வெள்ளி வீதியார் (பி-ம். வெள்ளி வீதி.) (பி-ம்.) 2. ‘சனி நீடமர்ந்தன்று’, ‘நனி நீட்டமர்ந்தன்று’; 3. ‘சிறுசிறைத்’: 4. ‘வீழ்ந்துக்’.
(ப-ரை.) தோழி---, நாண் - நாணம், நம்மொடு நனி வீடு உழந்தன்று - நம்மோடு மிக நெடுங்காலம் உடனிருந்து வருந்தியது; இனி - இனிமேல், வான்பூ கரும்பின் - வெள்ளிய பூவையுடைய கரும்பினது, ஓங்கு மணல் சிறு சிறை - உயர்ந்த மணலையுடைய சிறிய கரை, தீம்புனல் நெரிதர - இனிய நீர் நெருங்கி அடித்தலால், வீய்ந்து - அழிந்து, உக் காங்கு - வீழ்ந்தாற்போல, தாங்கும் அளவை தாங்கி - தடுக்கும் வரையில் தடுத்து, காமம் நெரிதர - காமம் மேன்மேலும் நெருக்க, கை நில்லாது - என்பால் நில்லாது, போய்விடும்; அளிது - அஃது இரங்கத் தக்கது.
(முடிபு) நாண் நனி நீடுழந்தன்று; கைந்நில்லாது; அளிது.
(கருத்து) யான் தலைவனுடன் செல்லுதலால் நாணழியும்.
(வி-ரை.) அளிது - இரங்கத்தக்கது; “அளிதோ தானே பாரியது பறம்பே” (புறநா. 109:1.) நாண் நீடுழந்தன் றென்றது, தலைவியோடு உடன் வளர்ந்து அணியாய் நின்று பிரியாதிருந்தமை பற்றி’ ‘நாணென்பது பெண்டிர்க்கு இயல்பாகவே உளதொரு தன்மை’ (இறை. 2, உரை.) மன்கழிவுப் பொருளை உணர்த்திற்று. கரும்பின் பூ வெண்மையுடையதாதலின் ‘வான் பூ’ என்றாள்; ‘ஆடுகட் கரும்பின் வெண்பூ” (புறநா. 35:10.) நாணத்திற்குச் சிறு சிறையும் காமத்திற்குப் புனலும் உவமை; “சிறையு முண்டோ செம்புனன் மிக்குழீஇ, நிறையு முண்டோ காமங் காழ்க்கொளின்” (மணி. 5:19-20); “சிறையென்ப தில்லைச் செவ்வே செம்புனல் பெருகு மாயின், நிறையென்ப தில்லைக் காம நேர்நின்று சிறக்கு மாயின்” (சூளா. கல்யாணச். 155) எனப் பிறரும் உவமை கூறுதல் காண்க. இதுவரை தம்முள் ஒத்த அளவினவாக இருந்த காமம் நாண் என்னும் இரண்டனுள் நாணத்தைக் காமம் வென்றதென்பது கருத்து. நில்லாதே: ஏகாரம் அசை நிலை.
மேற்கோளாட்சி 1. இனியென்பது பின்வருங்காலம் உணர்த்தி நின்றது (தொல். எச்ச. 67, ந.)
1-2. இனியென்பது காலத்தின்மேல் முன்னென்னும் பொருள்பட வரும் (நன். 420, மயிலை.) 6. தலைவி தோழிக்கு நாணும் மடனும் நீங்கிய சொல்லைக் கூறுதலும் பொருந்தும் (தொல். களவு. 19, ந.)
மு. நொதுமலர் வரைவின்கண் தலைவி நாணழிபிரங்கிக் கூறியது (தொல். களவு. 23, இளம்.);
இக்குறுந்தொகை தலைவி நாண் நீங்கினமை கூறியது (தொல். அகத். 42, ந.); இஃது உடன்போக்கு வலித்தமையின் தலைவி நாண் துறந்து கூறியது (தொல். களவு. 16, ந.); தலைமகள் உடன்செல நேர்ந்த பாவக்கிளவி(தமிழ்நெறி. 20); தலைவி உடன்போக்கின்கண் நாணழிந்து வருந்தல் (இறை. 23); உடன்போக்கு நயப்பித்த தோழி தலைமகளுழைச் சென்றுணர்த்தத் தலைமகள் சொல்லுதல் (களவியற் காரிகை); தலைவி நாணழி பிரங்கல் (நம்பி. 182.)
ஒப்புமைப் பகுதி 1-2. நாண் அளிது: “என் கண்மணிபோன், றொருநாள் பிரியா துயிரிற் பழகி யுடன்வளர்ந்த, அருநா ணளிய தழல்சேர் மெழுகொத் தழிகின்றதே” (திருச்சிற். 44.)
நாண் நனிநீடுழந்தன்று: “சேணு மெம்மொடு வந்த, நாணும் விட்டே மலர்கவிவ் வூரே” (நற். 15: 9-10); “நாணோ டுடன்பிறந்த நான்” (முத். 98.)
1-6. காமமும் நாணமும்: குறுந். 112:2, ஒப்பு.
காமத்தால் நாண் அழிதல்: “மிகுபெயல், உப்புச்சிறை நில்லா வெள்ளம் போல, நாணுவரை நில்லாக் காம நண்ணி”, “காமங் கைம் மிகச் சிறத்தலி னாணிழந்து” (அகநா. 208: 18-20, 266:8.)
மு. “ஏணு மிகலு மழிந்துதெவ் வேந்தரெல் லாமிறைஞ்சக், காணுங் கழனெடு மாறன்செங் கோனின்று காக்குமண்மேற், சேணு மகலாதுட னென்னொ டாடித் திரிந்துவந்த, நாணு மழியத் தகுகற்பு மேம்பட நைகின்றதே” (பாண்டிக்கோவை.)
(149)