(வாயில் பெறாத தலைமகன் மைந்தனும் ஆற்றாமையும் வாயிலாகத்தானே புக்குப் பாயலிற் புதல்வனைத் தழுவிக் கொண்ட காலத்தில் தலைவி ஊடல்தணிந்ததைத் தோழி பாணனுக்குக் கூறியது.)
 359.    
கண்டிசிற் பாண பண்புடைத் தம்ம  
    
மாலை விரிந்த பசுவெண் ணிலவிற்  
    
குறுங்காற் கட்டி னறும்பூஞ் சேக்கைப்  
    
பள்ளி யானையி னுயிர்த்தன னசையிற்  
5
புதல்வற் றழீஇயினன் விறலவன்  
    
புதல்வன் றாயவன் புறங்கவைஇ யினளே.  

என்பது பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிப் பெறாது தானேபுக்குக் கூடியது கண்டு தோழி பாணற்குச் சொல்லியது.

பேயன்.

     (பி-ம்.) 4. ‘னுயிரா வசைஇப்’ 6. ‘புதல்வற் புல்லின்’.

     (ப-ரை.) பாண--, விறலவன் - வெற்றியையுடையதலைவன், மாலை விரிந்த பசு வெள் நிலவில் - மாலைக்காலத்திலே விரிந்த இளைய வெள்ளிய நிலாவொளியில்,குறுகால் கட்டில் நறு பூ சேக்கை - குறிய கால்களையுடையகட்டிலினிடத்தேயுள்ள நறிய மலர் பரப்பிய படுக்கையில்,பள்ளி யானையின் உயிர்த்தனன் - படுத்தலையுடையயானையைப்போலப் பெருமூச்சு விட்டானாகி, நசையின் - விருப்பதினால், புதல்வன் தழீஇயினன் - தன் பிள்ளையைத் தழுவினான், புதல்வன் தாய் - அப்பிள்ளையின் தாயாகிய தலைவி, அவன் புறம் கவைஇயினள் - அத்தலைவனது புறத்தைத் தழுவினாள், கண்டிசின் - இதனைப் பார்ப்பாயாக; பண்பு உடைத்து - இச்செயல் அழகையுடையது!

     (முடிபு) பாண, விறலவன் புதல்வற்றழீஇயினன்; தாய் அவன்புறங்கவைஇயினள்; கண்டிசின்; பண்புடைத்து!

     (கருத்து) தலைவி புலவி தணிந்தாள்.

     (வி-ரை.) பாணன் வாயிலாகப் புக்கவிடத்து மறுத்த தலைவி,தலைவனே எதிர்ப்பட்டுப் பாயலிற் படுத்துப் புதல்வனைத் தழுவியகாலத்தில் தான் புலவி தீர்ந்து சென்று அவனைத் தழுவினாள்; இக்கருத்தை இச்செய்யுளின் ஆசிரியர்,

  
“புதல்வற் கவைஇயினன் றந்தை மென்மொழிப்  
  
 புதல்வன் றாயோ விருவருங் கவைஇயினள்  
  
 இனிது மன்றவவர் கிடக்கை  
  
 நனியிரும் பரப்பினிவ் வுலகுட னுறுமே”    (ஐங். 409) 

என்று பிறிதோர் இடத்தும் அமைத்தனர்.

    கண்டிசின்: சின் முன்னிலையசை. பண்பு - கற்புக் குணமெனலுமாம்;தலைவனது பிழையை மறந்து புலவி நீங்கி அவனைத் தழுவிய இச்செயல்கற்புப்பண்பை உடையதெனக் கொள்க. அம்ம: வியப்பைப் புலப் படுத்தியது. பசு வெண்ணிலவு: பசுமை இளமையிற் சென்றது.

     மேற்கோளாட்சி மு. தலைவியின் மாண்புகளை அகம்புகல் மரபின் வாயில்கள்தம்முட் கூறியது (தொல். கற்பு. 11, இளம்).

     ஒப்புமைப் பகுதி 2. பசுவெண்ணிலவு: குறுந். 129:4, ஒப்பு; அகநா. 57;11, 3, கட்டிலும் சேக்கையும்: நெடுநல். 115-35; அகநா. 93:13-5.

     4. தலைவன் யானையைப்போல உயிர்த்தல்: குறுந். 142:4,ஒப்பு. 5. தலைவன் புதல்வனைத் தழுவுதல்: “முதல்வன் பெரும்பெயர்முறையுளிப் பெற்ற, புதல்வற் புல்லிப் பொய்த்துயி றுஞ்சும்” (கலித்.75:24-5).

     6. புதல்வன்தாய்: குறுந். 8:6, ஒப்பு. மு. ஐங். 402.

(359)