காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தங் கண்ணன். (பி-ம்.) 1. ‘மல்குசுனைப் புலந்த’ 2. ‘கொல்லுடை நறுவீ’.
(ப-ரை.) நெஞ்சம் - நெஞ்சே, மல்கு சுனை புலர்ந்தநல்கூர் சுரமுதல் - முன்பு நீர் மல்கிய சுனை பின்பு வற்றுதலினால் வறுமையுற்ற பாலைநிலத்தில் வளர்ந்த,குமரி வாகை கோல் உடை நறு வீ - இளமையையுடையவாகைமரத்தின் கொம்பின் கண் உள்ள நறிய மலர், மடம்மா தோகை குடுமியின் தோன்றும் - மடப்பத்தையுடையகரிய மயிலினது உச்சிக் கொண்டையைப் போலத் தோன்றுகின்ற, கானம் நீள் இடை - நீண்ட காட்டு வழியில், இவள்தானும் நம்மோடு ஒன்றும் மணஞ் செய்தனள் எனின் - இத்தலைவி தானும் நம்மொடு வந்து பொருந்தும் முயக்கத்தைச் செய்வாளெனின், நயந்த - பொருள் செய்தற்குவிரும்பிய, நின்துணிவு நன்றே - நினது துணிவு நன்மையுடைய தேயாகும்.
(முடிபு) நெஞ்சம், நீளிடையில் இவள்தானும் மணஞ் செய்தனளெனின் நின்துணிவு நன்றே.
(கருத்து) தலைவியைப் பிரிந்து செல்லுதல் தக்கதன்று.
(வி-ரை.) மல்குசுனை - முன்பு நீர்மல்கிய சுனை. குமரியென்றதுஇளமை குறித்து நின்றது. எனினென்பது அங்ஙனம் செய்தலரிதென்னும்நினைவிற்று. நன்றே: ஏ தேற்றம். துணிவே: ஏ அசை நிலை.
ஒப்புமைப் பகுதி 1. சுனை புலர்ந்த சுரம்: "அறுநீர்ப் பைஞ்சுனையாமறப் புலர்தலின்" (அகநா. 1:12.)
2-3. வாகைமலர்க்கு மயிலின் உச்சிச்சூட்டு: "வாகையொண் பூப் புரையு முச்சிய, தோகை" (பரி. 14:7-8.)
4-5. கானநீளிடை மணஞ் செய்தல்: "பயந்தபு கானம், எம்மொடு கழிந்தன ராயிற் கம்மென, வம்புவிரித் தன்ன பொங்குமணற் கான்யாற்றுப்,படுசினை தாழ்ந்த பயிலிண ரெக்கர், மெய்புகு வன்ன கைகவர் முயக்கம்,அவரும் பெறுகுவர் மன்னே" (அகநா. 11:6-11).
6. நெஞ்சின் துணிவு: "சேய்வயிற் போந்தநெஞ் சேயஞ்சத் தக்கதுன் சிக்கனவே" (திருச்சிற். 343).
(347)