(தலைவன் சிறைப்புறத்தே நிற்ப, “காவலருடைய காவல் மிக்கது”என்று தலைவிக்குக் கூறும் வாயிலாகத் தோழி, வரைதல்வேண்டுமென்பதை அவனுக்கு உணர்த்தியது).
 375.    
அம்ம வாழி தோழி யின்றவர்  
    
வாரா ராயினோ நன்றே சாரற் 
    
சிறுதினை விளைந்த வியன்க ணிரும்புனத் 
    
திரவரி வாரிற் றொண்டகச் சிறுபறை 
5
பானாள் யாமத்துங் கறங்கும் 
    
யாமங் காவல ரவியா மாறே. 

என்பது இரவுக்குறிக்கண் சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச்சொல்லுவாளாய் இருபொழுதும் மறுத்து வரைவு கடாயது.

(ஆசிரியர் பெயர் காணப்படவில்லை)

     (பி-ம்.) 4. ‘திரவரு’; 5. ‘யாமத்துக்’; 6. ‘ரவியன்மாரன்றே’, ‘ரவியன்மான்றே’.

    (ப-ரை.) தோழி--, அம்ம - ஒன்று கூறுவன் கேட்பாயாக, சாரல் - மலைப்பக்கத்தில், சிறு தினை விளைந்த வியல்கண் இரு புனத்து - சிறிய தினை விளைந்த அகன்ற இடத்தையுடைய பெரிய கொல்லையில், இரவு அரிவாரின் - இராக்காலத்தே தினைக்கதிரை அரிபவர்களைப்போல, தொண்டகம்சிறுபறை - தொண்டகமாகிய சிறிய பறை, பால்நாள் யாமத் தும் - பாதியிரவிலும், யாமம் காவலர் - இராக் காவலாளிகள்,அவியாமாறு - தூங்காமையினால், கறங்கும் - ஒலிக்கும்,இன்று--, அவர் - அத்தலைவர், வாராராயின்--, நன்று -நலமாகும்.

     (முடிபு) காவலர் அவியாமாறு கறங்கும்; இன்று அவர் வாராராயின் நன்று.

     (கருத்து) தலைவர் இரவில் வருதல் நன்றன்று.

     (வி-ரை.) வாழி: அசைநிலை. அவர்: நெஞ்சறி சுட்டு. ‘இன்று வாராராயின்’ என்று கூறினும், என்றும் இராவருதல் நன்றன்றென்பதே தோழியின் நினைவு. தினை விளைந்தமையின் அரிந்தனர். தினையின் மிகுதியினால் இரவிலும் அரிந்தனர்; இதனாற் பகலிலும் அரிந்தமை சொல்லாமே பெறப்பட்டது.

    இரவில் விலங்குகள் அணுகாதிருத்தற் பொருட்டுத் தொண்டகப்பறையை முழக்குவர். தொண்டகப்பறை குறிஞ்சிநிலத்திற்கு உரியது.

    அவிதல் - தூங்குதல் (குறுந். 6:1) மாறு: ஏதுப் பொருள் தருவதோரிடைச் சொல். ஏகாரம் ஈற்றசை.

    தினை விளைந்தமையை உவமை வாயிலாக நினைவுறுத்திப் பகற் குறியையும், காவலர் கடுகுதலைக் கூறி இரவுக் குறியையும் மறுத்துவரைவு கடாயினாள்.

     ஒப்புமைப் பகுதி 1. அம்மவாழி தோழி: குறுந். 77:1, ஒப்பு. 3. சிறுதினை:குறுந். 105:1, 133:1. 4. தொண்டகச் சிறுபறை: முருகு. 197; 104:4-6;அகநா. 118:3. 5. பானாள்; குறுந். 94:3, ஒப்பு. 6. யாமம் காவலர்: புறநா. 37:9.

(375)