மிளைகிழான் நல்வேட்டன். (பி-ம்.) 1. ‘பல்லி பயந்த’, ‘பல்லி படீஇய’, ‘பல்லி படரிய’ 5. ‘கண்ணிய லாண்மை’ 6. ‘வலிய’.
(ப-ரை.) தோழி--, பல் வீ பட்ட பசு நனை குரவம் - பல மலர்கள் தோன்றிய பசிய அரும்புகளையுடைய குராமரம், பொரி பூ புன்கொடு - நெற்பொரியைப் போன்றபூக்களையுடைய புன்க மரத்தோடு, பொழில் அணிக்கொளாஅ - சோலையின் கண் அழகைக் கொண்டு, சினைஇனிது ஆகிய - கிளை கண்ணுக்கு இனிதாகத் தோற்றிய,காலையும் - இப்பருவத்திலும், காதலர் பேணார் ஆயினும் -தலைவர் நம்மை விரும்பிப் பாதுகாவாராயினும், பெரியோர்நெஞ்சத்து கண்ணிய ஆண்மை கடவது அன்று என - பெரியோர்கள் தம் நெஞ்சத்திலே நினைத்த மேற்கோள் செலுத்தப்படுவதன் றென்றெண்ணி, வலியாநெஞ்சம் - முன்னர்த் துணியாத என் நெஞ்சம், வலிப்ப - பின்னர்த் துணிந்தமையால், என் வன்கணான் - எனது தறுகண்மையால்,வாழ்வேன் - உயிரோடு வாழ்வேனாயினேன்.
(முடிபு) தோழி, காதலர் பேணாராயினும் நெஞ்சம் வலிப்ப என்வன்கணான் வாழ்வேன்.
(கருத்து) தலைவர் தம்வினை முடித்து வருவரென்னும் துணிவினால்வாழ்வேனாயினேன்.
(வி-ரை.) தலைவி முதலில், “நம்பால் அன்புடைய தலைவர் தாம்மேற்கொண்ட வினையை முற்றச் செலுத்தா விடினும் வருவர்” என்றுஎண்ணினாள். அப்பால் “அவர் வினைமுடித்தே வருவார்; ஆதலின் நாம்ஆற்றியிருத்தல் வேண்டும்” என்று துணிந்தாள். துணியினும் தலைவன்பிரிவினை ஆற்றுதற்கு நெஞ்சத்திண்மை வேண்டுமாதலின், ‘என்வண்கணான் வாழ்வேன்’ என்றாள்.
மலரும் அரும்பும் குரவத்தில் நிறைந்தன. சினையென்றது குரவம்,புன்கென்னும் இரண்டன் சினைகளையும். இனிது: சாதியொருமை.காலையும்: உம்மை உயர்வு சிறப்பு. ஆண்மை என்றது இங்கே ஆள்வினையை. கடவது - செலுத்துவது; நிறைவேற்றுதல். வலியா நெஞ்சமென்றது, பெரியார் தாம் மேற்கொண்டதைச் செலுத்தாரென்று எண்ணியதுணிவின்மையையுடைய நெஞ்சமென்றபடி. கடவதெனவும் அன்றெனவும்துணியாத நெஞ்சமென்று பொருள் கொள்ளுதலும் பொருந்தும். வலிப்ப - பெரியோர் கண்ணிய ஆண்மை கடவதெனத் துணிய. ஏ: அசை நிலை.
இஃது ஆற்றுவலென்பதுபடச் சொல்லியது.
ஒப்புமைப் பகுதி 2. புன்க மலருக்குப் பொரி: குறுந். 53:2-4, ஒப்பு.
6. நெஞ்சம் வலித்தல்: “வல்லா நெஞ்சம் வலிப்ப” (அகநா. 53:14.)
(341)