தொடக்கம்   முகப்பு
411 - 420 கிழவன்பருவம்பாராட்டுப்பத்து
411
ஆர் குரல் எழிலி அழிதுளி சிதறிக்
கார் தொடங்கின்றால், காமர் புறவே;
வீழ்தரு புதுப்புனல் ஆடுகம்
தாழ் இருங் கூந்தல்! வம்மதி, விரைந்தே.
பருவம் குறித்துப் பிரிந்த தலைமகன் அப் பருவத்திற்கு முன்னே வந்து, தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழிப் பருவம் வந்ததாக, தான் பருவத்திற்கு முன்னே வந்தமை தோன்றக் கூறுவான் தலைவிக்கு  த்தது. 1
 
412
காயா, கொன்றை, நெய்தல், முல்லை,
போது அவிழ் தளவமொடு பிடவு, அலர்ந்து கவினிப்
பூ அணி கொண்டன்றால் புறவே
பேர் அமர்க்கண்ணி! ஆடுகம், விரைந்தே.
இதுவும் அது. 2
 
413
நின் நுதல் நாறும் நறுந் தண் புறவில்
நின்னே போல மஞ்ஞை ஆல,
கார் தொடங்கின்றால் பொழுதே
பேர் இயல் அரிவை! நாம் நயத்தகவே.
இதுவும் அது. 3
 
414
புள்ளும் மாவும் புணர்ந்து இனிது உகள,
கோட்டவும் கொடியவும் பூப் பல பழுனி
மெல் இயல் அரிவை! கண்டிகும்
மல்லல் ஆகிய மணம் கமழ் புறவே.
இதுவும் அது. 4
 
415
இதுவே, மடந்தை! நாம் மேவிய பொழுதே;
உதுவே, மடந்தை! நாம் உள்ளிய புறவே;
இனிது உடன் கழிக்கின், இளமை
இனிதால் அம்ம, இனியவர்ப் புணர்வே!
இதுவும் அது. 5
 
416
போது ஆர் நறுந் துகள் கவினிப் புறவில்,
தாது ஆர்ந்து,
களிச் சுரும்பு அரற்றும் காமர் புதலின்,
மடப் பிடி தழீஇய, மாவே;
5
சுடர்த் தொடி மடவரல் புணர்ந்தனம், யாமே!
பருவம் குறித்துப் பிரிந்த தலைமகன் பருவத்திற்கு முன்னே வந்து தலைவியொடு கூடிச் செல்லாநின்றுழி, அதற்கு இனியனாய்த் தன்னுள்ளே சொல்லுவான் போன்று, தலைவி அறியுமாற்றால் கூறியது. 6
 
417
கார் கலந்தன்றால் புறவே; பல உடன்
ஏர் பரந்தனவால் புனமே; ஏர் கலந்து
தாது ஆர் பிரசம் மொய்ப்ப,
போது ஆர் கூந்தல் முயங்கினள், எம்மே.
இதுவும் அது. 7
 
418
வானம்பாடி வறம் களைந்து, ஆனாது
அழி துளி தலைஇய புறவில், காண்வர
வானர மகளோ நீயே
மாண் முலை அடைய முயங்கியோயே?
குறித்த பருவத்திற்கு உதவ வாராநின்ற வழிக்கண் உருவு வெளிப்பாடு கண்ட தலைமகன் இல்லத்துப் புகுந்துழி, தலைமகட்குச் சொல்லியது. 8
 
419
உயிர் கலந்து ஒன்றிய செயிர் தீர் கேண்மைப்
பிரிந்துறல் அறியா, விருந்து கவவி,
நம் போல் நயவரப் புணர்ந்தன
கண்டிகும் மடவரல்! புறவின் மாவே.
இன்ப நுகர்ச்சிக்கு ஏற்ற பருவம் வந்துழி, தலைமகளொடு புறவில் சென்ற தலைமகன் அவ்விடத்து மாக்களை அவட்குக் காட்டிச் சொல்லியது. 9
 
420
பொன் என மலர்ந்த, கொன்றை; மணி எனத்
தேம் படு காயா மலர்ந்த; தோன்றியொடு
நன்னலம் எய்தினை, புறவே! நின்னைக்
காணிய வருதும், யாமே
5
வாள் நுதல் அரிவையொடு ஆய் நலம் படர்ந்தே.
குறித்த பருவத்து எய்திய, அணித்தாக வந்த தலைமகன் பருவத்தால் அணிகொண்ட புறவை நோக்கிச் சொல்லியது. 10
 
மேல்