(அலர் மிக்கவிடத்து வருந்திய தலைவியை நோக்கி, “தலைவனதுநட்பு என்றும் அழியாதது” என்று தோழி கூறியது.)
 373.   
நிலம்புடை பெயரினு நீர்தீப் பிறழினும்  
    
இலங்குதிரைப் பெருங்கடற் கெல்லை தோன்றினும் 
    
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை யஞ்சிக் 
    
கேடெவ னுடைத்தோ தோழி நீடுமயிர்க் 
5
கடும்ப லூகக் கறைவிர லேற்றை 
    
புடைத்தொடு புடைஇப் பூநாறு பலவுக்கனி 
    
காந்தளஞ் சிறுகுடிக் கமழும் 
    
ஓங்குமலை நாடனொ டமைந்தநந் தொடர்பே. 

என்பது அலர் மிக்கவழித் (பி-ம். மிக்கவழி ஆற்றாளாகித்) தலைமகட்குத்தோழி சொல்லியது.

மதுரைக் கொல்லன் புல்லன் (பி-ம். மதுரைக் கொல்லம் புல்லன்,மதுரைக் கோலம் புல்லன், மதுரைக் கொலம் புல்லன்.)

     (பி-ம்.) 1. ‘நீர்திரிந்து பிறழினும்’; 6. ‘புடையூ நாறு’; 7. ‘காந்தள்சிறுகுடிக்’; 8. ‘அமைந்த தொடர்பே’.

    (ப-ரை.) தோழி--, நீடு மயிர் - நீண்ட மயிரையும், கடுபல் - கூரிய பற்களையுமுடைய, ஊகம் கறை விரல்ஏற்றை - கருங்குரங்கினது கறுப்பையுடைய விரல்களையுடைய ஆணானது, புடை தொடுபு - பக்கத்திலே தோண்டியதனால், உடைஇ - உடைந்து, பூ நாறு பலவுகனி - மலரின்மணத்தை வீசும் பலவினது பழம், காந்தள் அம் சிறு குடிகமழும் - காந்தளையுடைய அழகிய சிறிய ஊரினிடத்தேமணக்கின்ற, ஓங்கு மலைநாடனொடு - ஓங்கிய மலையையுடைய நாடனோடு, அமைந்த நம் தொடர்பு - பொருந்தியநமது நட்பானது, நிலம் புடை பெயரினும் - உலகம் இடம்மாறினாலும், நீர் தீ பிறழினும் - நீரும் தீயும் தம் இயற்கையினின்றும் மாறினாலும், இலங்குதிரை பெரு கடற்கு எல்லைதோன்றினும் - விளங்குகின்ற அலைகளையுடைய பெரியகடலுக்கு எல்லை தோன்றினாலும், வெ வாய் பெண்டிர்கௌவை அஞ்சி - வெவ்விய வாயையுடைய மகளிரதுபழிச்சொல்லை அஞ்சி, கேடு எவன் உடைத்து - கெடுதல்எவ்வாறு உடையதாகும்?

     (முடிபு) தோழி, நிலம்பெயரினும் நீரும் தீயும் பிறழினும் எல்லை தோன்றினும் தொடர்பு கேடு எவன் உடைத்து?

     (கருத்து) தலைவனோடு அமைந்த தொடர்பு என்றும் கெடாதது.

     (வி-ரை.) எல்லை - வரம்பு; முடிவுமாம். வெவ்வாய் - அலர் கூறுதலால் வெம்மையையுடைய வாய்; அவர் கூறும் அலர் நெஞ்சைச் சுடுவதாதலின் இங்ஙனம் கூறினாள். ‘உலகு பிறழ்ந்தாலும் ஊழ்வசத்தால் அமைந்த தொடர்பு கெடாது’ என்றாள். உடைத்தோ: ஓ அசை நிலை. தொடுபு: எச்சத்திரிபு; தொடவென்னும் பொருட்டு.

    ஒற்றுமையால், நந்தொடர்பெனக் கூறினாள்.

     ஒப்புமைப் பகுதி 1. நிலம் புடை பெயர்தல்: “பெருநிலங் கிளரினும்”,“நிலம்புடை பெயர்வ தாயினும்” (நற். 201:10, 289:2); “நிலந்திறம்பெயருங் காலை யாயினும்” (பதிற். 63:6); “நிலம்புடை பெயர்வதாயினும்” (புறநா. 34:5); “இருநிலம் பெயரினு மெம்மாட்டில”(பெருங். 1.58:92).

     2. கடற்கு முடிவு தோன்றுதல்: “அறந்திருந் துன்னருளும் பிறி தாயி னருமறையின், திறந்திரிந் தார்கலி யும்முற்றும் வற்றுமிச் சேணிலத்தே” (திருச்சிற். 213).

     3. வெவ்வாய்ப்பெண்டிர் கௌவை; “வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்” (அகநா. 50:3.)

     5. கருவிரலையுடைய ஊகம்: “கருவிரன் மந்தி” (மலைபடு. 311; ஐங். 272:1, 280:1).

     4-5. ஊகத்தின் மயிர்: (குறுந். 90:3-4); “குருமயிர்க் கடுவன்” (ஐங். 275:1). பூநாறு பலவுக்கனி: குறுந். 90:4.

     5-6. பலாப்பழத்தைக் குரங்கு தோண்டுதல்: குறுந். 342:1, ஒப்பு.

     7. காந்தளஞ் சிறுகுடி: அகநா. 315:5. சிறுகுடி: குறுந். 184:2, ஒப்பு.

    மு. குறுந். 170.

(373)