321 | | உலறு தலைப் பருந்தின் உளி வாய்ப் பேடை | | அலறு தலை ஓமை அம் கவட்டு ஏறிப் | | புலம்பு கொள விளிக்கும் நிலம் காய் கானத்து, | | மொழிபெயர் பல் மலை இறப்பினும், | 5 | ஒழிதல் செல்லாது ஒண்டொடி குணனே. | |
| பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச்சுரத்துத் தலைமகள் குணம் நினைந்து இரங்கிச் சொல்லியது. 1 |
|
|
|
322 | | நெடுங் கழை முளிய வேனில் நீடி, | | கடுங் கதிர் ஞாயிறு கல் பகத் தெறுதலின், | | வெய்ய ஆயின, முன்னே; இனியே, | | ஒள் நுதல் அரிவையை உள்ளுதொறும் | 5 | தண்ணிய ஆயின, சுரத்திடை ஆறே! | |
| இடைச் சுரத்துக்கண் தலைமகன் தலைமகள் குணம் நினைத்தலில் தனக்கு உற்ற வெம்மை நீங்கியது கண்டு சொல்லியது. 2 | |
|
|
323 | | வள் எயிற்றுச் செந்நாய் வயவு உறு பிணவிற்குக் | | கள்ளிஅம் கடத்திடைக் கேழல் பார்க்கும் | | வெஞ் சுரக் கவலை நீந்தி, | | வந்த நெஞ்சம்! நீ நயந்தோள் பண்பே. | | இடைச் சுரத்துத் தலைமகள் குணம் நினைந்த தலைமகன், 'அவள் பண்பு வந்தன' என உவந்து, தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 3 | |
|
|
324 | | எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடைச் | | சிறிது கண்படுப்பினும், காண்குவென் மன்ற | | நள்ளென் கங்குல், நளி மனை நெடு நகர், | | வேங்கை வென்ற சுணங்கின் | 5 | தேம் பாய் கூந்தல் மாஅயோளே. | | பிரிந்து வந்த தலைமகன் தலைமகளை நலம் பாராட்டக் கண்ட தோழி, 'இவள் குணத்தினை மறந்து அமைந்தவாறு யாது?' என வினாவினாட்கு அவன் சொல்லியது. 4 | |
|
|
325 | | வேனில் அரையத்து இலை ஒலி வெரீஇ, | | போகில் புகா உண்ணாது, பிறிது புலம் படரும் | | வெம்பு அலை அருஞ் சுரம் நலியாது | | எம் வெங் காதலி பண்பு துணைப் பெற்றே. | | பிரிந்துவந்த தலைமகன், 'சுரத்தின் வெம்மை எங்ஙனம் ஆற்றினீர்?' என்ற தோழிக்குச் சொல்லியது. 5 | |
|
|
326 | | அழல் அவிர் நனந் தலை நிழல் இடம் பெறாது, | | மட மான் அம் பிணை மறியொடு திரங்க, | | நீர் மருங்கு அறுத்த நிரம்பா இயவின் | | இன்னா மன்ற, சுரமே; | 5 | இனிய மன்ற, யான் ஒழிந்தோள் பண்பே! | | இடைச்சுரத்து வெம்மை ஆற்றானாகிய தலைமகன் தலைமகள் குணம் நினைந்து, நொந்து சொல்லியது. 6 | |
|
|
327 | | பொறி வரித் தடக் கை வேதல் அஞ்சி, | | சிறு கண் யானை நிலம் தொடல் செல்லா; | | வெயில் முளி சோலைய, வேய் உயர் சுரனே; | | அன்ன ஆர் இடையானும், | 5 | தண்மை செய்த, இத் தகையோள் பண்பே! | | பிரிந்த தலைமகன் இடைச்சுரத்தின்கண் தலைமகள் குணம் நினைந்து, இரங்கிச் சொல்லியது. 7 | |
|
|
328 | | நுண் மழை தளித்தென நறு மலர் தாஅய்த் | | தண்ணிய ஆயினும், வெய்ய மன்ற | | மடவரல் இன் துணை ஒழியக் | | கடம் முதிர் சோலைய காடு இறந்தேற்கே. | | 'மழை வீழ்தலால் சுரம் தண்ணென்றது; இனி வருத்தம் இன்றிப் போகலாம்' என்ற உழையர்க்குத் தலைமகன் சொல்லியது. 8 | |
|
|
329 | | ஆள் வழக்கு அற்ற பாழ்படு நனந் தலை | | வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, நம்மொடு | | மறுதருவதுகொல் தானே செறிதொடி | | கழிந்து உகு நிலைய ஆக | 5 | ஒழிந்தோள் கொண்ட, என் உரம் கெழு, நெஞ்சே? | | இடைச்சுரத்தின்கண் மீளலுறும் நெஞ்சினை நொந்து, தலைமகன் உழையர்க்குச் சொல்லியது. 9 | |
|
|
330 | | வெந் துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி, | | வந்தனம்ஆயினும், ஒழிக இனிச் செலவே! | | அழுத கண்ணள் ஆய்நலம் சிதையக் | | கதிர் தெறு வெஞ் சுரம் நினைக்கும், | 5 | அவிர் கோல் ஆய்தொடி உள்ளத்துப் படரே. | | பிரிந்த தலைமகன் இடைச்சுரத்தின்கண் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. 10 | |
|
|