பெரும்பதுமனார். (பி-ம்.) 2. ‘மேலன’, ‘மேவுந;’ 4. ‘கயிறாள் பறையிற்;’ 6. ‘வேய்பயில் பழுவம்’.
(ப-ரை.) ஆரியர் கயிறு ஆடு பறையின் -ஆரியக்கூத்தர் கழையில் கட்டிய கயிற்றின் மேல் நின்று ஆடும் பொழுது கொட்டப்படும் பறையைப் போல, கால் பொர கலங்கி- மேல் காற்றானது தாக்குதலால் நிலை கலங்கி,வாகை வெள் நெற்று ஒலிக்கும்- வாகை மரத்தினது வெள்ளிய நெற்றுக்கள் ஒலித்தற்கு இடமாகிய, வேய்பயில் அழுவம்-மூங்கில்செறிந்த பாலை நிலப் பரப்பில், முன்னியோர்-கடந்து செல்ல நினைந்துவருபவர்களுள், வில்லோன் காலன கழல்-வில்லை உடையவனாகியஇவ்வாடவனது காலில் உள்ளன வீரக் கழல்கள்; தொடியோள் மெல் அடிமேலவும் சிலம்பு-தோள் வளையை அணிந்த இம்மகளினுடையமெல்லிய அடியின் மேலுள்ளனவும் சிலம்புகள்; நல்லோர் யார் கொல்-இந்நல்லோர் யாவரோ? அளியர்-இவர் அளிக்கத் தக்கார்!
(முடிபு) அழுவம் முன்னியோர் யார் கொல்? அளியர்!
(கருத்து) மணம் புரிந்து கொள்ளாத இவர் திறம் இரங்கத் தக்கது.
(வி-ரை.) உடன்போக்கின்கண் நேரும் இடையூறுகளை நீக்கற் பொருட்டு வில்லுடையனாதலின் தலைவனை வில்லோனென்றார்;உதயணன் வாசவத்தையைக் கொண்டு செல்லுகையில் வராகன் என்பவனது கையில் இருந்த வில் முதலியவற்றைப் பெற்றுச் சென்றானென்றும்,பின் தன்னை வளைத்த சவரர் புளிஞரை அவற்றால் வென்றான் என்றும்பெருங்கதையிற் காணப்படும் செய்தி இங்கே அறியற்பாலது. கழல,் வீரத்திற்கும் வென்றிக்கும் தனித்தனியே கட்டப்பட்டனவாதலின் காலனவென்று பன்மையாற் கூறினார்; போர்தோறும் வென்று கட்டின என்பது மாம்; “காலன புனைகழல்” (புறநா. 100:1, விசேடவுரை); " கெழுதகையம்பர் கிழவோன் சேந்தனில், விழைவுறு தியாகத்து வீரத்து வீக்கிய, கழலே யாடவர் கான்மிசை யணிவடம்’’ என்பது திவாகரமாதலின், கொடையின்பொருட்டும் வீரத்தின் பொருட்டும் புனைந்த கழல்கள் என்றலுமாம்.
தலைவனால் தலைவி வரைந்து கொள்ளப்படாமையைப் புலப்படுத்துவர், 'மெல்லடி மேலவும் சிலம்பே' என்றார்; மணம் புரிவதற்கு முன், மணமகளது காலில் பெற்றோர்களால் அணியப்பட்ட சிலம்பை நீக்குதற்கு ஒரு சடங்கு செய்யப்படும்; அது 'சிலம்பு கழி நோன்பு’ எனப்படும்; "நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினும், எம்மனை வதுவை நன்மணங் கழிகெனச், சொல்லி னெவனோ... பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே’’ (ஐங்.311) என்பதனால் அந் நோன்பு மணத்திற்கு முன்பு செய்யப்படும் என்று தெரிகின்றது. மெல்லடி என்றது இப்பாலையில் நடக்கலாற்றாள் என்னும் இரக்கக் குறிப்பைப் புலப்படுத்தியது. தூய்மை, அன்பு, உவகை முதலிய அகத்தியல்பை முகத்தால் அறிந்தமையின் 'நல்லோர்’ என்றார்.
ஆரியர்-ஆரிய நாட்டில் உள்ள ஒருவகைக் கூத்தர்; அவர் இயற்றும்கூத்து ஆரியக் கூத்து எனப்படும்; 'ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலேகண்’ என்ற பழமொழி அக்கூத்தின் அருமையைப் புலப்படுத்தும்; விலக்குறுப்பின் வகையாகிய பதினான்கனுள் ஒன்றாகிய சேதமென்பது இரு வகைத்தென்பதும் அவ்விரண்டினுள் ஆரியக் கூத்து ஒன்று என்பதும் சிலப்பதிகார உரையால் அறிந்த செய்திகள்; "ஆரியந் தமிழெனுஞ் சீர்நட மிரண்டினும்’’ (சிலப்.3:12-25,அடியார். மேற்.) அக்கூத்தர் கழையை நட்டுக் கயிறு கட்டி அக்கயிற்றின் மேல் ஆடுவர். "ஆடியற் பாணிக்கொக்கு மாரிய வமிழ்தப் பாடற், கோடியர்’’ (கம்ப. கார்காலப்.33) என்று கம்பரும் இக் கூத்தரைப் பற்றிக் கூறியுள்ளார்.
பசுமையற முதிர்ந்ததாதலின் வெண்ணெற்றென்றார்.
ஏகாரங்களும் தாமென்பதும் அசை. மேலவும்: உம்மை இறந்ததுதழீஇய எச்சவும்மை.
மேற்கோளாட்சி1-2. செவிலிக்குக் கண்டோர் கூறியது (தொல். செய். 163,பேர்.);செய்யுளுள் பெயரின் ஈற்றயல் ஆகாரம் ஓகாரமானது (தொல். பெயர்.41,கல்.) 1-3. செய்யுளுள் பெயரின் ஈற்றயலாகாரம் ஓகாரமாயிற்று (தொல்.பெயர்.41, இளம், தெய்வச், ந; நன். 352, மயிலை; 353,சங்.)
மு. பெயரிடத்து ன, ள, ர ஈற்றயலாகாரம் செய்யுளில் ஓகாரமாக வந்தது (தொல். பெயர். 41, சே; இ.வி.326); வில்லோனும் தொடியோளும் என்பன பொருள் எனப்படும்; வேய்பயிலழுவம் முன்னியோரென்பது அப்பொருள் நிகழ்ச்சியான் இறந்த காலம் எனப்படும்; அப்பாட்டிற்குச் சிறந்தார் அவராகலின் அவரே பொருளாயினார் என்பது (தொல். செய். 203, பேர், 202, ந; இ.வி. 575); சுரத்திடைச் செல்லும் தலைமகனையும் தலைமகளையும் கண்டு எதிர்வருகின்றார், யார்கொல் இவ்வாறு போந்தார் எனச் சொல்லியது (இறை.23); இடைச்சுரத்துக் கண்டோர் கூற்று (தொல்.அகத். 43, இளம், 40, ந.); சுரத்து எதிர்ப்பட்டார் சொல்லியது (தமிழ்நெறி.23); கண்டோர் அயிர்த்தல் (நம்பி.182.)
ஒப்புமைப் பகுதி1. கழல்: "ஆய்கழற், சேயிலை வெள்வேல் விடலை’’ (குறுந். 15:4-5.) 2. மெல்லடி: "நல்லோண் மெல்லடி நடையு மாற்றாள்’’ (தொல். அகத். 40, ந. மேற.) தலைவி சிலம்புடையளாதல்: "பெயர்ந்து போகுதி பெருமூ தாட்டி, சிலம்புகெழு சீறடி சிவப்ப, இலங்குவேற் காளையொ டிறந்தனள் சுரனே’’ (தொல்.அகத். 40, ந. மேற.்) சிலம்புகழி நோன்பு: "சிலம்பு கழீஇய செல்வம்’’ (நற்.289:10); "அருங்கடிவியனகர்ச் சிலம்புங் கழியாள் ...கூர்வேல் விடலையொடு பொய்ப்பப்போகி’’, "சிலம்புகழீஇ அறியாத் தேஎத்த ளாகுதல் கொடிதே’’ (அகநா.315:8-14, 385:17-18.)
4-5. காற்றால் வாகையின் நெற்று ஒலித்தல்: ‘’வெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென, நெற்றுவிளை யுழிஞ்சில் வற்ற லார்க்கும்’’, "அத்த வாகை யமலை வானெற், றரியார் சிலம்பி னரிசி யார்ப்பக், கோடைதூக்குங் கானம்’’ (குறுந்.39:1-2, 369:1-3); "காய்த்த வாகை நெற்றொலிப்ப’’(திவ்.பெரியதிரு.1:7-8) வாகை நெற்றின் ஒலிக்குப் பறையின் ஒலி உவமை:"வாட லுழிஞ்சில் விளைநெற் றந்துணர், ஆடுகளப் பறையி னரிப்பன வொலிப்பக், கோடை நீடிய வகன்பெருங் குன்றம்’’, "உறுவளி யெறிதொறும்.... குறுங்காலுழிஞ்சிற், றாறுசினை விளைந்த நெற்ற மாடுமகள், அரிக்கோற் பறையி னையென வொலிக்கும்’’ (அகநா.45:1-3,151:6-10.)
மு. | ‘‘வில்லான் விறலடி மேலன பொற்கழல் வெண்முத்தன்ன |
| பல்லா ளிணையடி மேலன பாடகம் பஞ்சவற்கு |
| நெல்லார் கழனி நெடுங்களத் தன்று நிகர்மலைந்த |
| புல்லா தவரென யார்கொல் லருஞ்சுரம் போந்தவரே’’ |
| (பாண்டிக்கோவை) |
(7)