தொடக்கம்   முகப்பு
131 - 140 பாணற்குரைத்தபத்து
131
நன்றே, பாண! கொண்கனது நட்பே
தில்லை வேலி இவ் ஊர்க்
கல்லென் கௌவை எழாஅக்காலே.
வாயில் வேண்டி வந்த பாணன் தலைமகன் காதன்மை கூறினானாக, தலைமகள் வாயில் மறுப்பாள் அவற்குக் கூறியது. 1
132
அம்ம வாழி, பாண! புன்னை
அரும்பு மலி கானல் இவ் ஊர்
அலர் ஆகின்று, அவர் அருளுமாறே.
வாயில் வேண்டி வந்த பாணன், 'நீர் கொடுமை கூற வேண்டா; நும்மேல் அருள் உடையர்' என்றாற்குத் தலைமகள் சொல்லியது. 2
133
யான் எவன் செய்கோ? பாண! ஆனாது
மெல்லம் புலம்பன் பிரிந்தென,
புல்லென்றன, என் புரி வளைத் தோளே!
வாயிலாய்ப் புகுந்த பாணன் தலைமகள் தோள் மெலிவு கண்டு, 'மனைப்புறத்துப் போய் வந்த துணையானே இவ்வாறு வேறுபடுதல் தகாது' என்றாற்கு அவள் சொல்லியது. 3
134
காண்மதி, பாண! இருங் கழிப்...
பாய்பரி நெடுந் தேர்க் கொண்கனொடு
தான் வந்தன்று, என் மாமைக் கவினே.
பிரிவின்கண் தலைமகள் கவின் தொலைவு கண்டு வெறுத்து ஒழுகுகின்ற பாணற்குத் தலைமகன் வந்துழிக் கவின் எய்திய தலைமகள் சொல்லியது. 4
135
பைதலம் அல்லேம், பாண! பணைத் தோள்,
ஐது அமைந்து அகன்ற அல்குல்,
நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே.
பரத்தை ஒருத்தியைத் தலைப்பெய்வான் வேண்டி அதனைத் தலைமகன் மறைத்து ஒழுகுகின்றது அறிந்த தலைமகள் அவன் கேட்குமாற்றால் பாணற்குச் சொல்லியது. 5
136
நாண் இலை மன்ற, பாண! நீயே
கோள் நேர் இலங்கு வளை நெகிழ்த்த
கானல் அம் துறைவற்குச் சொல் உகுப்போயே!
வாயிலாய்ப் புகுந்து தலைமகன் குணம் கூறிய பாணற்கு வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது. 6
137
நின் ஒன்று வினவுவல், பாண! நும் ஊர்த்
திண் தேர்க் கொண்கனை நயந்தோர்
பண்டைத் தம் நலம் பெறுபவோ மற்றே?
தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்து நீங்கின இடத்தும், அவன் முன்பு செய்த தீங்கு நினைந்து தலைமகள் வேறுபட்டிருந்தாளாக, இனி ' இந்த வேறுபாடு என்?' என்று வினவிய பாணற்கு அவள் சொல்லியது 7
138
பண்பு இலை மன்ற, பாண! இவ் ஊர்
அன்பு இல கடிய கழறி,
மென் புலக் கொண்கனைத் தாராதோயே!
தலைமகன் வாயில் பெற்றுப் புகுந்தது அறியாது வந்த பாணற்குத் தலைமகள் நகையாடிச் சொல்லியது. 8
139
அம்ம வாழி, கொண்க! எம் வயின்
மாண் நலம் மருட்டும் நின்னினும்,
பாணன் நல்லோர் நலம் சிதைக்கும்மே.
ஆற்றாமை வாயிலாகப் புகுந்திருந்த தலைமகற்குப் பாணன் வந்துழித் தலைமகள் சொல்லியது. 9
140
காண்மதி, பாண! நீ  த்தற்கு உரியை
துறை கெழு கொண்கன் பிரிந்தென,
இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே.
பாணன் தூதாகிச் செல்ல வேண்டும் குறிப்பினளாகிய தலைமகள் அவற்குத் தன் மெலிவு காட்டிச் சொல்லியது. 10
மேல்