(தலைவனது பிரிவினால் வருந்திய தலைவி தோழியை நோக்கி, “என்பாற் சொல்லின் நான் உடம்பட மாட்டேனென்னும் கருத்தால், சொல்லாமற் பிரிந்து சென்ற தலைவர் தாம் சென்ற ஊரிலேயே தங்கிவிட்டாரோ?” என்று கூறி வருந்தியது.)
 79.    
கான யானை தோனயந் துண்ட  
    
பொரிதா ளோமை வளிபொரு நெடுஞ்சினை 
    
அலங்க லுலவை யேறி யொய்யெனப் 
    
புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும் 
5
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்ச் 
    
சேந்தனர் கொல்லோ தாமே யாந்தமக் 
    
கொல்லே மென்ற தப்பற் 
    
சொல்லா தகறல் வல்லு வோரே. 

என்பது பொருள்வயிற் பிரிந்த தலைமகனை நினைந்த தலைமகள் தோழிக்குச்சொல்லியது.

குடவாயிற் கீரனக்கன் (பி-ம். கீரத்தனார்.)

    (பி-ம்) 6. ‘சேர்ந்தனர்’ 7. ‘கொல்லோமென்ற’ 8. ‘சொல்லாதேகல்’.

    (ப-ரை.) தோழி, யாம் தமக்கு ஒல்லேம் என்ற தப்பல் - யாம் தாம் பிரிவதற்குப் பொருந்தேமென்ற தவற்றினால், சொல்லாது அகறல் வல்லுவோர் - சொல்லாமற் செல்லுதலில் வன்மையுடையோராகிய தலைவர், கானம் யானை - காட்டு யானையால், தோல் நயந்து உண்ட - பட்டை விரும்பி உண்ணப்பட்ட, பொரிதாள் ஓமை - பொறந்த அடியையுடைய ஓமைமரத்தினது, வளிபொரு நெடுசினை அலங்கல் உலவை - காற்று அடிக்கும் நெடிய கிளையினது அசைதலையுடைய வற்றற்கொம்பில், ஏறி -, ஓய்என - ஒய்யென்று, புலம்புதரு குரல - தனிமையையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தும் குரலையுடையனவாகி, புறவு பெடை பயிரும் - ஆண்புறாக்கள் பெண்புறாக்களை அழைக்கும், அத்தம் நண்ணிய - பாலைநிலத்திற் பொருந்திய, அம் குடி சிறு ஊர் - அழகிய குடிகளையுடைய சிற்றூரில், சேந்தனர் கொல் - தங்கினரோ?

     (முடிபு) சொல்லாதகறல் வல்லுவோர் சேந்தனர்கொல்?

     (கருத்து) தலைவர் இனி மீளாரோ?

     (வி-ரை.) பாலைநிலத்தின் வெம்மையால் யானை ஓமை மரத்தின் தோலை உண்டது. புலம்பு - தனிமையும் வருத்தமும்.

     ஓ, தாம், ஏ: அசை நிலைகள்.

     பாலை நிலத்துள்ள ஆண்புறவு தன் பெடையை விரும்பி அழைக்கும் இடத்தில் தங்கினாரோ வென்றது, பறவையினங்களும் தம் துணையின்பால் அன்பு வைத்து ஒழுகும் அவ்விடத்தில் தங்கினாரேல், ஆண்டுள்ள நிகழ்ச்சியும் என்பால் வந்து ஒன்றுதலாகிய தம் கடமையை அறிவுறுத்துமன்றே யென்ற குறிப்பினது (ஐங். 333) ஒல்லேம் - உடம்படேம். நாம் உடம் படாமையைத் தவறாக நினைத்து அதுபற்றிச் சினந்து அங்கே தங்கி விட்டனரோ வென்பது தலைவியின் ஐயம்.

     தலைவர் சொல்லாது அகலுதலுண்டென்பதை இந்நூல் 43-ஆம் செய்யுளாலும் அதன் உரை முதலியவற்றாலும் உணரலாகும். வல்லுவோ ரென்றது அங்ஙனம் பிரிந்து செல்லுதல் நெஞ்சில் வன்மையிருப்பினன்றி இயலாதென்னும் குறிப்பினது.

    (மேற்கோளாட்சி) 6-8. தலைவன் சொல்லாது பிரிந்தது (தொல். கற்பு. 43, ந.)

    மு. ‘புணர்ந்துடன் போகிய கிழவோண் மனையிருந், திடைச்சுரத்திறைச்சியும் வினையுஞ் சுட்டி, அன்புறு தக்க கிளத்த றானே, கிழவோன்செய்வினைக் கச்ச மாகும்’ ஆதலின், ‘புலம்புதரு குரலவாய்ப் புறவினைப்பெடை அழைக்கும் வருத்தங்கண்டு வினைமுடியாமல் வருவரோவெனஅஞ்சியவாறு காண்க’ (தொல். கற்பு. 7, இளம். ந.)

    ஒப்புமைப் பகுதி 2. ஓமை: ‘‘புன்றா ளோமைய சுரனிறந் தோரே” (குறுந். 260:8); “புல்லரை யோமை “ (ஐங். 316:4.) 1-2.்யானை ஓமைத்தோலை உண்ணல்; “முளிசினை, ஓமைக் குத்திய வுயர்கோட் டொருத்தல்” (குறுந். 396:3-4); “கயந்தலை மடப்பிடி யுயங்குபசி களை இயர், பெருங்களிறு தொலைத்த முடத்தா ளோமை”, “பசிப்பிடி யுதைத்த வோமைச் செவ்வரை”, “பணைத்தா ளோமைப்படுசினை..... ஒடித்துமிசை கொண்ட வோங்குமருப் பியானை” (நற். 137: 6-7, 279:7, 318:2-5.)

    3. அலங்கல் உலவை: அகநா. 199:6. ஒய்யென: கலி.37:18.

    4. புறவு,பெடையைப் பயிர்தல்: குறுந். 285:5.

    5. மு. குறுந். 41:3, ஒப்பு, அங்குடிச் சீறூர்: நற். 343:2; புறநா.324:8. 2-4. ஓமையின்மேற் பறவையிருத்தல்: குறுந். 207:2-4; ஐங்.321:1-2. 4-5. புறவுள்ள பாலைநிலச் சீறூர்: “புறவுசேர்ந் திருந்த, புன்புலச் சீறூர்” (புறநா. 328:1-2).

    7. தப்பல்: குறுந். 121:3, 292:2; நற். 203:10; அகநா. 196:9.

    8. சொல்லாதேகல்: திருச்சிற். 270.

(79)