பொதுக்கயத்துக் கீரந்தை. (பி-ம்.) 1. ‘முகிழ்முகுத்தனவே’, ‘தலைஇய’ 2. ‘குரலே’ 3. ‘செறிநிறை’ 5. ‘யான்றன் னறிவ லென்னறி யலளே’ 7. ‘செல்வனொரு’.
(ப-ரை.) முலை முகிழ் முகிழ்த்தன - நகில்கள் அரும்பின; தலை - தலையில், கிளைஇய மெல்குரல் கிழக்குவீழ்ந்தன - கிளைத்த மெல்லிய மயிர்க்கொத்துக்கள் கீழேதாழ்ந்தன; செறிநிரை வெள்பலும் - செறிந்த வரிசையாகியவெள்ளிய பல்லும், பறிமுறை நிரம்பின - முதன்முறைவிழுந்து முற்றும் முளைத்து நிரம்பின; சுணங்கும் சிலதோன்றின - தேமலும் சில வெளிப்பட்டன; அணங்குதற்குயான் தன் அறிவல் - அவள் வருத்தும் பொருட்டு நான் அவளைஅறிவேன்; தான் அறியலள் - அவள் அதனை அறிந்திலள்;பெருமுது செல்வர் ஒரு மடமகள் - பெரிய முதிய செல்வத்தையுடையாரது ஒப்பற்ற மடப்பத்தையுடைய தலைவியாகிய அவள், யாங்கு ஆகுவள் கொல் - எத்தன்மையையுடையவளாவளோ?
(முடிபு) முலை முகிழ் முகிழ்த்தன; தலை குரல் வீழ்ந்தன; பல்லும்நிரம்பின; சுணங்கும் தோன்றின; யான் தன்னறிவல்; தான் அறியலள்; மடமகள் யாங்காகுவள் கொல்?
(கருத்து) தலைவி பருவம் வாய்த்தவளாகி என்னை வருத்தினாள்.
(வி-ரை.) தலைவி பேதைப் பருவம் கடந்தவளென்பதை முதலிற்கூறினான்;
| “முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின |
| தலைமுடி சான்ற தண்டழை யுடையை |
| ....... ........ ........ ......... |
| பேதை யல்லை மேதையங் குறுமகள் |
| பெதும்பைப் பருவத் தொதுங்கினை புறத்தென” (அகநா. 7:1-7.) |
கிழக்கு - கீழ் (குறள். 488.) பல் செறிந்திருத்தல் அழகு பயப்பது;“செறியெயிற் றரிவை” (குறுந். 2:4) என்று முன் வந்தது காண்க. பறிமுறை - விழுந்தெழுந்த முறைமை (கலி. 93:19, ந.) அணங்குதற்கு யான் தன் அறிவலென்றது, யான் அவளது அழகு முதலியவற்றை அறிந்த காரணத் தாலே அணங்கினாளென்றபடி; இதனால் யான் அறியாது வாளா சென்றே னெனின் அணங்கப்படேனென்பதும் போதரும். அணங்குதற்கு - அணங்குதலாலென உருபுமயக்கமாக்குதலும் ஒன்று.
பல்லும், சுணங்கும்: உம், இறந்தது தழீஇயது.
(மேற்கோளாட்சி) 2. கிழக்கென்பது கீழென்னும் பொருளில் வந்தது (தொல். உவம. 5, பேர்.)
5. பின்னின்ற தலைமகன் கூறியதனால், தன்கட்டோன்றிய வருத்தம்பற்றிய இளிவரலென்னும் மெய்ப்பாடு வந்தது (தொல். மெய்ப். 6, பேர்; இ. வி. 578.)
5-7. தலைமகள் கட்டுரையாதிருத்தலின் தலைமகன் தமரின் எய்தல்வேண்டினமையின் கட்டுரையின்மையின் வரைவுகடாதலாயிற்று (தொல். மெய்ப். 23, பேர்.)
மு. இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் வரைதல் வேண்டிக்கூறியது (தொல். களவு. 11, இளம்.); புணர்தல் நிமித்தம் வந்தது (தொல்.அகத். 14, ந.); இறையோன் இறைவி தன்மை இயம்பியது (நம்பி. 144.)
ஒப்புமைப் பகுதி 1. முகிழ் முகிழ்த்தல்: ‘அம்பலென்பது முகிழ் முகிழ்த்தல்’ (இறை. 22, உரை.)
3. பல் பறிமுறை நிரம்புதல்: “நறுமுல்லை நேர்முகை யொப்ப நிரைத்த, செறிமுறை பாராட்டி னாய்மற்றெம் பல்லின், பறிமுறை பாராட்டினையோ வைய” (கலி. 22:9-11.) 5. குறுந். 142:2-3.
6. யாங்காகுவள்: குறுந். 159:5, ஒப்பு.
(337)