(பொருள்வயிற் பிரியக் கருதிய நெஞ்சை நோக்கித் தலைவியின் நல்லியல்பு கூறித் தலைவன் செலவு தவிர்ந்தது.)
 376.    
மன்னுயி ரறியாத் துன்னரும் பொதியிற்  
    
சூருடை யடுக்கத் தாரங் கடுப்ப 
    
வேனி லானே தண்ணியள் பனியே 
    
வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி யையென 
5
அலங்குவெயிற் பொதிந்த தாமரை 
    
உள்ளகத் தன்ன சிறுவெம் மையளே. 

என்பது பொருள் வலிக்கும் நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச்செலவழுங்கியது.

படுமரத்து மோசிக் கொற்றன் (பி-ம். படுமாற்றூர் மோசிகீரன் கொற்றனார், படுமரத்து மோகிக் கொற்றன், படுமாத்து மோசிக் கொற்றன்).

     (பி-ம்.) 2. ‘தாஅங்’; 5. ‘பொலிந்த’.

    (ப-ரை.) நெஞ்சே, மன் உயிர் அறியா - நிலைபெற்ற உயிர்த் தொகுதியினரால் முற்ற அறியப்படாத, துன் அரு பொதியில் - அணுகுதற்கரிய பொதியில் மலையிலுள்ள, சூர்உடை அடுக்கத்து - தெய்வங்களையுடைய பக்கத்தில்வளர்ந்த, ஆரம் கடுப்ப - சந்தனத்தைப்போல, வேனிலானே - வேனிற்காலத்தில், தண்ணியள் - இத்தலைவி குளிர்ச்சியையுடையாள், பனி - பனிக்காலத்தில், வாங்கு கதிர் - அடக்கிக்கொண்ட சூரியனுடைய கதிர்கள், தொகுப்ப - மறைய,கூம்பி - குவிந்து, ஐயென - அழகிதாக, அலங்கு வெயில் - அசைகின்ற வெயிலை, பொதிந்த தாமரை - உட்பொதிந்ததாமரை மலரின், உள் அகத்து அன்ன - உள்ளிடத்தைப்போன்ற, சிறு வெம்மையள் - சிறிய வெம்மையை உடையாள்.

     (முடிபு) வேனிலானே தண்ணியள்; பனியில் சிறு வெம்மையள்.

     (கருத்து) தலைவி பிரிதற்கரிய இயல்பினள்.

     (வி-ரை.) அறிதற்கும் துன்னுதற்கும் அரிய பொதியிலென்றாள்.

  
“முயலுநர் முற்றா வேற்றரு நெடுஞ்சிமைப்  
  
 புகலரும் பொதியில்”        (அகநா. 322:13-4) 

    சூர் - முருகனும் வரையரமகளிரும், பொதியிற் சந்தனம்சிறப்புடைத்தாதலின் அதனைக் கூறினான். ‘அடுக்கத்தாஅம்’ என்றபாடத்திற்கு, மலையிலுள்ள நீரென்று பொருள் கொள்க; பொதியிற்சுனைநீர்,

  
“தென்றிசை யெல்லை விண்புகு பொதியிற் 
  
 சூருடை நெடுஞ்சுனை நீர்”    (தொல். களவு. 43, ந. மேற்.)  

என்று சிறப்பிக்கப்படும். வெயில் - வெம்மை.

    வெம்மையையுடைய வேனிலில் தண்ணியளாகவும் குளிர் மிகுதியை யுடைய பனிக்காலத்தில் சிறுவெம்மையளாகவும் தலைவியிருத்தலின், எக்காலத்தும் அணைதற்கு இனியளானாள்.

     ஒப்புமைப் பகுதி 2. சூருடையடுக்கம்: நற். 359:9;அகநா. 158:8, 162:25,198:14-7, 359:11. 1-2. பொதியிற் சந்தனம்:அகநா. 13: 2-5; சிலப். 4:38; பெருங். 1. 58:30, 2. 4:96.

(376)