படுமரத்து மோசிக் கொற்றன் (பி-ம். படுமாற்றூர் மோசிகீரன் கொற்றனார், படுமரத்து மோகிக் கொற்றன், படுமாத்து மோசிக் கொற்றன்). (பி-ம்.) 2. ‘தாஅங்’; 5. ‘பொலிந்த’.
(ப-ரை.) நெஞ்சே, மன் உயிர் அறியா - நிலைபெற்ற உயிர்த் தொகுதியினரால் முற்ற அறியப்படாத, துன் அரு பொதியில் - அணுகுதற்கரிய பொதியில் மலையிலுள்ள, சூர்உடை அடுக்கத்து - தெய்வங்களையுடைய பக்கத்தில்வளர்ந்த, ஆரம் கடுப்ப - சந்தனத்தைப்போல, வேனிலானே - வேனிற்காலத்தில், தண்ணியள் - இத்தலைவி குளிர்ச்சியையுடையாள், பனி - பனிக்காலத்தில், வாங்கு கதிர் - அடக்கிக்கொண்ட சூரியனுடைய கதிர்கள், தொகுப்ப - மறைய,கூம்பி - குவிந்து, ஐயென - அழகிதாக, அலங்கு வெயில் - அசைகின்ற வெயிலை, பொதிந்த தாமரை - உட்பொதிந்ததாமரை மலரின், உள் அகத்து அன்ன - உள்ளிடத்தைப்போன்ற, சிறு வெம்மையள் - சிறிய வெம்மையை உடையாள்.
(முடிபு) வேனிலானே தண்ணியள்; பனியில் சிறு வெம்மையள்.
(கருத்து) தலைவி பிரிதற்கரிய இயல்பினள்.
(வி-ரை.) அறிதற்கும் துன்னுதற்கும் அரிய பொதியிலென்றாள்.
| “முயலுநர் முற்றா வேற்றரு நெடுஞ்சிமைப் |
| புகலரும் பொதியில்” (அகநா. 322:13-4) |
சூர் - முருகனும் வரையரமகளிரும், பொதியிற் சந்தனம்சிறப்புடைத்தாதலின் அதனைக் கூறினான். ‘அடுக்கத்தாஅம்’ என்றபாடத்திற்கு, மலையிலுள்ள நீரென்று பொருள் கொள்க; பொதியிற்சுனைநீர்,
| “தென்றிசை யெல்லை விண்புகு பொதியிற் |
| சூருடை நெடுஞ்சுனை நீர்” (தொல். களவு. 43, ந. மேற்.) |
என்று சிறப்பிக்கப்படும். வெயில் - வெம்மை.
வெம்மையையுடைய வேனிலில் தண்ணியளாகவும் குளிர் மிகுதியை யுடைய பனிக்காலத்தில் சிறுவெம்மையளாகவும் தலைவியிருத்தலின், எக்காலத்தும் அணைதற்கு இனியளானாள்.
ஒப்புமைப் பகுதி 2. சூருடையடுக்கம்: நற். 359:9;அகநா. 158:8, 162:25,198:14-7, 359:11. 1-2. பொதியிற் சந்தனம்:அகநா. 13: 2-5; சிலப். 4:38; பெருங். 1. 58:30, 2. 4:96.
(376)