(தான் மேற்கொண்ட வினை நிறைவேறப் பெற்று மீண்டு வந்து தலைவியைக் கண்ட தலைவன் தேர்ப்பாகனை நோக்கி, “இன்று விரைவில் தேர்விட்டு இவனை இல்லின்கண் சேரச் செய்யோமாயின் தலைவியின் காமநோயைக் களையா நிலையினே மாவேமென எண்ணி நன்று செய்தாய்! நீ தேரோடு தலைவியின் உயிரையும் தந்தாய்” என்று பாராட்டிக் கூறியது.)
 400.    
சேயாறு செல்லா மாயி னிடரின்று 
    
களைகலங் காமம் பெருந்தோட் கென்று 
    
நன்றுபுரிந் தெண்ணிய மனத்தை யாகி 
    
முரம்புகண் ணுடைய வேகிக் கரம்பைப் 
5
புதுவழிப் படுத்த மதியுடை வலவோய் 
    
இன்று தந்தனை தேரோ 
    
நோயுழந் துறைவியை நல்க லானே. 

என்பது வினைமுற்றி வந்த தலைமகன் தேர்ப்பாகனைத் தலையளித்தது.

    (வினைமுற்றுதல் - மேற்கொண்ட காரியம் நிறைவேறப் பெறுதல்.)

பேயனார்.

     (பி-ம்.) 1. ‘செல்வாம்’; 2. ‘கனைக காமம்’, ‘களைக காமம்’, ‘கனைஇக் காமம்’; 4. ‘களரிக்கரம்பைப்’; 6. ‘தேரே’.

    (ப-ரை.) சேய் ஆறு செல்லாமாயின் - நெடுந்தூரமாகிய வழியைக் கடந்து செல்லேமாயின், இடர் நின்று -துன்பமின்றி,பெரு தோட்கு காமம் களைகலம் என்று - பெரிய தோளை யுடைய தலைவிக்குக் காமநோயைக் களையமாட்டேமென்று, நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி - நன்மையைவிரும்பி நினைத்த மனத்தையுடையவனாகி, முரம்பு கண் உடைய ஏகி - பருக்கையையுடைய மேட்டு நிலத்திடம் விள்ளும்படிபோய், கரம்பை - கரம்பை நிலத்திலே, புதுவழி படுத்த - புதிய வழியை உண்டாக்கிய, வலவோய் - தேர்ப்பாகனே, நோய் உழந்து உறைவியை - நோயினால் வருந்தி உறையும் தலைவியை, நல்கலான் - இறந்துபடாமல்தருதற்குக் காரணமாயினமையின், இன்று தேரோ தந்தனை - இன்றைக்கு நீ தேரையா தந்தனை? தலைவியையே தந்தனை.

     (முடிபு) வலவோய், உறைவியை நல்கலான், இன்று தேரோ தந்தனை?

     (கருத்து) உரிய காலத்தே விரைவில் தேரைச் செலுத்திய நின் திறமை பாராட்டற்குரியது.

     (வி-ரை.) ‘ இன்று செல்லாமாயின் தலைவனை எதிர்நோக்கி நிற்கும் தலைவியின் உயிர் நீங்கும். ஆதலின் இன்றே தேரைச் செலுத்தல்வேண்டும்’ என்பது பாகன் நினைவு. சேயாறாதலின் விரைவிற் செல்ல எண்ணினான்.

    ‘செல்வாம், களைய காமம்’ என்ற பாடத்திற்கு, ‘இன்று செல்வாமாயின் இடர் இல்லை; நாம் தலைவியின் காம நோயைக் களைவேமாக’ என்று பொருள் கொள்க.

     பெருந்தோள்: அன்மொழித்தொகை; மகளிருக்குத் தோள் பெருத்தல் இலக்கணம்.

    செல்வதற்குரிய வழி முரம்பில் இன்றியேயும் புதுவழியையுண்டாக்கிச் சென்றானென்றது பாகனது ஆற்றலைக் கூறியபடி. பழையவழியே செல்லின் நீட்டிக்குமென்று கருதிப் புதுவழிப்படுத்தலின் மதியுடை வலவோயென்றான்.

    “நீ தலைவியின் உயிர் நீங்காது தருதற்குக் காரணமாயினமையின், தேரைமட்டும் தந்தாயல்லை; அவள் உயிரையுந் தந்தாயாகின்றாய்” என்று தலைவன் பாராட்டினான்.

    ஏ:அசை நிலை.

    ஒப்புமைப் பகுதி 1. சேயாறு செல்லுதல்: குறுந். 269:1.

    2. பெருந்தோள்: குறுந். 335:7.

    4-5. முரம்பு கண்ணுடைய ஏகி வழி உண்டாக்குதல்: “முரம்புகண் ணுடைந்த நடவை” (மலைபடு. 432); “முரம்புகண்ணுடையத் திரியுந் திகிரியொடு”(ஐங். 449:1.)

    7. நோயுழந் துறைவி: குறுந். 65:5, ஒப்பு. நோய்: குறுந். 13:4,ஒப்பு. உறைவி: குறுந். 192:2, ஒப்பு.

(400)