கருவூர் ஓதஞானி. (பி-ம்) 4.கானவனல்குறூஉமகளே, நல்குவா மகளே.
(ப-ரை.) நெஞ்சே, அரும்பிய சுணங்கின் - தோற்றிய தேமலையுடைய, அம் பகடு இள முலை - அழகிய பெருமையையுடைய இளைய நகிலையும், பெரு தோள் - பெரிய தோளையும், நுணுகிய நுசுப்பின் - நுண்ணிதாகிய இடையையும் உடைய, கல்கெழு கானவர் - கற்கள் பொருந்திய காட்டையுடையவர், நல்குறு மகள் - பெற்ற மகள், மருந்து எனின் மருந்து - காமநோய்க்குப் பரிகாரம் வேண்டுமென்று கருதுங்கால் எனக்குப் பரிகாரமாவாள்; வைப்பு எனின் வைப்பு - போகம் நுகரச் செல்வம் வேண்டுமென்று கருதின் எனக்குச் செல்வமுமாவாள்.
(முடிபு) மகள், மருந்தெனின் மருந்து; வைப்பெனின் வைப்பு.
(கருத்து) இவளைப் பிரிந்து பெறும் செல்வம் வேறொன்று இல்லை.
(வி-ரை.) இவளைப் பிரியின் காமநோய்க்கு மருந்தில்லை யென்பதும், அம்மருந்தும் யான் இன்பம் பெறும்பொருட்டுத் தேடிச் செல்ல எண்ணிய செல்வமும் இவளேயாதலின் செல்லுதல் தவிர்வேனென்பதும் புலப்படுகின்றன, மருந்து - அமிழ்தமும் ஆம். வைப்பு - சேம நிதி. மருந்தே, வைப்பே: ஏகாரங்கள் அசைநிலை: தேற்றேகாரங்களுமாம்.
பகடு - பெருமை (புறநா. 68:5, உரை). தோள்பெருத்தலும் இடை சிறத்தலும் மகளிர்க்கு அழகு; "தோள்.... எனப் பெருகி, நுதலடி நுசுப்பென மூவழிச் சிறுகி" (கலி. 108:2-3). கல் - மலையுமாம். கல்கெழு கானவர் நல்குறு மகளென்பது அனைத்தும் ஒரு பெயராய் நின்று முலை முதலியவற்றோடு இயைந்தது. மகளே: ஏகாரம் அசை நிலை.
தலைவியின் உறுப்புநலங் கூறினான், இத்துணை நலனுடையாளைப் பிரிதல் அரிதென்று நினைந்து.
(மேற்கோளாட்சி) 4. கல்லைக்கெழீஇயினவென இரண்டனுருபு விரிந்தது (தொல். குற்றியலுகரப். 75, இளம், 76, ந.).
மு. தலைவன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது (இறை. 51; தமிழ்நெறி. 24); இனிதுறு கிளவிபற்றி ஏனை உவமம் வந்தது (தொல். உவம; 28, பேர்.); நிகழ்காலமென்னும் உறுப்பு வந்தது (தொல். செய்யுள். 202, பேர். ந; இ.வி.575); பொருளென்னும் உறுப்பின்றி வந்தது (தொல். செய்யுள். 211, பேர், ந.); எமக்கென்னும் சொல் பின்னும் முன்னும் எஞ்சிநின்றது (தொல். எச்ச. 45, சே. ந; இ.வி. 351); இயற்சீரான் வந்த ஆசிரியப்பா (யா.வி. 15).
ஒப்புமைப் பகுதி 1. மருந்து: நற். 384: 10-11. 2.சுணங்கையுடைய நகில்; சிறுபாண். 24-6; அகநா. 319:9; புறநா. 337:21-2, 352:1 3-4. அரும்பிய சுணங்கு: அகநா. 253: 22. 3.பெருந்தோள்: "பெருந்தோட் குறுமகள்" (குறுந். 95:3); "பெருந்தோண் மடந்தை" (சிலப். 3:6). நுணுகிய நுசுப்பு: "நுழைசிறு நுசுப்பு" (குறுந். 159:2.) பெருந்தோளும் நுணுகிய நுசுப்பும்: "பெருந்தோ ணுணுகிய நுணுப்பிற், றிருந்திழை யரிவை" (அகநா. 374:17-8); "பெருந்தோட் சிறுமருங்குற் பேரமர்க்கட் பேதை" (நன். 402, மயிலை. மேற்.).
(71)