தொடக்கம்   முகப்பு
181 - 190 நெய்தற்பத்து
181
நெய்தல் உண்கண், நேர் இறைப் பணைத் தோள்
பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்
குப்பை வெண் மணல் குரவை நிறூஉம்
துறை கெழு கொண்கன் நல்கின்,
5
உறைவு இனிது, அம்ம! இவ் அழுங்கல் ஊரே.
'இக் களவொழுக்கம் நெடிது சொல்லின், இவ் ஊர்க்கண் அலர் பிறக்கும்' என்று அஞ்சியிருந்த தலைவி, 'தலைமகன் வரைந்து கொள்ளத் துணிந்தான்' என்று கூறிய தோழிக்குச் சொல்லியது. 1
182
நெய்தல் நறு மலர் செருந்தியொடு விரைஇக்
கை புனை நறுந் தார் கமழும் மார்பன்
அருந் திறல் கடவுள் அல்லன்
பெருந் துறைக் கண்டு, இவள் அணங்கியோனே.
தலைமகள் மெலிவுகண்டு, 'தெய்வத்தால் ஆயிற்று' எனத் தமர் நினைந்துழி, தோழி அறத்தொடு நின்றது. 2
183
[கணங்கொள் அருவிக் கான் கெழு நாடன்
குறும்பொறை நாடன், நல்வயல் ஊரன்,]
தண் கடல் சேர்ப்பன் பிரிந்தென, பண்டையின்
கடும் பகல் வருதி கையறு மாலை!
5
கொடுங்கழி நெய்தலும் கூம்பக்
காலை வரினும், களைஞரோ இலரே.
வரைவிடைவைத்துப் பிரிந்துழி ஆற்றாளாகிய தலைமகள் மாலைக்குச் சொல்லியது. (முதலிரண்டு அடிகள் சில பிரதிகளில் காணப்படுகின்றன.) 3
184
நெய்தல் இருங் கழி நெய்தல் நீக்கி
மீன் உண் குருகினம் கானல் அல்கும்
கடல் அணிந்தன்று, அவர் ஊரே;
கடலினும் பெரிது, எமக்கு அவருடை நட்பே.
வாயில் வேண்டி வந்தார் தலைமகன் அன்புடைமை கூறியவழி, வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது. 4
185
அலங்குஇதழ் நெய்தல் கொற்கை முன்துறை
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய்,
அரம் போழ் அவ் வளைக் குறுமகள்
நரம்பு ஆர்த்தன்ன தீம் கிளவியளே.
'ஆயமகளிருள் நின்னால் நயக்கப்பட்டாள் யாவள்?' என வினவிய தோழிக்குத் தலைமகன் சொல்லியது. 5
186
நாரை நல் இனம் கடுப்ப, மகளிர்
நீர் வார் கூந்தல் உளரும் துறைவ!
'பொங்குகழி நெய்தல் உறைப்ப, இத் துறைப்
பல்கால் வரூஉம் தேர்' என,
5
'செல்லாதீமோ' என்றனள், யாயே.
பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவுகடாயது. 6
187
நொதுமலாளர் கொள்ளார் இவையே;
எம்மொடு வந்து கடல் ஆடு மகளிரும்
நெய்தல்அம் பகைத்தழைப் பாவை புனையார்;
உடலகம் கொள்வோர் இன்மையின்,
5
தொடலைக்கு உற்ற சில பூவினரே.
தோழி கையுறை மறுத்தது. 7
188
இருங் கழிச் சேயிறா இனப் புள் ஆரும்
கொற்கைக் கோமான் கொற்கைஅம் பெருந் துறை
வைகறை மலரும் நெய்தல் போலத்
தகை பெரிது உடைய, காதலி கண்ணே!
விருந்து வாயிலாகப் புகுந்த தலைமகன் தலைவி இல்வாழ்க்கைச் சிறப்புக் கண்டு, மகிழ்ந்து சொல்லியது. 8
189
புன்னை நுண் தாது உறைத்தரு நெய்தல்
பொன்படு மணியின் பொற்பத் தோன்றும்
மெல்லம் புலம்பன் வந்தென,
நல்லஆயின தோழி! என் கண்ணே.
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வரைவான் வந்துழிக் கண்டு உவகையோடு வந்த தோழி, 'நின் கண் மலர்ச்சிக்குக் காரணம் என்?' என்று வினாவிய தலைவிக்குத் சொல்லியது. 9
190
தண் நறு நெய்தல் தளை அவிழ் வான் பூ
வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும்
மெல்லம் புலம்பன் மன்ற எம்
பல் இதழ் உண்கண் பனி செய்தோனே.
தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10
மேல்