வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன் (பி-ம். வேற்பற்றூர்க் கண்ணகன் கூத்தன்.) (பி-ம்.) 1. ‘வேலன்’ 2. ‘வினவுத லுடையேன்’ 3. ‘சில்லவிழடையொடு’ 7. ‘தண்டா ரகலமு’.
(ப-ரை.) முருகு அயர்ந்து வந்த - முருகனை வழிபட்டு வந்த, முது வாய் வேல - அறிவு வாய்த்த வேலனே, சினவல் ஓம்புமதி - கோபித்தலைப் பாதுகாப்பாயாக; வினவுவது உடையேன் - நின்னைக் கேட்பது ஒன்று உடையேன்: பல்வேறு உருவின் - பலவாகிய வேறுபட்ட நிறத்தையுடைய, சில் அவிழ் மடையொடு - சில சோற்றையுடைய பலியோடு, சிறு மறி கொன்று - சிறிய ஆட்டுக்குட்டியைக் கொன்று, இவள் நறு நுதல் நீவி - இத்தலைவியினது நறிய நெற்றியைத் தடவி, வணங்கினை கொடுத்தியாயின் - முருகக் கடவுளை வணங்கிப் பலியாகக் கொடுப்பாயாயின், அணங்கிய -இவளைத் துன்புறுத்திய, விண்தோய் மா மலை சிலம்பன் - வானத்தை அளாவிய பெரிய மலைப்பக்கத்தையுடைய தலைவனது, ஒள் தார் அகலமும் - ஒள்ளிய மாலையை யணிந்த மார்பும், பலி உண்ணுமோ - நீ கொடுக்கும் பலியைஉண்ணுமோ?
(முடிபு) வேல, சினவல் ஓம்புமதி; வினவுவது உடையேன்:மறிகொன்று, நுதல் நீவிக் கொடுத்தியாயின் சிலம்பன் அகலமும் பலிஉண்ணுமோ?
(கருத்து) இவளுக்குற்ற நோய் ஒரு தலைவனால் வந்தது.
(வி-ரை.) முது வாய் வேலன் - முதுமை வாய்ந்த வேலனெனலும்பொருந்தும். பலவகை நிறங்களையுடைய சோற்றை வேலன் முருகனுக்குப்பலியாக இட்டான். சிறுமறியென்றது இரங்கத்தக்க இளமையுடைய தென்னும் நினைவிற்று.
நுதனீவியென்று பொதுப்படக் கூறினும் மறியின் உதிரம் கலந்த மண்ணால் நுதல் நீவுதல் மரபென்பது.
| “....... ...... ...... வாணுதலின் |
| மன்றி லரிந்த மறியின் குருதியின் மண்ணுமள்ளிச் |
| சென்றொரு வேலர்கை தீண்டவென் செய்தது தீவினையே” (அம்பிகா. 267) |
என்னும் செய்யுளால் தெரியவருகிறது. அச்சம் நீக்குவதற்குத் தடவுதலும் உண்டு. சிலம்பன்: இடுகுறி மாத்திரையாய் நின்றது (திருச்சிற். 128, பேர்.)
இந்நோய் தலைவனது மார்பால் வந்தது; அதனையன்றிப் பிறிதுமருந்தில்லை யென்பாள் ‘அகலமும் உண்ணுமோ பலியே’ என்றாள். அஃது உண்ணாதாதலின் இது செய்தும் பயனில்லையென்பது இதனாற் போந்தது.
இங்ஙனம் தோழி வெறிவிலக்கினமையின், தாய்க்கு ‘அச்சிலம்பன் யார்?’ என்னும் ஆராய்ச்சி பிறக்கும்; அது வரைதற்கு ஏதுவாகும்.
மேற்கோளாட்சி 1. கண்டோர் கேட்பத் தலைவி கூறியது ( தொல். செய். 197, பேர்.); செவிலி கேட்பத் தலைவி கூறியது. ( தொல். செய். 196, ந.)
மு. வெறியாடுமிடத்து வேலற்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது (இறை. 16); வேலனொடு கூறுதற்கண் தலைவி உசாவியது( தொல். களவு. 24, இளம்; பொருள். 13, ந.)
ஒப்புமைப் பகுதி 1. முதுவாய் வேலன்: அகநா. 388:19.
3. சில்லவிழ் மடை: “புல்லகத் திட்ட சில்லவிழ் வல்சி” (புறநா. 360:18.)
4. நுதல் நீவுதல்: குறிஞ்சிப். 182; நற். 28:2, 316:6; கலித். 21:6;அகநா. 49:6, 165:9. 240:10; தமிழ் நெறி. மேற். 96.
1-4. வேலன் சிறுமறி கொல்லல்: “சிறுகுள கருந்துபு தாய்முலை பெறாஅ, மறிகொலைப் படுத்தல் வேண்டி வெறிபுரி, ஏதில் வேலன்” (அகநா. 292:3-5.)
5-7. அணங்கிய அகலம்: “நாடன், மணங்கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்” (அகநா. 22:2-3.)
மு. | “தண்ணென் சாயலிவ ளுண்ணோய் தணிய |
| எண்ணினை கொடுத்தி யாயின் |
| அண்ண லாகமு முண்ணுமோ பலியே” (தமிழ் நெறி. மேற். 104); |
| “வண்டா ரிரும்பொழில் வல்லத்துத் தென்னற்கு மாறெதிர்ந்து |
| விண்டா ருடலின் மறியறுத் தூட்டி வெறியயர்ந்து |
| தண்டார் முருகற் றருகின்ற வேலநற் றண்சிலம்பன் |
| ஒண்டா ரகலமு முண்ணுங் கொலோநின் னுறுபலியே” (பாண்டிக்.); |
| “கோல மறியின் குருதியாற் கொய்ம்மலரால் |
| வேல னயரும் வெறியாட்டுச் - சால |
| மடமார் மயின்முருக னன்றியே யண்ணல் |
| தடமார்பு முண்ணுமோ தான்” (கிளவித்தெளிவு.) |
(362)