ஏறு - ஆண்மான்கள், மடம்பிணை தழீஇ - மடப்பம் பொருந்திய பெண்மான்களைத்தழுவி, மருள் கூர்ந்து - மயக்கம் மிக்கு, கானம் நண்ணிய - காட்டினிடத்துப் பொருந்திய, புதல் மறைந்து ஒடுங்கவும் - புதலின் கண்ணே மறைந்து ஒடுங்கியிருக்கும்படியும், கைஉடை நல்மா - துதிக்கையையுடைய நல்ல ஆண்யானைகள்,பிடியொடு பொருந்தி - பெண் யானைகளோடு சேர்ந்து,மை அணி மருங்கின் மலையகம் சேரவும் - மேகங்களைஅணிந்த பக்கத்தையுடைய மலையிடத்தை அடையும் படியும், மாரி மா மழை - கார்காலத்துக்குரிய பெரிய மழை,மாலை வந்தன்று - மாலைக்காலத்திலே வந்தது; பொன்நேர் மேனி - பொன்னையொத்த எனது மேனியின், நல் நலம்சிதைத்தோர் - நல்ல அழகைக் கெடுத்த தலைவர், இன்னும்வாரார் ஆயின்--, நம் இன்னுயிர் நிலை - நம்முடையஇனிய உயிர் நிலை, என் ஆம் - எத்தகையது ஆகும்?
(முடிபு) தோழி, மானேறு ஒடுங்கவும், மா சேரவும், மழை வந்தன்று; சிதைத்தோர் வாராராயின் உயிர்நிலை என்னாம் ?
(கருத்து) தலைவர் வாராவிடின் என் உயிர் நீங்கும்.
(வி-ரை.) மழையை அஞ்சி மான் முதலிய விலங்குகள் தம் துணையோடு ஒடுங்கின. கையுடை நன்மா என்றலின் யானையாயிற்று. மழைகூறினமையின் கார்காலமாயிற்று.
பொன் ஏர் மேனி- இப்பொழுது பசலை எழுகின்ற எனது மேனியெனலும் பொருந்தும்.
தலைவன் மீண்டு வருவதாகக் கூறிச் சென்ற பருவம் வந்ததன்றிஅப்பருவத்தில் ஆண் விலங்குகள் பெண்விலங்குகளோடு ஒன்றுபட்டதும்தலைவியின் ஆற்றாமையை மிகுவிப்பதாயிற்று. ‘அவ்விலங்குகள்பெற்றபேறு யாம் பெற்றிலேமே!' என்று கவன்றாள்.
மேற்கோளாட்சி 6. நேரென்பது உவம உருபாக வந்தது (நன். 366, மயிலை.)
ஒப்புமைப் பகுதி 2. மானேறும் பிணையும்: குறுந். 256:2-3.
பொன்னேர் மேனி: குறுந். 101:4, ஒப்பு; நற். 166:1-2.
8. "என்னா வதுகொனம் மின்னுயிர் நிலையே" (ஐங். 228:4)
இன்னுயிர்: குறுந். 216:7, 334:5, 349:7.
(319)