(தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றாதிருந்த தலைவியை, “நீ ஆற்றல் வேண்டும்” என்று வற்புறுத்திய தோழிக்கு, “தலைவர் சென்ற வழியானது கடத்தற்கரிய கொடுமையை யுடையதென்று அறிந்தார் கூறுவர்; அதனைக் கேட்ட யான் ஆற்றுவது எங்ஙனம்?” என்று தான் ஆற்றாமையின் காரணத்தைத் தலைவி தெரிவித்தது.)
  39.    
வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென  
     
நெற்றுவிளை யுழிஞ்சில் வற்ற லார்க்கும் 
     
மலையுடை யருஞ்சுர மென்பநம் 
     
முலையிடை முனிநர் சென்ற வாறே. 

என்பது “பிரிவிடை ஆற்றல் வேண்டும்” என்ற தோழிக்கு, “யாங்ஙனம் ஆற்றுவேன்!” எனத் தனது ஆற்றாமைமிகுதி தோன்றத் தலைமகள் கூறியது.

    (பி-ம்) தலைமகள் கூறுகின்றாள், “நம் முலையிடைத்துயின் முனிந்து போயினார் சென்றவழி இப்படிப்பட்ட கொடுமைத்தால்; யான் எங்ஙனம் ஆற்றியுளேனாவேன்; யான் ஆற்றுகின்றிலேனென நீ ஆற்றாயாகின்ற தென்?” எனத் தோழிக்குத் தலைமகள் கூறியது).

ஒளவையார் (பி-ம். அவ்வையார்).

     (பி-ம்) 1. ‘வெந்தெறற்’ 2. ‘பொங்கர் போந்தென’ 3. ‘மலையிடை’

     (ப-ரை.) தோழி-, நம் முலையிடைமுனிநர் -நம் நகிலினிடத்துத் துயிலுதலை வெறுத்தவர், சென்ற ஆறு - பிரிந்து சென்ற வழியானது, வெ திறல் கடு வளி - வெம்மையான வலியையுடைய விரைவான காற்றானது, பொங்கர் - மரக்கிளையிலே, போந்தென - வீசுதலால், உழிஞ்சில் - வாகை மரத்தினது, நெற்று விளைவற்றல் - நெற்றினது முற்றிய வற்றலானது, ஆர்க்கும் - ஒலித்தற்கு இடமாகிய, மலை உடை அரு சுரம் - மலைகளையுடைய கடத்தற்கரிய சுரமாகும், என்ப - என்று கூறுவர்.

    (முடிபு) முனிநர் சென்ற ஆறு அருஞ்சுரமென்பர்.

    (கருத்து) தலைவர் சென்ற வழியின் கொடுமையை நினைந்து நான் ஆற்றேனாயினேன்.

    (வி-ரை.) பாலை நிலத்ததாதலின் காற்று வெம்மையுடையதாயிற்று. திறல் - வலி; காற்று மிக்க வலியுடையதென்பது “விசும்பு தைவரு வளியும்... போல... வலியும்”, “வளிமிகின் வலியு மில்லை” (புறநா. 2: 3-8, 51:3) என்பவற்றாலும் அறியப்படும். கடுவளி - பெருங்காற்றெனலுமாம் (புறநா.55:20, உரை). பொங்கர் - மரக்கொம்பு; “உயர்ந்த பொங்கருயர்மர மேறி” (கலி. 75:6) என்பதன் உரையைப் பார்க்க. உழிஞ்சில் - வாகை (சிலப். 11:76, அடியார்). வற்றல் -பசுமையற வற்றிய காய். “முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற்றிரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப், பாலை யென்பதோர் படிவங் கொள்ளும்” (சிலப். 11: 64-6) என்பவாதலின் குறிஞ்சி திரிந்த பாலையென்பாள், ‘மலையுடை யருஞ்சுரம்’ என்றாள்; “வரைபிளந் தியங்குநர், ஆறுகெட விலங்கிய வழலவி ராரிடை” (கலி. 2: 7-8) என்பவாகலின் மலைகள் உடைந்த அருஞ்சுரமெனினும் ஆம். தான் சென்றறியாத தாதலின் ‘என்ப’ என்றாள். ‘முலையிடை முனிநர்’ என்றது இன்பந் துய்த்து ஈண்டு இராதே கொடுமையையுடைய பாலையிற் சென்று துன்ப முழப்பவராயினரென்று இரங்கிய நினைவிற்று (கலி.2: 11-22.)

    ‘அவர் சென்றது கடத்தற்கரிய சுரமென்பர்; அது கருதியே யான் ஆற்றேனாயினேன்’ என்று தலைவி உணர்த்தினாள்.

     ஆறே: ஏ அசை நிலை.

     (மேற்கோளாட்சி) மு. வழியருமை கேட்டவழித் தலைவி கூறியது (தொல். கற்பு. 6, ந.).

    ஒப்புமைப் பகுதி 1. கடுவளி: குறுந்.372:2; அகநா.1:17; புறநா.55:20. வெம்மையையுடைய கடுவளி: “விலங்குவெங் கடுவளி யெடுப்ப”, “காய்சினக் கடுவளி” (அகநா.71:17, 223:6). 1-2. காற்றால் உழிஞ் சில்வற்றல் ஒலித்தல்: குறுந். 7: 4-5, ஒப்பு. 3. மலையுடை யருஞ்சுரம்: “பன்மலை யருஞ்சுரம்”, “பன்மலை, வெவ்வறை மருங்கின் வியன்சுரம்” (அகநா. 203:11, 361: 14-5).

    4. நகிலிடைத் துயிலுதல்: “இடைமுலைக் கிடந்து” (குறுந். 178:4); “துயிலி னிளமுலையார்” (கைந்நிலை, 38); “அவர்நம, தேந்துமுலை யாகத்துச் சார்ந்துகண் படுப்பவும்” (தொல். கற்பு. 6, ந. மேற்: ‘நாமவர்’); “நப்பின்னை கொங்கைமேல், வைத்துக் கிடந்த மலர்மார்பா” (திவ். திருப்பாவை, 19). “நம், இன்றுயின் முனிநர் சென்ற வாறே” (குறுந். 213: 6-7)

(39)