(தலைவன் பிரிந்த காலத்தில் தோழியை நோக்கி, “தலைவர் பிரிவினால் மாலைக்காலம் எனக்கு நோய் தருகின்றது” என்பது படத் தலைவி கூறியது.)
 352.   
நெடுநீ ராம்ப லடைப்புறத் தன்ன  
    
கொடுமென் சிறைய கூருகிர்ப் பறவை 
    
அகலிலைப் பலவின் சாரன் முன்னிப் 
    
பகலுறை முதுமரம் புலம்பப் போகும் 
5
சிறுபுன் மாலை யுண்மை 
    
அறிவேன் றோழியவர்க் காணா வூங்கே. 

என்பது பிரிவிடைத் தோழிக்குக் கிழத்தி மெலிந்து கூறியது.

கடியலூர் உருத்திரங் கண்ணனார் (பி-ம். கடியலூருத்திரனங் கண்ணன்).

    (ப-ரை.) தோழி--, நெடு நீர் ஆம்பல் - ஆழமாகிய நீரின் கண் வளர்ந்த ஆம்பிலினது, அடை புறத்து அன்ன - இலையின் புறத்தைப் போன்ற, கொடு மெல் சிறைய - வளைந்த மெல்லிய சிறையை யுடையனவாகிய, கூர் உகிர் பறவை - கூரிய நகங்களையுடைய வௌவால்கள், அகல் இலை பலவின் சாரல் முன்னி - அகன்ற இலைகளையுடையபலாமரங்களையுடைய மலைச்சாரலை நோக்கி, பகல் உறை முது மரம் - பகற்காலத்தில் தாம் உறைந்த பழைய மரம், புலம்ப - தனிக்கும்படி, போகும்--, சிறு புல் மாலை உண்மை - சிறிய புல்லிய மாலைக்காலம் உளதாதலை, அவர் காணா ஊங்கு - அத்தலைவரைக் காணாத காலத்தில், அறிவேன் - உணர்வேன்.

     (முடிபு) தோழி, அவர்காணாவூங்கு மாலையுண்மை அறிவேன்.

     (கருத்து) தலைவன் பிரிந்த பின்னர் மாலைக்காலம் எனக்குத் துன்பத்தைத் தருகின்றது.

     (வி-ரை.) நெடுநீர்: நெடுமை, ஆழத்தின்மேற் சென்றது; “நெடும் புனலுள் வெல்லு முதலை” (குறள். 495) என்பதன் உரையைப் பார்க்க.

     தலைவனைக் காணாவிடத்து மாலைக்காலத்தில் காமநோய் மிகுதலின், ‘அவர்க்காணாவூங்கு மாலையுண்மை அறிவேன்’ என்றாள். அவர்: நெஞ்சறிசுட்டு.

    ஒப்புமைப் பகுதி 2. கொடுஞ்சிறைப் பறவை: குறுந். 92:2.

     மென்சிறைக் கூருகிர்ப் பறவை: குறுந். 201:3.

    4. வௌவால் பகலுறை மரம்: திருச்சிற். 375.

    1-4. வௌவால் மாலையில் தாம் இருந்த மரத்தை நீங்கி வேறிடம்செல்லுதல்:

  
“பசைபடு பச்சை நெய்தோய்த் தன்ன, ... மாச்சிறைப்  
  
 பறவை, பகலுறை முதுமரம் புலம்பப் போகி”         (அகநா. 244:1-3).  

    1-5. குறுந். 172:1-2, ஒப்பு.

    5-6. தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி மாலைக் காலத்தைஅறிதல்: (குறுந். 386:2-4); “மாலைநோய் செய்தன் மணந்தாரகலாத,காலை யறிந்த திலேன்” (குறள். 1226)

(352)