(தலைவன் வரைந்து கொள்வானென்பதைத் தலைவிக்கு உணர்த்திய தோழி அவள் உவகை மீதூராமலிருக்கும் பொருட்டு, “தலைவர் தண்ணளிசெய்யாராயினும், அவர் மலையைக் கண்டு ஆற்றியிருப்பாயாக” என்று கூறியது.)
 367.    
கொடியோர் நல்கா ராயினும் யாழநின்  
    
தொடிவிளங் கிறைய தோள்கவின் பெறீஇயர்  
    
உவக்காண் டோழி யவ்வந் திசினே  
    
தொய்யன் மாமழை தொடங்கலி னவர்நாட்டுப் 
5
பூச லாயம் புகன்றிழி யருவியின் 
    
மண்ணுறு மணியிற் றோன்றும் 
    
தண்ணறுந் துறுக லோங்கிய மலையே. 

என்பது (1) வரைவுணர்த்திய தோழி தலைமகட்குக் கழியுவகை மீதூராமை உணர்த்தியது.

     (2) வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி,ஆற்றும் வகையால் ஆற்றுவித்ததூஉமாம்.

மதுரை மருதன் இளநாகன்.

     (பி-ம்.) 2. 'தொடிவழங்', 'பெறீஇ', 'பெறீஇய', 4. 'துடங்கலின்'; 5. 'லாய','யருவி'.

    (ப-ரை.) (ப-ரை.) தோழி--, தொய்யல் மா மழை- நெகிழ்ச்சியை யுடைய பெரிய மழை, தொடங்கலின் - பெய்யத் தொடங்கு தலினால், அவர் நாட்டு - அத்தலைவருடைய நாட்டிலுள்ள, பூசல் ஆயம் - ஆரவாரத்தையுடைய மகளிர்திரள், புகன்று இழி அருவியின் - விரும்பி நீராடும் பொருட்டுப் புகுகின்றஅருவியினால், மண்ணுறு மணியின் தோன்றும்- கழுவப்பட்ட நீல மணியைப் போலத் தோன்றுகின்ற, தண் நறு துறு கல் - தண்ணிய நறிய குண்டுக்கற்கள், ஓங்கிய மலை - உயர்ந்த மலையை, கொடியோர் நல்காராயினும் - கொடுமையை யுடைய தலைவர் தண்ணளி செய்யாராயினும், நின் தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர் - வளைகள் விளங்கும் சந்துகளையுடைய நின்தோள்கள் அழகு பெறும்வண்ணம், அவ்வந்திசின் - அங்கே வந்தாயாகி, உவக்காண் - பார்ப்பாயாக.

     (முடிபு) தோழி, கொடியோர் நல்காராயினும்நின் தோள் கவின் பெறீஇயர், மலையை அவ்வந்திசின்; உவக்காண்.

     (கருத்து) நீ தலைவரது மலையைக் கண்டு ஆற்றியிருப்பாயாக.

     (வி-ரை.) கொடியோர் நல்காராயினும் என்றது, “வரைவாரோ?வரையாரோ?” என்னும் ஐயத்தை நிகழ்த்திக் கழியுவகை மீதூராமற் செய்தது. யாழ்: அசை நிலை. தொடி வழங்கிறைய என்னும் பாடத்திற்குமெலிவினால் தொடிகளை நழுவ விடும் சந்துகளையுடைய வென்று பொருள் கொள்க; “தொடி நிலை நெகிழச் சாஅய்” (தொல். களவு. 20, ந. மேற்.) என்று வருதல் காண்க.

    தம் தலைவரது மலையைக் கண்டு களித்தல் மகளிர் இயல்பு. உவக்காணாணென்பது ஒட்டிநின்ற இடைச்சொலென்பர் பரிமேலழகர் (குறள். 1185, உரை.) வந்திசின்: சின் முன்னிலை யசைச் சொல்.

    தொய்யல் மாமழை - நிலத்தை நன்றாக நனைக்கும் பெரிய மழையெனலும் ஆம் (மலைபடு. 365, ந.) துடங்கலென்னும் பாடத்திற்குப் பொருந்த லென்று பொருள் கொள்க; இச்சொல் துடக்கலென்பதன் தன்வினை.அருவியினாற் கழுவப்பட்ட மலை மண்ணுறு மணியிற் றோன்றியது.

    அருவி மண்ணுறுமணியிற்றோன்றும் என்ற பாடத்திற்கு, அருவியானது கழுவப்பட்ட பளிங்கைப் போலத் தோன்றுமென்று பொருள் கொள்க.

    இரண்டாவது கருத்து: வரைவு நீட்டித்தவிடத்துத் தோழி, “அவர் தண்ணளி செய்யாராயினும் அவரது மலையை நோக்கி ஆற்றுவாயாக” என்று கூறி ஆற்றுவித்தது. இக்கருத்து சிறப்புடையதாகத் தோற்றுகின்றது.

     ஒப்புமைப் பகுதி 1. தலைவனைக் கொடியனென்றல்: குறுந். 26:8, ஒப்பு.

     2. உவக்காண்: நற். 237:6, 242:6; துங். 206:1, 207:2; அகநா. 4:13; குறள். 1185.

     5-6. பி-ம். அருவிக்குப் பளிங்கு: குறிஞ்சிப். 57; அகநா. 56:2; புறநா.137:11, 150:27.

     6-7. மலைக்கு மணி: (குறுந். 240:7); “மணியிற் றோன்று, மம்மலை கிழவோன்” (நற். 173:6-7); “மணிநிற மால்வரை”, “மணிநிறங் கொண்ட மாமலை வெற்பில்” (ஐங். 208:4, 224:2); “மணிநிறங் கொண்ட மலை”,“மணிபுரை மாமலை” (பரி.திரட்டு, 1:9, 74.)

     2-7. தலைவி தலைவனது மலையைப் பார்த்து உவத்தல்: குறுந். 240:6-7, ஒப்பு.

(367)