வெள்ளி வீதியார். (பி-ம்.) 1. ‘வென்கண்ணே’.
(ப-ரை.) கால் பரி தப்பின - என் கால்கள் நடந்து நடந்து நடை ஓய்ந்தன; நோக்கி நோக்கி கண் வாள் இழந்தன - இணைந்து எதிர் வருவாரைப் பார்த்துப் பார்த்து என் கண்கள் ஒளியை இழந்தன; மன்ற - நிச்சயமாக, இ உலகத்து - இந்த உலகத்தில், பிறர் - நம்மகளும் அவள் தலைவனும் அல்லாத பிறர், அகல் இரு விசும்பின் மீனினும் பலர் - அகன்ற பெரிய வானத்திலுள்ள மீன்களைக் காட்டிலும் பலராவர்.
(முடிபு) கால் பரிதப்பின; கண் வாள் இழந்தன; பிறர் பலர்.
(கருத்து) தலைவியையும் தலைவனையும் நான் கண்டேனில்லை.
(வி-ரை.) நோக்கி நோக்கி யென்றதற்கேற்ப நடந்து நடந்தென்பது வருவித்துரைக்கப்பட்டது. முதுமையை யுடையாளாதலினாலும் பாலை நிலம் நடத்தற்கு அரியதாதலினாலும் நடந்து நடந்து செவிலிக்குக் கால் ஓய்ந்தன. பரி - நடை (மதுரைக். 689, ந.) பொருள்களை நெடுநேரம் வெயிலில் கூர்ந்து நோக்கின் கண் ஒளி மழுங்குதல் இயல்பு. பாலையில் நெடுந் தூரத்தில் ஆணும் பெண்ணுமாக இணைந்துடன் வருவாரை நோக்கி, ‘இவர் நம் மகளும் அவள் தலைவனும் போலும்’ என்று எண்ணி அவரையே கூர்ந்து நோக்கி அணிமையில் வர, அவரல்லரென்பதை அறிந்து பின்னும்இங்ஙனம் வருவாரை இப்படியே நோக்கி நோக்கிச் செவிலி மனம் வெறுத்தாள். அகலிரு விசும்பு - தன்னை யொழிந்த நான்கு பூதமும் தன்னிடத்தே அகன்று விரிதற்குக் காரணமாகிய பெரிய ஆகாயம்(பெரும்பாண். 1, ந.).
பன்மைக்கு விசும்பின்மீனைக் கூறுதல் மரபு. பிறர் - தான் கருதி நோக்குவாராகிய தலைவியும் தலைவனுமல்லாத பிறர்.
பலரே: ஏகாரம் தேற்றப்பொருளில் வந்தது; ஏனை ஏகாரங்கள் அசைநிலை.
(மேற்கோளாட்சி) 1-2. வாளென்னும் உரிச்சொல் ஒளியாகிய பண்பு உணர்த்தி நின்றது (தொல். உரி. 70, இளம், 69, .).
மு. சுரத்திடை வினாயது நிகழ்ந்த பின்னர்ச் செவிலி கூறியது. (தொல். அகத். 40, இளம்.); செவிலி கடத்திடைத் தன்னெஞ்சிற்குக் கூறியது (தொல்.அகத். 42, ந.); செவிலி புதல்வியைக் காணாது கவலை கூர்தல் (நம்பி. 188).
ஒப்புமைப் பகுதி 2. 1. செவிலி நடை ஓய்தல்: “அரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர், பரிமெலிந் தொழிய” (நற். 110: 6-7.).
1-2. கூர்ந்துபார்த்தலாற் கண் ஒளி இழத்தல்: நீளிடை யத்த நோக்கி வாளற்றுக், கண்ணுங் காட்சி தௌவின” (நற். 397: 2-3); “வெளிறுகண் போகப் பன்னாட் டிரங்கி” (புறநா. 177:2); “வாளற்றுப் புற்கென்ற கண்ணும் - அவர் வரும் வழி பார்த்து என் கண்களும் ஒளியிழந்து புல்லிய வாயின" (குறள். 1261, பரிமேல்.); “கண்ணும் வாளற்ற” (சீவக. 998); மலைபடு. 369; நற்.133:2.
3. அகலிருவிசும்பு: பெரும்பாண். 1, 292; மதுரைக். 50, 182, 267; நெடுநல். 20; குறிஞ்சிப்.48; மலைபடு.100; கலி.102; 1; பதிற்.68:4; புறநா.2: 2-7, 8:9, 77:11; மணி.19:91; பெருங்.1.38:16, 3.12:2.
3-4. வான்மீனைப் பன்மைக்குக் கூறுதல்: “வானத்து, மீன்கணற்றதன் சுனையே”, “வானத்து, வயங்கித் தோன்று மீனினும் ... பொலிகநுந் நாளே”, “வானத்து, வயங்குபன் மீனினும் வாழியர் பலவென” (புறநா.109: 9-10, 367: 15-8, 371: 24-5); “வானத்து, மேலாடு மீனிற் பலராவர்” (நாலடி.13)
(44)