(தலைவன் மாலைப்பொழுதில் நம்மைப் பிரிந்து செல்ல வருந்துகின்றான்" என்று கூறும் வாயிலாக அவன் இரவுக்குறி விரும்புதலைத்தோழி தலைவிக்குக் கூறியது.)
 346.   
நாகுபிடி நயந்த முளைக்கோட் டிளங்களிறு 
    
குன்ற நண்ணிக் குறவ ரார்ப்ப 
    
மன்றம் போழு நாடன் றோழி 
    
சுனைப்பூங் குவளைத் தொடலை தந்தும் 
5
தினைப்புன மருங்கிற் படுகிளி யோப்பியும் 
    
காலை வந்து மாலைப் பொழுதில் 
    
நல்லக நயந்துதா னுயங்கிச் 
    
சொல்லவு மாகா தஃகி யோனே. 

என்பது தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பக் கூறியது.

வாயிலிளங் கண்ணன்.

     (பி-ம்) 1. ‘முனைக்கோட்’ 7. ‘நயந்துதான் மயங்கிச்’ 8. ‘செல்லவு’.

    (ப-ரை.) தோழி--, நாகு பிடி நயந்த - இளம்பிடியைவிரும்பிய, முளை கோடு இள களிறு - மூங்கில் முளையைப்போன்ற கொம்பையுடைய இளைய களிறு, குன்றம் நண்ணி - மலையிடத்தே பொருந்தி, குறவர் ஆர்ப்ப - அங்குள்ளகுறவர் முழங்கியதனால், மன்றம் போழும் - ஊரிடத்துள்ளமன்றத்தைப் போழ்ந்து செல்லும், நாடன் - நாட்டையுடையதலைவன், காலை வந்து - பகலில் வந்து, சுனை பூ குவளைதொடலை தந்தும் - சுனையில் மலர்ந்த குவளைமலர்மாலையை நினக்குத் தந்தும், தினை புனம் மருங்கில் - தினைக்கொல்லையினிடத்தில், படு கிளி ஓப்பியும் - வீழ்கின்றகிளிகளை நம்மோடு ஓட்டியும், மாலை பொழுதில் - பிறகுவந்த மாலைக்காலத்தில், நல் அகம் நயந்து - நல்லநெஞ்ச த்தின் கண்ணே ஒன்றை விரும்பி, உயங்கி - வருந்தி,சொல்லவும் ஆகாது - அக்கருத்தை வெளிப்படச் சொல்லவும்எழுச்சி பெறாமல், அஃகியோன் - குறைவுற்றான்.

     (முடிபு) தோழி, நாடன் காலைவந்து தந்தும் ஒப்பியும் மாலைப்பொழுதில் நயந்து உயங்கி அஃகியோன்.

     (கருத்து) தலைவன் மாலைப்பொழுதின் கண்ணும் வரும் இரவுக்குறியை நயந்தான்; அதனைக் குறிப்பினால் அறிந்தேன்.

     (வி-ரை) மன்றம் - குறவர் ஊர்களிலுள்ள பொது இடம்.

     பிடியை நயந்த களிறு குன்றம் நண்ணுமென்றது நின்னை நயந்ததலைவன் ஊராரலருக்கு அஞ்சி மனையகத்தே இரவில் வருவானென்றகுறிப்பை உணர்த்தியது.

     நல்லகம் என்றலின் அவன் நயந்தது நன்மையையே பயக்குமென்றதன் உடம்பாட்டை உணர்த்தினாள்; இதனால் தலைவியைத் தோழிஇரவுக்குறி நயப்பித்தாளாயிற்று.

    (மேற்கோளாட்சி) மு. தோழி கிழத்தியை இரவுக்குறி நயப்பித்தது (தொல்.களவு. 23, ந.)

    ஒப்புமைப் பகுதி 3. மன்றம் போழ்தல்: குறுந். 301:5.

    4. சுனைப்பூங்குவளை: குறுந். 59:2-3, ஒப்பு, 321:2.

    5. தலைவன் தலைவியொடு கிள்ளையோப்புதல்: "பைந்தாட்செந்தினைக் கொடுங்குரல் வியன்புனம், செந்தார்க் கிள்ளை நம்மொடுகடிந்தோன்", "களிறணந் தெய்தாக் கன்முகை யிதணத்துச், சிறுதினைப்படுகிளி யெம்மோ டோப்பி" (அகநா. 242:5-6, 308:9-10.)

    4-5. சுனைப்பூவினால் தொடலை கட்டுதலும் கிளியோப்புதலும்:குறுந். 142: 1-2. 8. தலைவன் தன் கருத்தை வெளிப்படையாகச் சொல்லாமை: குறுந். 298:2; கலி. 37:1-5; திருச்சிற். 82, 83.

(346)