(தலைவி இற்செறிக்கப்படுதலை உணர்த்திய தோழி, “அவள் ஊர்வெற்பிடை நண்ணியது” என்றும், “அவள் வல்விற் கானவர் தங்கை”என்றும் கூறி இரவுக்குறி பெறுதற் கரிது என்பதைத் தலைவனுக்குப் புலப்பட வைத்தது.)
 335.   
நிரைவளை முன்கை நேரிழை மகளிர் 
    
இருங்கல் வியலறைச் செந்தினை பரப்பிச் 
    
சுனைபாய் சோர்விடை நோக்கிச் சினையிழிந்து 
    
பைங்கண் மந்தி பார்ப்பொடு கவரும் 
5
வெற்பிடை நண்ணி யதுவே வார்கோல் 
    
வல்விற் கானவர் தங்கைப் 
    
பெருந்தோட் கொடிச்சி யிருந்த வூரே. 

என்பது இரவுக்குறி நயவாமைத் தோழி செறிப்பு அறிவுறீஇயது.

     (நயவாமை - தலைவன் விரும்பாதபடி.)

இருந்தையூர்க் கொற்றன் புலவன்.

    (பி-ம்) 5. ‘வெற்பயனண்ணி’, ‘வெற்பனண்ணி’, ‘வெற்பன நண்ணி’.

    (ப-ரை.) வார் கோல் - நீண்ட அம்பையும், வல்வில் -பல இலக்குக்களை ஒரு தொடையில் துளைக்கவிடும் வலியவில்லையும் உடைய, கானவர் தங்கை - வேட்டுவருடையதங்கையாகிய, பெருதோள் கொடிச்சி - பெரிய தோளையுடைய குறிஞ்சிநில மகளாகிய தலைவி, இருந்த ஊர் -வாழும் ஊர், நிரை வளை முன்கை - வரிசையாகிய வளையையுடைய முன்கையையும், நேர் இழை மகளிர் - நேர்ந்தஅணிகலன்களையுமுடைய மகளிர், இரு கல் வியல் அறை -கரிய மலையிலுள்ள அகன்ற பாறையினிடத்து, செ தினைபரப்பி - சிவந்த தினையைப் பரப்பி, சுனை பாய்சோர்வுஇடை நோக்கி - சுனையின்கண் பாய்கின்ற சோர்தலையுடைய சமயத்தைப் பார்த்து, சினையிழிந்து - மரக்கிளையினின்றும் இறங்கி, பசு கண் மந்தி - பசிய கண்ணையுடையபெண் குரங்குகள், பார்ப்பொடு கவரும் - குட்டிகளோடுஅத்தினையைக் கைக்கொள்ளும், வெற்பிடை நண்ணியது -மலையினிடத்தே பொருந்தியது.

     (முடிபு) கொடிச்சி இருந்த ஊர் வெற்பிடை நண்ணியது.

     (கருத்து) தலைவியை இரவுக்குறியிற்கண்டு அளவளாவுதல் அரிது.

     (வி-ரை.) நேரிழை - பொருந்திய அணிகலன் (பட். 22, ந.) வார்கோல் வல்விற் கானவர் தங்கை யென்றதில் உடம்படு புணர்த்தும் வாயிலாகக் கானவர் இயல்பையும் புலப்படுத்தினாள். வெற்பிடை நண்ணியது வென்றதனால் அடைதற்கரிய இடத்தினளென்பதையும், கொடிய கானவர் தங்கை யென்றதனால் அவர் அறியின் தீங்கு நிகழுமென்பதையும் குறிப்பித்தாள்.

     இதனால், வரைந்து கொள்வதே நன்றென்னும் தன் நினைவுகூறினாள். இஃது இரவுக்குறி மறுக்கும் வாய்பாட்டால் வரைவு கடாயது.

    ஒப்புமைப் பகுதி 1-2. பாறையில் தினையை உலர்த்துதல்: “செந்தினை யுணங்க றொகுக்கும், இன்கல் யாணர்த்தம் முறைவி னூர்க்கே” (நற். 344: 11-2.)

    4. மந்தியும் பார்ப்பும்: குறுந். 278:7.

    2-4. மந்தி பிறர் சோர்வுற்றதை யறிந்து உணவுப் பொருளைக் கவர்தல்: “காழோ ரிகழ்பத நோக்கிக் கீழ, நெடுங்கை யானை நெய்ம்மிதி கவளம், கடுஞ்சூன் மந்தி கவரும்” (பெரும்பாண். 393-5.)

    6. வல்வில்: குறுந். 100:5, ஒப்பு.

     கானவர் தங்கை: குறுந். 392:5; சிறுபாண். 190; ஐங். 363:2.

    7. பெருந்தோட் கொடிச்சி: குறுந். 400:2.

    6-7. கானவர் தங்கையாகிய கொடிச்சி: “களிற்றுமுகந் திறந்த கவுளு டைப் பகழி, வானிணப் புகவிற் கானவர் தங்கை, அம்பணை மென்றோளாயிதழ் மழைக்கண், ஒல்கியற் கொடிச்சியை” (அகநா. 132:4-7.)

(335)