வெள்ளிவீதியார். (பி-ம்.) 3. ‘விழவணிக்’; 5. ‘புன்கணொடும்’.
(ப-ரை.) தோழி--, வெள் மணல் விரிந்த - வெள்ளிய மணல் பரவிய, வீததை கானல் - மலர்கள் செறிந்த சோலையையுடைய, தண்ணந் துறைவன் - தண்ணிய கடற்றுறையையுடைய தலைவன், தணவா ஊங்கு - என்னைப் பிரியாதமுன்காலத்தில், யான்--, வால் இழை மகளிர் - தூய அணிகலன்களை யணிந்த மகளிர், விழவு அணி கூட்டும் - விழவுக்குரிய அலங்காரங்களைத் தொகுக்கின்ற, மாலையோ அறிவேன் - மாலைக்காலத்தையே அறிவேனாயினேன்; மன் - இனி அது கழிந்தது! மாலை - அம்மாலைக் காலம், நிலம்பரந்தன்ன புன்கணொடு - பூமி பரந்தது போன்ற பெரியதுன்பத்தோடு, புலம்புடைத்து ஆகுதல் - தனிமையைஉடையதாதலை, அறியேன் - அப்பொழுது அறியேன்.
(முடிபு) துறைவன் தணவாவூங்கு யான் மகளிர் அணி கூட்டும் மாலையோ அறிவேன்மன்! மாலை புலம்புடைத்தாகுதல் அறியேன்.
(கருத்து) தலைவரது பிரிவினால் மாலையில் என்பால் துன்பம் மிக்கது.
(வி-ரை.) தலைவி மாலைப்பொழுது கண்டு இரங்கினாளாக, “முன்பெல்லாம் இதுகண்டு வருந்தினாயல்லை” என்ற தோழிக்குக்கூறியது இது.
மகளிர் விழவணி கூட்டு மாலையென்றது யானும் அவரோடுவிழவணி கூட்டி மகிழ்ந்திருந்தேனென்னும் நினைவினது. மாலையோ:ஓ பிரிநிலை. மன்; கழிவிரக்கப் பொருளது. யானே: ஏ அசைநிலை. நிலம் பரந்தன்ன புன்கணென்றது அதன் பேரளவையுணர்த்தியபடி; “நிலத்தினும் பெரிதே” (குறுந். 3:1) என்று பெருமைக்கு நிலம் கூறப்படுதல் மரபு.
புன்கண் - காமநோய் மிகுவதனால் வரும் துன்பம். புலம்பு - தலைவனைப் பிரிந்த தனிமை. அப்பொழுது அறியே னென்றமையின், இப்பொழுது அறிந்தேனென்றாளாயிற்று.
ஒப்புமைப் பகுதி 3. வாலிழை மகளிர்: குறுந். 45:2; கலித். 119:14.
3. பி-ம். விழவணிக் கூட்டும்: அகநா. 26:3.
3-4. மாலையில் மகளிர் அலங்காரம் செய்து கொள்ளல்: “மாலை மணிவிளக்கங் காட்டி யிரவிற்கோர், கோலங் கொடியிடையார் தாங் கொள்ள” (சிலப். 9:3-4.) 2-4. குறுந். 352:5-6, ஒப்பு.
(386)