தொடக்கம்   முகப்பு
தோழி
1
'வாழி ஆதன், வாழி அவினி!
நெல் பல பொலிக! பொன் பெரிது சிறக்க!'
என வேட்டோளே, யாயே: யாமே,
'நனைய காஞ்சிச் சினைய சிறு மீன்
5
யாணர் ஊரன் வாழ்க!
பாணனும் வாழ்க!' என வேட்டேமே.
புறத்தொழுக்கத்திலே நெடுநாள் ஒழுகி, 'இது தகாது'எனத் தெளிந்த மனத்தனாய், மீண்டு தலைவியோடு கூடி ஒழுகாநின்ற தலைமகன்தோழியோடு சொல்லாடி, 'யான் அவ்வாறு ஒழுக, நீயிர் நினைத்த திறம் யாது?' என்றாற்கு அவள் சொல்லியது.

 
2
'வாழி ஆதன், வாழி அவினி!
விளைக வயலே! வருக இரவலர்!'
என வேட்டோளே, யாயே: யாமே,
'பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும்
5
தண் துறை ஊரன் கேண்மை
வழிவழிச் சிறக்க!' என வேட்டேமே.
இதுவும் அது. 2
 

 
3
'வாழி ஆதன், வாழி அவினி!
பால் பல ஊறுக! பகடு பல சிறக்க!'
என வேட்டோளே, யாயே: யாமே,
'வித்திய உழவர் நெல்லொடு பெயரும்,
5
பூக் கஞல் ஊரன் தன் மனை
வாழ்க்கை பொலிக!' என வேட்டேமே.
இதுவும் அது. 3
 

 
4
'வாழி ஆதன், வாழி அவினி!
பகைவர் புல் ஆர்க! பார்ப்பார் ஓதுக!'
என வேட்டோளே யாயே: யாமே,
'பூத்த கரும்பின், காய்த்த நெல்லின்,
5
கழனி ஊரன் மார்பு
பழனம் ஆகற்க!' என வேட்டேமே.
இதுவும் அது. 4
 

 
5
'வாழி ஆதன், வாழி அவினி!
பசி இல்லாகுக! பிணி சேண் நீங்குக!'
என வேட்டோளே, யாயே: யாமே,
'முதலைப் போத்து முழு மீன் ஆரும்
5
தண் துறை ஊரன் தேர் எம்
முன்கடை நிற்க' என வேட்டேமே.
இதுவும் அது. 5
 

 
6
'வாழி ஆதன், வாழி அவினி!
வேந்து பகை தணிக! யாண்டு பல நந்துக!'
என வேட்டோளே யாயே: யாமே,
'மலர்ந்த பொய்கை, முகைந்த தாமரைத்
5
தண் துறை ஊரன் வரைக!
எந்தையும் கொடுக்க! என வேட்டேமே.
களவினில் பலநாள் ஒழுகிவந்து, வரைந்து கொண்ட தலைமகன் தோழியோடு சொல்லாடி, 'யான் வரையாது ஒழுகுகின்ற நாள் நீயிர் இங்கு இழைத்திருந்த திறம் யாது?' என்றாற்கு அவள் சொல்லியது. 6
 

 
7
'வாழி ஆதன், வாழி அவினி!
அறம் நனி சிறக்க! அல்லது கெடுக!'
என வேட்டோளே யாயே: யாமே,
'உளைப் பூ மருதத்துக் கிளைக் குருகு இருக்கும்
5
தண் துறை ஊரன் தன் ஊர்க்
கொண்டனன் செல்க!' என வேட்டேமே.
இதுவும் அது. 7
 

 
8
'வாழி ஆதன், வாழி அவினி!
அரசு முறை செய்க! களவு இல்லாகுக!'
என வேட்டோளே, யாயே: யாமே,
'அலங்குசினை மாஅத்து அணி மயில் இருக்கும்
5
பூக் கஞல் ஊரன் சூள் இவண்
வாய்ப்பதாக!' என வேட்டேமே.
இதுவும் அது. 8
 

 
9
'வாழி ஆதன், வாழி அவினி!
நன்று பெரிது சிறக்க! தீது இல்லாகுக!'
என வேட்டோளே, யாயே: யாமே,
'கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்
5
தண் துறை ஊரன் கேண்மை
அம்பல் ஆகற்க!' என வேட்டேமே.
இதுவும் அது. 9
 

 
10
'வாழி ஆதன், வாழி அவினி!
மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க!
என வேட்டோளே, யாயே: யாமே,
'பூத்த மாஅத்து, புலால்அம் சிறு மீன்,
5
தண் துறை ஊரன் தன்னொடு
கொண்டனன் செல்க!' என வேட்டேமே.
இதுவும் அது. 10
 

 
16
ஓங்கு பூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால்
சிறு தொழுமகளிர் அஞ்சனம் பெய்யும்
பூக் கஞல் ஊரனை உள்ளி,
பூப் போல் உண்கண் பொன் போர்த்தனவே.
வாயிலாய்ப் புகுந்தார்க்குத் தோழி, 'அவன் வரவையே நினைத்து இவள் கண்ணும் பசந்தன; இனி அவன் வந்து பெறுவது என்னை?' எனச் சொல்லி, வாயில் மறுத்தது. 6

 
21
முள்ளி நீடிய முது நீர் அடைகரைப்
புள்ளிக் களவன் ஆம்பல் அறுக்கும்
தண் துறை ஊரன் தெளிப்பவும்,
உண்கண் பசப்பது எவன்கொல்? அன்னாய்!'
'புறத்தொழுக்கம் எனக்கு இனி இல்லை' என்று தலைமகன் தெளிப்பவும், 'அஃது உளது' என்று வேறுபடும் தலைமகட்குத் தோழி சொல்லியது. 1

 
24
தாய் சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு
பிள்ளை தின்னும் முதலைத்து அவன் ஊர்
எய்தினன் ஆகின்று கொல்லோ? மகிழ்நன்
பொலந் தொடி தெளிர்ப்ப முயங்கியவர்
5
நலம் கொண்டு துறப்பது எவன்கொல்? அன்னாய்!
'பரத்தையருள்ளும் ஒருத்தியை விட்டு ஒருத்தியைப் பற்றி ஒழுகுகின்றான்' என்பது கேட்ட தோழி, வாயிலாய் வந்தார் கேட்ப, தலைமகட்குச் சொல்லியது. 4

 
25
புயல் புறந்தந்த புனிற்று வளர் பைங் காய்
வயலைச் செங் கொடி களவன் அறுக்கும்
கழனி ஊரன் மார்பு பலர்க்கு
இழை நெகிழ் செல்லல் ஆக்கும் அன்னாய்!
இதுவும் அது. 5

 
26
கரந்தைஅம் செறுவில் துணை துறந்து, களவன்
வள்ளை மென் கால் அறுக்கும் ஊரன்
எம்மும், பிறரும், அறியான்;
இன்னன் ஆவது எவன்கொல்? அன்னாய்!
தலைமகற்கு வாயிலாகப் புகுந்தார், 'நின் முனிவிற்கு அவன்பொருந்தாநின்றான்' என்றவழி, தலைமகட்குத் தோழி, 'அவன்பாடு அஃது இல்லை' என்பதுபடச் சொல்லியது. 6

 
27
செந்நெல்அம் செறுவில் கதிர் கொண்டு, களவன்
தண்ணக மண் அளைச் செல்லும் ஊரற்கு
எல் வளை நெகிழச் சாஅய்,
அல்லல் உழப்பது எவன்கொல்? அன்னாய்!
தலைமகன் மனைக்கண் வருங்காலத்து வாராது தாழ்த்துழி, 'புறத்தொழுக்கம் உளதாயிற்று' எனக் கருதி வருந்தும் தலைமகட்குத் தோழி சொல்லியது7.

 
28
உண்துறை அணங்கு இவள் உறை நோய் ஆயின்,
தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு
ஒண் தொடி நெகிழச் சாஅய்,
மென் தோள் பசப்பது எவன்கொல்? அன்னாய்!
இற்செறிவித்த இடத்துத் தலைமகட்கு எய்திய வேறுபாடு கண்டு, 'இது தெய்வத்தினான் ஆயிற்று' என்று, தமர் வெறி எடுப்புழி, அதனை விலக்கக் கருதிய தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 8

 
29
மாரி கடி கொள, காவலர் கடுக,
வித்திய வெண் முளை களவன் அறுக்கும்
கழனி ஊரன் மார்பு உற மரீஇ,
திதலை அல்குல் நின் மகள்
5
பசலை கொள்வது எவன்கொல்? அன்னாய்!
வரைவு எதிர்கொள்ளார் தமர் அவண் மறுப்புழி, தோழி செவிலிக்கு அறத்தோடு நின்றது. 9

 
30
வேப்பு நனை அன்ன நெடுங் கண் களவன்
தண்ணக மண் அளை நிறைய, நெல்லின்
இரும் பூ உறைக்கும் ஊரற்கு இவள்
பெருங் கவின் இழப்பது எவன்கொல்? அன்னாய்!
இதுவும் அது. 10

 
44
தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்புத்
தாய் முகம் நோக்கி வளர்ந்திசினாஅங்கு,
அதுவே ஐய, நின் மார்பே;
அறிந்தனை ஒழுகுமதி; அறனுமார் அதுவே.
பரத்தையர் மனைக்கண்ணே பல் நாள் தங்கி, தன் மனைக்கண்ணே வந்த தலைமகற்குத் தோழி கூறியது. 4

 
45
கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து,
வேனில் ஆயின் மணி நிறம் கொள்ளும்
யாறு அணிந்தன்று, நின் ஊரே;
பசப்பு அணிந்தனவால் மகிழ்ந! என் கண்ணே.
நெடுநாள் பரத்தையர் இடத்தனாய் ஒழுகிய தலைமகன் மனைவயின் சென்றுழித் தோழி சொல்லியது. 5

 
46
நினக்கே அன்று அஃது, எமக்குமார் இனிதே
நின் மார்பு நயந்த நல் நுதல் அரிவை
வேண்டிய குறிப்பினை ஆகி,
ஈண்டு நீ அருளாது, ஆண்டு உறைதல்லே.
மனைக்கண் வருதல் பரத்தை விலக்க விலங்கி, பின்பு, உலகியல் பற்றி, அவள் குறிப்பினோடும் வந்தமை அறிந்த தோழி தலைமகனைப் புலந்து சொல்லியது. 6

 
50
துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும்
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர!
தஞ்சம் அருளாய் நீயே; நின்
நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே.
மனையின் நீங்கிப் பரத்தையிடத்துப் பல் நாள் தங்கி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. 10

 
51
நீர் உறை கோழி நீலச் சேவல்
கூர் உகிர்ப் பேடை வயாஅம் ஊர!
புளிங்காய் வேட்கைத்து அன்று, நின்
மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே.
வாயில் பெற்றுப் புகுந்து போய்ப் புறத்தொழுக்கம் ஒழுகி, பின்பும் வாயில் வேண்டும் தலைமகற்குத் தோழி மறுத்தது. 1

 
52
வயலைச் செங் கொடிப் பிணையல் தைஇச்
செவ் விரல் சிவந்த சேயரி மழைக் கண்
செவ் வாய்க் குறுமகள் இனைய;
எவ் வாய் முன்னின்று மகிழ்ந! நின் தேரே?
வாயில் பெற்றுக் கூடியிருந்த தலைமகற்குத் தோழி நகையாடிச் சொல்லியது. 2

 
53
துறை எவன் அணங்கும், யாம் உற்ற நோயே?
சிறை அழி புதுப் புனல் பாய்ந்தெனக் கலங்கிக்
கழனித் தாமரை மலரும்
பழன ஊர! நீ உற்ற சூளே.
தலைவி தன்னுடன் போய்ப் புனலாடிய வழி, 'இதுபரத்தையருடன் ஆடிய துறை' என நினைந்து பிறந்த மெலிவை மறைத்தமையை உணர்ந்த தலைமகன், மனைவயின் புகுந்துழி, 'தெய்வங்கள் உறையும் துறைக்கண்ணே நாம் ஆடினவதனால் பிறந்தது கொல், நினக்கு இவ்

 
54
திண் தேர்த் தென்னவன் நல் நாட்டு உள்ளதை
வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும்
தேனூர் அன்ன இவள் தெரிவளை நெகிழ,
ஊரின் ஊரனை நீ தர, வந்த
5
பைஞ்சாய்க் கோதை மகளிர்க்கு
அஞ்சுவல், அம்ம! அம் முறை வரினே.
வாயில் வேண்டிவந்த தலைமகற்குத் தலைமகள் குறிப்பு அறிந்த தோழி, அவன் கொடுமை கூறி, வாயில் மறுத்தது. 4

 
55
கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும்,
தேர் வண் கோமான், தேனூர் அன்ன இவள்
நல் அணி நயந்து நீ துறத்தலின்,
பல்லோர் அறியப் பசந்தன்று, நுதலே.
வரைந்த அணிமைக்கண்ணே புறத்தொழுக்கம் ஒழுகி, வாயில் வேண்டி வந்து, தன் மெலிவு கூறிய தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லியது. 5

 
56
பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா,
வெல் போர்ச் சோழர், ஆமூர் அன்ன இவள்
நலம்பெறு சுடர் நுதல் தேம்ப,
எவன் பயம் செய்யும், நீ தேற்றிய மொழியே?
புறத்தொழுக்கம் உளதாகியது அறிந்து தலைமகள் மெலிந்துழி, 'அஃது இல்லை' என்று தேற்றும் தலைமகற்குத் தோழி சொல்லியது. 6

 
57
பகலில் தோன்றும் பல் கதிர்த் தீயின்
ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன
இவள் நலம் புலம்பப் பிரிய,
அனைநலம் உடையோளோ மகிழ்ந! நின் பெண்டே?
தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாயிற்று என்பது கேட்ட தோழி அவனை வினாயது. 7

 
58
விண்டு அன்ன வெண்ணெல் போர்வின்,
கை வண் விராஅன், இருப்பை அன்ன
இவள் அணங்குற்றனை போறி;
பிறர்க்கும் அனையையால்; வாழி நீயே!
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் புலந்த தலைமகற்குத் தோழி கூறியது. 8

 
59
கேட்டிசின் வாழியோ, மகிழ்ந! ஆற்றுற,
மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர
நினக்கு மருந்து ஆகிய யான், இனி,
இவட்கு மருந்து அன்மை நோம், என் நெஞ்சே.
தலைமகள் ஆற்றாளாம் வண்ணம் மனைக்கண் வரவு சுருங்கிய தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதாகிய வழி ஆற்றாளாகிய தோழி சொல்லியது. 9

 
60
பழனக் கம்புள் பயிர்ப்பெடை அகவும்
கழனி ஊர! நின் மொழிவல்: என்றும்
துஞ்சு மனை நெடு நகர் வருதி;
அஞ்சாயோ, இவள் தந்தை கை வேலே?
வரையாது ஒழுகும் தலைமகன் இரவுக்குறி வந்துழித் தோழி சொல்லியது. 10

 
75
பலர் இவண் ஒவ்வாய், மகிழ்ந! அதனால்,
அலர் தொடங்கின்றால் ஊரே மலர
தொல் நிலை மருதத்துப் பெருந் துறை,
நின்னோடு ஆடினள், தண் புனல் அதுவே.
பரத்தையோடு புனலாடி வந்த தலைமகன் அதனை மறைத்துக் கூறியவழித் தோழி கூறியது. 5

 
76
பைஞ்சாய்க் கூந்தல், பசு மலர்ச் சுணங்கின்
தண் புனலாடி, தன் நலம் மேம்பட்டனள்
ஒண் தொடி மடவரல், நின்னோடு,
அந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே.
இதுவும் அது. 6

 
84
செவியின் கேட்பினும் சொல் இறந்து வெகுள்வோள்,
கண்ணின் காணின், என் ஆகுவள்கொல்
நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் தண் கயம் போல,
5
பலர் படிந்து உண்ணும் நின் பரத்தை மார்பே?
பரத்தையர் மனைக்கண் தங்கிப் புணர்ச்சிக் குறியோடு வாயில் வேண்டி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. 4

 
91
நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து
வெறி மலர்ப் பொய்கை, ஆம்பல் மயக்கும்
கழனி ஊரன் மகள் இவள்;
பழன வெதிரின் கொடிப் பிணையலளே.
குறைவேண்டிப் பின்னின்று வந்த தலைமகற்குத் தோழி, 'இவள் இளையள் விளைவு இலள்' எனச் சேட்படுத்தது. 1

 
93
எருமை நல் ஏற்றினம் மேயல் அருந்தென,
பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா,
செய்த வினைய மன்ற பல் பொழில்
தாது உண் வெறுக்கைய ஆகி, இவள்
5
போது அவிழ் முச்சி ஊதும் வண்டே.
முயக்கம் பெற்றவழிப் பிறந்த வெறிநாற்றத்தால் பண்டையளவு அன்றி வண்டுகள் மொய்த்தனவாக, 'இதற்குக் காரணம் என்?' என்று வினாவிய செவிலித் தாய்க்குக் கூறுவாள் போன்று, தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது. 3

 
98
தண் புனல் ஆடும் தடங் கோட்டு எருமை
திண் பிணி அம்பியின் தோன்றும் ஊர!
ஒண் தொடி மட மகள் இவளினும்
நுந்தையும் ஞாயும் கடியரோ, நின்னே?
புறத்தொழுக்கம் உளது ஆகிய துணையானே புலந்து வாயில் நேராத தலைமகள் கொடுமை தலைமகன் கூறக் கேட்ட தோழி அவற்குச் சொல்லியது. 8

 
100
புனலாடு மகளிர் இட்ட ஒள் இழை,
மணல் ஆடு சிமையத்து, எருமை கிளைக்கும்
யாணர் ஊரன் மகள், இவள்;
பாணர் நரம்பினும் இன் கிளவியளே.
வாயில் நேர்தற்பொருட்டு முகம்புகுவான் வேண்டி இயற்பழித்துழி, தலைமகள் இயற்பட மொழிந்த திறம் தலைமகற்குத் தோழி சொல்லியது. 10

 
101
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! உதுக் காண்
ஏர் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று, நின் மகள்
பூப் போல் உண்கண் மரீஇய
5
நோய்க்கு மருந்து ஆகிய கொண்கன் தேரே.
அறத்தோடு நின்ற பின்னர் வரைதற் பொருட்டுப் பிரிந்த தலைமகன் வரைவோடு புகுந்தவழித் தோழி செவிலிக்குக் காட்டிச் சொல்லியது. 1

 
102
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர்
நீல் நிறப் பெருங் கடல் புள்ளின் ஆனாது,
துன்புறு துயரம் நீங்க,
இன்புற இசைக்கும், அவர் தேர் மணிக் குரலே.
இதுவும் அது. 2

 
103
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! புன்னையொடு
ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்
இவட்கு அமைந்தனனால் தானே;
தனக்கு அமைந்தன்று, இவள் மாமைக் கவினே.
அறத்தொடு நின்ற தோழி, வதுவை நிகழாநின்றுழி, தாய்க்குக் காட்டி உவந்து சொல்லியது. 3

 
104
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர்ப்
பலர் மடி பொழுதின், நலம் மிகச் சாஅய்
நள்ளென வந்த இயல் தேர்ச்
செல்வக் கொண்கன் செல்வனஃது ஊரே.
புதல்வற் பெற்றுழித் தலைமகன் மனைக்கண் சென்ற செவிலிக்கு, முன்பு அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி, அவன் ஊர் நன்மை காட்டிச் சொல்லியது. 4

 
105
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! முழங்குகடல்
திரை தரு முத்தம் வெண் மணல் இமைக்கும்
தண்ணம் துறைவன் வந்தென,
பொன்னினும் சிவந்தன்று; கண்டிசின் நுதலே.
அறத்தொடு நின்ற பின் வேண்டுவன தருதற்குப் பிரிந்த தலைமகன் வரைவொடு வந்துழி, தலைமகள் நுதற்கண் முன்புள்ள பசப்பு நீங்கும் வண்ணம் தோன்றிய கதிர்ப்புக் காட்டி, செவிலிக்குத் தோழி சொல்லியது. 5

 
106
அன்னை, வாழி!வேண்டு, அன்னை! அவர் நாட்டுத்
துதிக்கால் அன்னம் துணை செத்து மிதிக்கும்
தண் கடல் வளையினும் இலங்கும் இவள்
அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே.
அறத்தொடு நின்ற தோழி அது வற்புறுப்பான் வேண்டிச் செவிலிக்குச் சொல்லியது. 6

 
107
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! என் தோழி
சுடர் நுதல் பசப்பச் சாஅய், படர் மெலிந்து,
தண் கடல் படு திரை கேட்டொறும்,
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே.
தோழி செவிலிக்கு அறத்தொடுநிலை குறித்துக் கூறியது. 7

 
108
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! கழிய
முண்டகம் மலரும் தண் கடல் சேர்ப்பன்
எம் தோள் துறந்தனன்ஆயின்,
எவன்கொல் மற்று அவன் நயந்த தோளே?
அறத்தொடுநிலை பிறந்த பின்னும் வரைவு நீடிற்றாக, 'மற்றொரு குலமகளை வரையும் கொல்?' என்று ஐயுற்ற செவிலி, குறிப்பு அறிந்த தோழி அவட்குச் சொல்லியது. 8

 
109
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நெய்தல்
நீர்ப் படர் தூம்பின் பூக் கெழு துறைவன்
எம் தோள் துறந்த காலை, எவன்கொல்
பல் நாள் வரும், அவன் அளித்த பொழுதே?
அறத்தொடு நின்ற பின்பு வரைவான் பிரிந்த தலைமகன் கடிதின் வாராதவழி, ஐயுற்ற செவிலி, 'அவன் நும்மைத் துறந்தான்போலும்; நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?' என்றாட்குத் தோழி சொல்லியது. 9

 
110
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! புன்னை
பொன் நிறம் விரியும் பூக் கெழு துறைவனை
'என்னை' என்றும், யாமே; இவ் ஊர்
பிறிது ஒன்றாகக் கூறும்;
5
ஆங்கும் ஆக்குமோ, வாழிய, பாலே?
நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10

 
143
எக்கர் ஞாழல் புள் இமிழ் அகன் துறை,
இனிய செய்த; நின்று, பின்
முனிவு செய்த இவள் தட மென் தோளே.
புறத்துத் தங்கி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. 3

 
145
எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ் சினை
ஓதம் வாங்கும் துறைவன்
மாயோள் பசலை நீக்கினன், இனியே!
வரைவு மறுத்த தமர் உடம்படுமாற்றால் சான்றோரைத் தலைமகன் விடுத்தது அறிந்த தோழி தலைமகள் கேட்குமாற்றால் சொல்லியது. 5

 
147
எக்கர் ஞாழல் மலர் இல் மகளிர்
ஒண் தழை அயரும் துறைவன்
'தண் தழை விலை' என நல்கினன், நாடே.
சுற்றத்தார் வேண்டிய கொடுத்துத் தலைமகன் வரைவு மாட்சிப்படுத்தமை அறிந்த தோழி உவந்த உள்ளத்தாளாய்த் தலைமகட்குச் சொல்லியது. 7

 
148
எக்கர் ஞாழல் இகந்து படு பெருஞ் சினை
வீ இனிது கமழும் துறைவனை
நீ இனிது முயங்குமதி, காதலோயே!
களவொழுக்கத்தின் விளைவு அறியாது அஞ்சிய வருத்தம் நீங்க வதுவை கரண வகையான் முடித்த பின்பு, தலைமகளைப் பள்ளியிடத்து உய்க்கும் தோழி சொல்லியது. 8

 
149
எக்கர் ஞாழல் பூவின் அன்ன
சுணங்கு வளர் இள முலை மடந்தைக்கு
அணங்கு வளர்த்து, அகறல் வல்லாதீமோ!
வரைந்து எய்திய தலைமகன் தலைவியோடு பள்ளியிடத்து இருந்துழித் தோழி வாழ்த்தியது. 9

 
153
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
உளர, ஒழிந்த தூவி குவவு மணல்
போர்வில் பெறூஉம் துறைவன் கேண்மை
5
நல்நெடுங் கூந்தல் நாடுமோ மற்றே?
பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிய தலைமகன் கேட்குமாற்றால் வாயிலாய்ப் புகுந்தாற்குத் தோழி கூறியது. 3

 
156
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
பதைப்ப, ஒழிந்த செம் மறுத் தூவி
தெண் கழிப் பரக்கும் துறைவன்
5
எனக்கோ காதலன்; அனைக்கோ வேறே!
பரத்தையிடத்து வாயில் விட்டு ஒழுகுகின்ற தலைமகனது வாயிலாய் வந்தார்க்குத் தோழி வாயில் மறுத்தது. 6

 
158
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
கானல்அம் பெருந் துறைத் துணையொடு கொட்கும்
தண்ணம் துறைவ! கண்டிகும்,
5
அம் மா மேனி எம் தோழியது துயரே.
பரத்தை புலந்துழிப் புலவி நீக்குவானாய், அஃது இடமாக வந்தமை அறிந்த தோழி தலைமகற்கு வாயில் மறுத்தது. 8

 
159
வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென,
காணிய சென்ற மட நடை நாரை
பசி தின, அல்கும் பனி நீர்ச் சேர்ப்ப!
நின் ஒன்று இரக்குவென் அல்லேன்;
5
தந்தனை சென்மோ கொண்ட இவள் நலனே?
மறாமற்பொருட்டு உண்டிக் காலத்து வாயில் வேண்டி வந்த தலைமகற்குத் தோழி கூறியது. 9

 
166
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
வரி வெண் தாலி வலை செத்து வெரூஉம்
மெல்லம் புலம்பன் தேறி,
நல்ல ஆயின, நல்லோள் கண்ணே.
வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகள் பசப்பிற்கு வருந்திய தோழி அவனை இயற்பழித்துக் கூறியது. 6

 
168
பெருங் கடற்கரையது சிறு வெண் காக்கை
துறை படி அம்பி அகமணை ஈனும்
தண்ணம் துறைவன் நல்கின்,
ஒண் நுதல் அரிவை பால் ஆரும்மே.
நொதுமலர் வரைவு வேண்டி விடுத்தமை அறிந்த தலைமகள் ஆற்றாளாய்ப் பசி அட நிற்புழி, 'இதற்குக் காரணம் என்?' என்று செவிலி வினவ, தோழி அறத்தொடு நின்றது. 8

 
177
தவறு இலராயினும், பனிப்ப மன்ற
இவறு திரை திளைக்கும் இடு மணல் நெடுங் கோட்டு
முண்டக நறு மலர் கமழும்
தொண்டி அன்னோள் தோள் உற்றோரே.
தலைமகளும் தோழியும் ஒருங்கு நின்றுழி, 'இவள் என்னை வருத்துதற்குச் செய்த தவறு என்?' என்று வினாய தலைமகற்குத் தோழி நகையாடிச் சொல்லியது. 7

 
179
நல்குமதி, வாழியோ! நளி நீர்ச் சேர்ப்ப!
அலவன் தாக்கத் துறை இறாப் பிறழும்
இன் ஒலித் தொண்டி அற்றே,
நின் அலது இல்லா இவள் சிறு நுதலே.
குறியிடத்து வந்து புணர்ந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு வரைவு கடாயது.

 
180
சிறு நணி வரைந்தனை கொண்மோ பெருநீர்
வலைவர் தந்த கொழுமீன் வல்சிப்
பறை தபு முது குருகு இருக்கும்
துறை கெழு தொண்டி அன்ன இவள் நலனே.
தாழ்த்து வரையக் கருதிய தலைமகனைத் தோழி நெருங்கி, 'கடிதின் வரைய வேண்டும்' எனச் சொல்லியது. 10

 
182
நெய்தல் நறு மலர் செருந்தியொடு விரைஇக்
கை புனை நறுந் தார் கமழும் மார்பன்
அருந் திறல் கடவுள் அல்லன்
பெருந் துறைக் கண்டு, இவள் அணங்கியோனே.
தலைமகள் மெலிவுகண்டு, 'தெய்வத்தால் ஆயிற்று' எனத் தமர் நினைந்துழி, தோழி அறத்தொடு நின்றது. 2

 
186
நாரை நல் இனம் கடுப்ப, மகளிர்
நீர் வார் கூந்தல் உளரும் துறைவ!
'பொங்குகழி நெய்தல் உறைப்ப, இத் துறைப்
பல்கால் வரூஉம் தேர்' என,
5
'செல்லாதீமோ' என்றனள், யாயே.
பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவுகடாயது. 6

 
187
நொதுமலாளர் கொள்ளார் இவையே;
எம்மொடு வந்து கடல் ஆடு மகளிரும்
நெய்தல்அம் பகைத்தழைப் பாவை புனையார்;
உடலகம் கொள்வோர் இன்மையின்,
5
தொடலைக்கு உற்ற சில பூவினரே.
தோழி கையுறை மறுத்தது. 7

 
189
புன்னை நுண் தாது உறைத்தரு நெய்தல்
பொன்படு மணியின் பொற்பத் தோன்றும்
மெல்லம் புலம்பன் வந்தென,
நல்லஆயின தோழி! என் கண்ணே.
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வரைவான் வந்துழிக் கண்டு உவகையோடு வந்த தோழி, 'நின் கண் மலர்ச்சிக்குக் காரணம் என்?' என்று வினாவிய தலைவிக்குத் சொல்லியது. 9

 
190
தண் நறு நெய்தல் தளை அவிழ் வான் பூ
வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும்
மெல்லம் புலம்பன் மன்ற எம்
பல் இதழ் உண்கண் பனி செய்தோனே.
தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10

 
193
வலம்புரி உழுத வார் மணல் அடைகரை
இலங்கு கதிர் முத்தம் இருள் கெட இமைக்கும்
துறை கெழு கொண்க! நீ தந்த
அறைபுனல் வால் வளை நல்லவோ தாமே?
வரையாது வந்து ஒழுகும் தலைமகன் தலைமகட்கு வளைகொண்டு வந்து கொடுத்துழி, 'பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலன் உடையவோ இவை?' எனத் தலைமகள் மெலிவு சொல்லித் தோழி வரைவுகடாயது. 3

 
194
கடற் கோடு அறுத்த, அரம் போழ் அவ் வளை
ஒண் தொடி மடவரல் கண்டிகும்; கொண்க!
நல் நுதல் இன்று மால் செய்தென,
கொன் ஒன்று கடுத்தனள், அன்னையது நிலையே.
பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு மனைக்கண் நிகழ்ந்தது கூறி, செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது. 4

 
196
கோடு ஈர் எல் வளை, கொழும் பல் கூந்தல்,
ஆய் தொடி, மடவரல் வேண்டுதிஆயின்
தெண் கழிச் சேயிறாப் படூஉம்
தண் கடல் சேர்ப்ப! வரைந்தனை கொண்மோ.
குறை மறுக்கப்பட்ட தலைமகன் பின்னும் குறைவேண்டியவழித் தோழி சொல்லியது. 6

 
198
வளை அணி முன்கை, வால் எயிற்று அமர் நகை,
இளையர் ஆடும் தளை அவிழ் கானல்,
குறுந் துறை வினவி நின்ற
நெடுந் தோள் அண்ணல் கண்டிகும், யாமே.
பரத்தையர் மனைக்கண் பல் நாள் தங்கி, பின்பு ஆற்றாமையே வாயிலாக வந்த தலைமகனை எதிர்ப்பட்ட தோழி தலைமகட்குச் சொல்லியது. 8

 
199
கானல்அம் பெருந் துறைக் கலிதிரை திளைக்கும்
வான் உயர் நெடு மணல் ஏறி, ஆனாது,
காண்கம் வம்மோ தோழி!
செறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே!
தலைமகன் ஒருவழித் தணந்துழி ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கும் தோழி சொல்லியது. 9

 
200
இலங்கு வீங்கு எல்வளை! ஆய்நுதல் கவின,
பொலந்தேர்க் கொண்கன் வந்தனன் இனியே;
விலங்கு அரி நெடுங் கண் ஞெகிழ்மதி;
நலம் கவர் பசலையை நகுகம் நாமே!
உடன்போக்குத் துணிந்தவழி, அதற்கு இரவின்கண் தலைமகன் வந்தது அறிந்த தோழி தலைமகளைப் பாயல் உணர்த்திச் சொல்லியது. 10

 
202
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்
குடுமித் தலைய மன்ற
நெடு மலை நாடன் ஊர்ந்த மாவே.
தலைமகன் வரைதல் வேண்டித் தானே வருகின்றமை கண்ட தோழி உவந்த உள்ளத்தளாய்த் தலைமகட்குக் காட்டிச் சொல்லியது. 2
 

 
205
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! என் தோழி
நனி நாண் உடையள்; நின்னும் அஞ்சும்;
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்
மலர்ந்த மார்பின் பாயல்
5
தவ நனி வெய்யள்; நோகோ; யானே.
நொதுமலர் வரைவு வேண்டி விட்டுழித் தலைமகட்கு உளதாகிய வருத்தம் நோக்கி, 'இவள் இவ்வாறு ஆதற்குக் காரணம் என்னை?' என்று வினவிய செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது. 5
 

 
206
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! உவக்காண்
மாரிக் குன்றத்துக் காப்பாள் அன்னன்;
தூவலின் நனைந்த தொடலை ஒள் வாள்,
பாசி சூழ்ந்த பெருங் கழல்,
5
தண் பனி வைகிய வரிக் கச்சினனே!
இரவுக்குறிக்கண் தலைமகன் வந்து குறியிடத்து நின்றமை அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. 6
 

 
207
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நன்றும்
உணங்கல கொல்லோ, நின் தினையே? உவக்காண்
நிணம் பொதி வழுக்கின் தோன்றும்,
மழை தலைவைத்து, அவர் மணி நெடுங் குன்றே.
'மழையின்மையால் தினை உணங்கும்; விளையமாட்டா; புனங்காப்பச் சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று' என வெறுத்திருந்த தலைமகட்குத் தோழி சொல்லியது. 7
 

 
208
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! கானவர்
கிழங்கு அகழ் நெடுங் குழி மல்க வேங்கைப்
பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு,
மணி நிற மால் வரை மறைதொறு, இவள்
5
அறை மலர் நெடுங் கண் ஆர்ந்தன பனியே.
செவிலிக்கு அறத்தொடு நின்ற தோழி, அவளால் வரைவு மாட்சிமைப் பட்ட பின்பு, 'இவள் இவ்வாறு பட்ட வருத்தம் எல்லாம் நின்னின் தீர்ந்தது' என்பது குறிப்பின் தோன்ற அவட்குச் சொல்லியது. 8
 

 
210
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைப்
புலவுச் சேர் துறுகல் ஏறி, அவர் நாட்டுப்
பூக் கெழு குன்றம் நோக்கி நின்று,
மணி புரை வயங்கு இழை நிலைபெறத்
5
தணிதற்கும் உரித்து, அவள் உற்ற நோயே.
காப்பு மிகுதிக்கண் தலைமகள் மெலிவுகண்டு, 'தெய்வத்தினான் ஆயிற்று' என்று வெறியெடுப்புழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10
 

 
211
நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன
வயலைஅம் சிலம்பின் தலையது
செயலைஅம் பகைத் தழை வாடும் அன்னாய்!
தலைமகன் ஆற்றாமை கண்டு, கையுறை ஏற்ற தோழி தலைமகள் தழை ஏற்க வேண்டிக் கூறியது. 1
 

 
212
சாத்த மரத்த பூழில் எழு புகை
கூட்டு விரை கமழும் நாடன்
அறவற்கு எவனோ, நாம் அகல்வு? அன்னாய்!
வரைவு எதிர்கொள்ளார் தமர் அவண் மறுத்தவழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 2
 

 
214
சாரல் பலவின் கொழுந் துணர் நறும் பழம்
இருங் கல் விடர் அளை வீழ்ந்தென, வெற்பில்
பெருந்தேன் இறாஅல் சிதறும் நாடன்,
பேர் அமர் மழைக் கண் கலிழ, தன்
5
சீருடை நல் நாட்டுச் செல்லும் அன்னாய்!
தலைமகன், 'ஒருவழித் தணப்பல்' என்று கூறியவதனை அவன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குத் தோழி சொல்லியது. 4
 

 
216
குறுங் கை இரும் புலிக் கோள் வல் ஏற்றை,
நெடும் புதல் கானத்து மடப் பிடி ஈன்ற
நடுங்கு நடைக் குழவி கொளீஇய, பலவின்
பழம் தூங்கு கொழு நிழல் ஒளிக்கும் நாடற்கு,
5
கொய்தரு தளிரின் வாடி, நின்
மெய் பிறிதாதல் எவன்கொல்? அன்னாய்!
வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி கூறியது. 6
 

 
217
பெரு வரை வேங்கைப் பொன் மருள் நறு வீ
மான் இனப் பெருங் கிளை மேயல் ஆரும்
கானக நாடன் வரவும், இவள்
மேனி பசப்பது எவன்கொல்? அன்னாய்!
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் மீட்சி உணர்ந்த தோழி ஆற்றாளாகிய தலைமகட்குச் சொல்லியது. 7
 

 
218
நுண் ஏர் புருவத்த கண்ணும் ஆடும்;
மயிர் வார் முன்கை வளையும் செறூஉம்;
களிறு கோள் பிழைத்த கதம் சிறந்து எழு புலி
எழுதரு மழையின் குழுமும்
5
பெருங் கல் நாடன் வரும்கொல்? அன்னாய்!
தலைமகன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அது கேட்டு, 'இஃது என் ஆம் கொல்?' என்று ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி தனக்கு நற்குறி செய்யக்கண்டு, 'கடிதின் வந்து வரைவான்' எனச் சொல்லியது. 8
 

 
219
கருங் கால் வேங்கை மாத் தகட்டு ஒள் வீ
இருங் கல் வியல் அறை வரிப்பத் தாஅம்
நல் மலை நாடன் பிரிந்தென,
ஒள் நுதல் பசப்பது எவன்கொல்? அன்னாய்!
வரைவிடை வைத்துப் பிரிந்த அணுமைக்கண்ணே ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி கூறியது. 9
 

 
220
அலங்குமழை பொழிந்த அகன்கண் அருவி
ஆடுகழை அடுக்கத்து இழிதரு நாடன்
பெரு வரை அன்ன திரு விறல் வியல் மார்பு
முயங்காது கழிந்த நாள், இவள்
5
மயங்கு இதழ் மழைக்கண் கலிழும் அன்னாய்!
நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10
 

 
223
அம்ம வாழி, தோழி! நம் மலை
வரை ஆம் இழிய, கோடல் நீட,
காதலர்ப் பிரிந்தோர் கையற, நலியும்
தண் பனி வடந்தை அற்சிரம்
5
முந்து வந்தனர் நம் காதலோரே.
வரைவிடை வைத்துப்பிரிந்த தலைமகன் குறித்த பருவத்திற்கு முன்னே வருகின்றமை அறிந்த தோழி தலைமகட்கு மகிழ்ந்து சொல்லியது. 3
 

 
225
அம்ம வாழி, தோழி! பைஞ் சுனைப்
பாசடை நிவந்த பனி மலர்க் குவளை
உள்ளகம் கமழும் கூந்தல் மெல்லியல்
ஏர் திகழ் ஒள் நுதல் பசத்தல்
5
ஓரார்கொல் நம் காதலோரே?
மெலிவு கூறி வரைவு கடாவக் கேட்ட தலைமகன் தான் வரைதற்பொருட்டால் ஒருவழித் தணந்து நீட்டித்தானாக, ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி கூறியது. 5
 

 
226
அம்ம வாழி,தோழி!நம் மலை
நறுந்தண் சிலம்பின் நாறு குலைக் காந்தள்
கொங்கு உண் வண்டின் பெயர்ந்து புறமாறி, நின்
வன்புடை விறல் கவின் கொண்ட
5
அன்பிலாளன் வந்தனன், இனியே.
வரைவிடைவைத்துப் பிரிந்த தலைமகன் நீட்டித்து வந்துழித் தோழி தலைமகட்குச் சொல்லியது. 6

 
227
அம்ம வாழி! தோழி! நாளும்,
நல் நுதல் பசப்பவும், நறுந் தோள் ஞெகிழவும்,
'ஆற்றலம் யாம்' என மதிப்பக் கூறி,
நப் பிரிந்து உறைந்தோர் மன்ற; நீ
5
விட்டனையோ அவர் உற்ற சூளே?
ஒருவழித் தணந்து வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குத் தோழி சொல்லியது. 7
 

 
228
அம்ம வாழி, தோழி! நம் ஊர்
நிரந்து இலங்கு அருவிய நெடு மலை நாடன்
இரந்து குறையுறாஅன் பெயரின்,
என் ஆவதுகொல் நம் இன் உயிர் நிலையே?
தலைமகன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அவர் கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி அறத்தொடு நின்றது. 8

 
229
அம்ம வாழி, தோழி! நாம் அழப்
பல் நாள் பிரிந்த அறனிலாளன்
வந்தனனோ, மற்று இரவில்?
பொன் போல் விறல் கவின் கொள்ளும், நின் நுதலே.
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் மீண்டான் என்பது கேட்டு, தலைமகட்கு எய்திய கவினைத் தோழி, தான் அறியாதாள் போன்று, அவளை வினாவியது. 9
 

 
230
அம்ம வாழி, தோழி! நம்மொடு
சிறு தினைக் காவலன் ஆகி, பெரிதும் நின்
மென் தோள் ஞெகிழவும், திரு நுதல் பசப்பவும்,
பொன் போல் விறல் கவின் தொலைத்த
5
குன்ற நாடற்கு அயர்வர் நன் மணனே.
தலைமகன் வரைவு வேண்டித் தமரை விடுத்துழி, மறுப்பர்கொல்லோ? என்று அச்சம் உறுகின்ற தலைவிக்குத் தோழி சொல்லியது. 10
 

 
231
யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப!
இரும் பல் கூந்தல் திருந்துஇழை அரிவை
திதலை மாமை தேயப்
பசலை பாயப் பிரிவு? தெய்யோ!
ஒருவழித் தணந்து வந்த தலைமகற்குத் தோழி கூறியது. 1
 

 
232
போது ஆர் கூந்தல் இயல் அணி அழுங்க
ஏதிலாட்டியை நீ பிரிந்ததற்கே,
அழல் அவிர் மணிப்பூண் நனையப்
பெயல்ஆனா, என் கண்ணே தெய்யோ!
ஒருவழித் தணந்து வந்த தலைமகன் 'நான் பிரிந்த நாட்கண் நீர் என் செய்தீர்?' எனக் கேட்க, தோழி அவற்குச் சொல்லியது. 2
 

 
233
வருவைஅல்லை; வாடை நனி கொடிதே
அரு வரை மருங்கின் ஆய்மணி வரன்றி,
ஒல்லென இழிதரும் அருவி நின்
கல்லுடை நாட்டுச் செல்லல் தெய்யோ!
ஒருவழித் தணந்து வரைய வேண்டும் என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. 3
 

 
234
'மின் அவிர் வயங்குஇழை ஞெகிழச் சாஅய்,
நன்னுதல் பசத்தல் யாவது?' துன்னிக்
கனவில் காணும் இவளே
நனவில் காணாள், நின் மார்பே தெய்யோ!'
இடைவிடாது வந்தொழுகாநின்றே களவு நீடாமல் வரைதற்கு முயல்கின்ற தலைமகன் தலைமகள் வேறுபாடு கண்டு, 'இதற்குக் காரணம் என்?' என்று வினாவியவழி, 'நின்னைக் கனவில் கண்டு, விழித்துக் காணாளாய் வந்தது' எனத் தோழி சொல்லி வரைவு முடுக்
 

 
235
கையற வீழ்ந்த மை இல் வானமொடு
அரிது காதலர்ப் பொழுதே; அதனால்,
தெரிஇழை தெளிர்ப்ப முயங்கி,
பிரியலம் என்கமோ? எழுகமோ? தெய்யோ!
உடன்போக்கு நேர்வித்த பின்பு தலைமகன் உடன்கொண்டு போவான் இடை யாமத்து வந்துழி, தலைமகட்குத் தோழி சொல்லியது. 5
 

 
236
அன்னையும் அறிந்தனள்; அலரும் ஆயின்று;
நல் மனை நெடு நகர் புலம்பு கொள உறுதரும்,
இன்னா வாடையும் மலையும்;
நும் ஊர்ச் செல்கம்; எழுகமோ? தெய்யோ!
களவொழுக்கம் வெளிப்பட்டமையும் தம் மெலிவும் உணர்த்தி, தோழி உடன்போக்கு நயந்தாள் போன்று, வரைவு கடாயது. 6
 

 
237
காமம் கடவ, உள்ளம் இனைப்ப,
யாம் வந்து காண்பது ஓர் பருவம் ஆயின்,
ஓங்கித் தோன்றும் உயர் வரைக்கு
யாங்கு எனப்படுவது, நும் ஊர்? தெய்யோ!
அல்லகுறிப்பட்டு நீங்கிய தலைமகனை வந்திலனாகக் கொண்டு, அவன் பின்பு வந்துழி, அவற்குத் தோழி சொல்லியது. 7
 

 
238
வார் கோட்டு வயத் தகர் வாராது மாறினும்,
குரு மயிர்ப் புருவை நசையின் அல்கும்
மாஅல் அருவித் தண் பெருஞ் சிலம்ப!
நீ இவண் வரூஉம்காலை,
5
மேவரும் மாதோ, இவள் நலனே தெய்யோ!
வரையாது வந்தொழுகும் தலைமகனுக்கு, 'இவள் கவின் நீ வந்த காலத்து வருதலால், நீ போன காலத்து அதன் தொலைவு உனக்கு அறியப்படாது' எனத் தோழி சொல்லி, வரைவு கடாயது. 8
 

 
239
சுரும்பு உணக் களித்த புகர் முக வேழம்
இரு பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம் நின்
குன்று கெழு நல் நாட்டுச் சென்ற பின்றை,
நேர் இறைப் பணைத் தோள் ஞெகிழ,
5
வாராய்ஆயின், வாழேம் தெய்யோ!
'வரைவிடை வைத்துப் பிரிவல்' என்ற தலைமகற்குத் தோழி கூறியது. 9
 

 
240
அறியேமஅல்லேம்; அறிந்தனம் மாதோ
பொறி வரிச் சிறைய வண்டினம் மொய்ப்பச்
சாந்தம் நாறும் நறியோள்
கூந்தல் நாறும் நின் மார்பே தெய்யோ!
தலைமகற்குப் புறத்தொழுக்கம் உளதானமை அறிந்து தலைமகள் புலந்துவழி, அவன் அதனை 'இல்லை' என்று மறைத்தானாக, தோழி சொல்லியது. 10
 

 
241
நம் உறு துயரம் நோக்கி, அன்னை
வேலன் தந்தனள் ஆயின், அவ் வேலன்
வெறி கமழ் நாடன் கேண்மை
அறியுமோ தில்ல? செறி எயிற்றோயே!
இற்செறித்தவழித் தலைமகட்கு எய்திய மெலிவு கண்டு, 'இஃது எற்றினான் ஆயிற்று?' என்று வேலனைக் கேட்பத் துணிந்துழி, அறத்தொடுநிலை துணிந்த தோழி செவிலி கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லியது. 1
 

 
242
அறியாமையின், 'வெறி' என மயங்கி,
அன்னையும் அருந் துயர் உழந்தனள்; அதனால்,
எய்யாது விடுதலோ கொடிதே நிரை இதழ்
ஆய் மலர் உண்கண் பசப்ப,
5
சேய் மலை நாடன் செய்த நோயே.
தலைமகள் அறத்தொடுநிலை நயப்ப வேண்டித் தோழி அவட்குச் சொல்லியது. 2
 

 
243
கறி வளர் சிலம்பிற் கடவுள் பேணி,
அறியா வேலன், 'வெறி' எனக் கூறும்;
அது மனம் கொள்குவை, அனை! இவள்
புது மலர் மழைக் கண் புலம்பிய நோய்க்கே.
தாயுழை அறியாமை கூறித் தோழி வெறி விலக்கியது. 3
 

 
244
அம்ம வாழி, தோழி! பல் மலர்
நறுந் தண் சோலை நாடு கெழு நெடுந்தகை
குன்றம் பாடான் ஆயின்,
என் பயம் செய்யுமோ வேலற்கு வெறியே?
வெறியாடல் துணிந்துழி, விலக்கலுறுந் தோழி செவிலி கேட்குமாற்றால் தலைமகட்குச் சொல்லியது. 4
 

 
245
பொய்யா மரபின் ஊர் முது வேலன்
கழங்கு மெய்ப்படுத்து, கன்னம் தூக்கி,
'முருகு' என மொழியும்ஆயின்,
கெழுதகைகொல் இவள் அணங்கியோற்கே?
தலைமகன் சிறைப்புறத்தானாக, வெறி அறிவுறீஇத் தோழி வரைவு கடாயது. 5
 

 
246
வெறி செறித்தனனே, வேலன் கறிய
கல் முகை வயப் புலி கழங்கு மெய்ப்படூஉ,
..................................................................................................................
மெய்ம்மை அன்ன பெண்பாற் புணர்ந்து,
5
மன்றில் பையுள் தீரும்
குன்ற நாடன் உறீஇய நோயே.
வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாய் நின்றுழி, அவன் கேட்குமாற்றால் வெறி நிகழாநின்றமை தோழி தலைமகட்குச் சொல்லியது. 6
 

 
247
அன்னை தந்தது ஆகுவது அறிவென்:
பொன் நகர் வரைப்பில் கன்னம் தூக்கி,
'முருகு' என மொழியும் ஆயின்,
அரு வரை நாடன் பெயர்கொலோ, அதுவே?
வெறி விலக்கலுறும் தோழி தமர் கேட்பத் தலைமகளை வினவுவாளாய்ச் சொல்லியது. 7
 

 
248
பெய்ம்மணல் முற்றம் கவின் பெற இயற்றி,
மலை வான் கொண்ட சினைஇய வேலன்
கழங்கினான் அறிகுவது என்றால்,
நன்றால்அம்ம, நின்ற இவள் நலனே!
'தலைமகள் வேறுபாடு கழங்கினால் தெரியும்' என்று வேலன் கூறியவழி, அதனைப் 'பொய்' என இகழ்ந்த தோழி வெறி விலக்கிச் செவிலிக்கு அறத்தொடு நின்றது. 8
 

 
249
பெய்ம்மணல் வரைப்பில் கழங்கு படுத்து, அன்னைக்கு,
'முருகு' என மொழியும் வேலன்; மற்று அவன்
வாழிய இலங்கும் அருவிச்
சூர் மலை நாடனை அறியாதோனே!
வேலன் கூறிய மாற்றத்தை மெய்யெனக் கொண்ட தாய் கேட்பத் தலைமகட்குத் தோழி கூறியது. 9
 

 
250
பொய் படுபு அறியாக் கழங்கே! மெய்யே
மணி வரைக் கட்சி மட மயில் ஆலும் நம்
மலர்ந்த வள்ளிஅம் கானங் கிழவோன்;
ஆண்தகை விறல் வேள் அல்லன் இவள்
5
பூண் தாங்கு இளமுலை அணங்கியோனே.
'தலைமகட்கு வந்த நோய் முருகனால் வந்தமை இக் கழங்கு கூறிற்று' என்று வேலன் சொன்னான் என்பது கேட்ட தோழி அக் கழங்கிற்கு  ப்பாளாய், செவிலி கேட்குமாற்றால் அறத்தொடுநிலை குறித்துச் சொல்லியது. 10
 

 
251
குன்றக் குறவன் ஆர்ப்பின், எழிலி
நுண் பல் அழி துளி பொழியும் நாட!
நெடு வரைப் படப்பை நும் ஊர்க்
கடு வரல் அருவி காணினும் அழுமே.
வரையாது வந்தொழுகும் தலைமகற்கு வரைவு வேட்ட தோழி கூறியது. 1
 

 
252
குன்றக் குறவன் புல் வேய் குரம்பை
மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன்
புரையோன் வாழி, தோழி! விரை பெயல்
அரும் பனி அளைஇய கூதிர்ப்
5
பெருந் தண் வாடையின் முந்து வந்தனனே.
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் குறித்த பருவத்துக்கு முன்னே வந்தானாக, உவந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. 2
 

 
254
குன்றக் குறவன் ஆரம் அறுத்தென,
நறும் புகை சூழ்ந்து காந்தள் நாறும்
வண்டு இமிர் சுடர் நுதல் குறுமகள்!
கொண்டனர், செல்வர் தம் குன்று கெழு நாட்டே.
உடன்போக்கு உடன்பட வேண்டிய தோழி தலைமகட்குச் சொல்லியது. 4
 

 
257
குன்றக் குறவன் கடவுள் பேணி,
இரந்தனன் பெற்ற எல் வளைக் குறுமகள்
ஆய் அரி நெடுங் கண் கலிழ,
சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே.
'வரைவிடை வைத்துப் பிரிவல்' என்ற தலைமகற்குத் தோழி உடன்படாது கூறியது. 7
 

 
258
குன்றக் குறவன் காதல் மட மகள்
அணி மயில் அன்ன அசை நடைக் கொடிச்சியைப்
பெரு வரை நாடன் வரையும் ஆயின்,
கொடுத்தனெம் ஆயினோ நன்றே
5
இன்னும் ஆனாது, நன்னுதல் துயரே.
வரைவு வேண்டிவிட மறுத்துழித் தமர்க்கு  ப்பாளாய், வரையாது வந்தொழுகும் தலைமகற்குத் தோழி, அவன் மலை காண்டலே பற்றாகத் தாங்கள் உயிர் வாழ்கின்றமை தோன்றச் சொல்லியது. 8
 

 
260
குன்றக் குறவன் காதல் மட மகள்,
மென் தோள் கொடிச்சியைப் பெறற்கு அரிது தில்ல
பைம் புறப் படு கிளி ஓப்பலர்;
புன்புல மயக்கத்து விளைந்தன தினையே!
பகற்குறிக்கண் வந்த தலைமகனைத் தோழி, 'இனிப் புனங்காவற்கு வாரோம்' எனக்கூறி வரைவு கடாயது. 10
 

 
261
மென் தினை மேய்ந்த தறுகண் பன்றி
வன் கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன்
எந்தை அறிதல் அஞ்சிக்கொல்?
அதுவே மன்ற வாராமையே.
அல்லகுறிப்பட்டுத் தலைமகன் நீங்கினமை அறியாதாள் போன்று தோழி, பிற்றை ஞான்று அவன் சிறைப்புறத்தானாய் நிற்ப, தலைமகட்குச் சொல்லியது. 1
 

 
264
இளம் பிறை அன்ன கோட்ட கேழல்
களங்கனி அன்ன பெண்பாற் புணரும்
அயம் திகழ் சிலம்ப! கண்டிகும்
பயந்தன மாதோ, நீ நயந்தோள் கண்ணே!
வரையாது வந்து ஒழுகும் தலைமகனைப் பகற்குறிக்கண்ணே எதிர்ப்பட்டுத் தோழி வரைவு கடாயது. 4
 

 
266
சிறு கண் பன்றிப் பெருஞ் சின ஒருத்தலொடு
குறுக் கை இரும் புலி பொரூஉம் நாட!
நனி நாண் உடையை மன்ற
பனிப் பயந்தன, நீ நயந்தோள் கண்ணே!
நொதுமலர் வரைவு பிறந்துழி, தலைமகட்கு உளதாகிய வேறுபாடு தோழி கூறி, தலைமகனை வரைவு கடாயது. 6
 

 
67
மடவள் அம்ம, நீ இனிக் கொண்டோளே
'தன்னொடு நிகரா என்னொடு நிகரிப்
பெரு நலம் தருக்கும்' என்ப: விரிமலர்த்
தாது உண் வண்டினும் பலரே,
5
ஓதி ஒள் நுதல் பசப்பித்தோரே.
தலைநின்று ஒழுகப்படாநின்ற பரத்தை புறன்  த்தாள் எனக் கேட்ட தலைவி தலைமகன் வந்துழி, அவள் திறத்தாராய் நின்று ஒழுகும் வாயில்கள் கேட்பச் சொல்லியது. 7

 
268
தாஅய் இழந்த தழு வரிக் குருளையொடு
வள மலைச் சிறு தினை உணீஇ, கானவர்
வரை ஓங்கு உயர் சிமைக் கேழல் உறங்கும்
நல் மலை நாடன் பிரிதல்
5
என் பயக்குமோ நம் விட்டுத் துறந்தே?
'அவன் குறிப்பு இருந்தவாற்றால் நம்மைப் பிரிந்து வந்தல்லது வரைய மாட்டான் போன்று இருந்தது' எனத் தலைமகள் கூறக்கேட்ட தோழி, அவட்குத் தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. 8
 

 
270
கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில்
தலை விளை கானவர் கொய்தனர் பெயரும்
புல்லென் குன்றத்துப் புலம்பு கொள் நெடு வரை
காணினும் கலிழும் நோய் செத்து,
5
தாம் வந்தனர், நம் காதலோரே.
வரைவு காரணமாக நெட்டிடை கழிந்து, பொருள்வயிற் போகிய தலைமகன் வந்தமை அறிந்த தோழி, உவந்த உள்ளத்தளாய், தலைமகட்குச் சொல்லியது. 10
 

 
271
அவரை அருந்த மந்தி பகர்வர்
பக்கின் தோன்றும் நாடன் வேண்டின்,
பசுப்போல் பெண்டிரும் பெறுகுவன்;
தொல் கேள் ஆகலின், நல்குமால் இவட்கே.
தலைமகன் வரைவுவேண்டிவிடத் தமர் மறுத்துழி, செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது. 1
 

 
273
அத்தச் செயலைத் துப்பு உறழ் ஒண் தளிர்
புன் தலை மந்தி வன் பறழ் ஆரும்
நல் மலை நாட! நீ செலின்,
நின் நயந்து உறைவி என்னினும் கலிழ்மே.
வரைவிடை வைத்துப் பிரியும் தலைமகன் 'நின் துணைவியை உடம்படுவித்தேன்; இனி நீயே இதற்கு உடம்படாது கலிழ்கின்றாய்' என்றாற்குத் தோழி கூறியது. 3
 

 
275
குரங்கின் தலைவன் குரு மயிர்க் கடுவன்
சூரல்அம் சிறு கோல் கொண்டு, வியல் அறை
மாரி மொக்குள் புடைக்கும் நாட!
யாம் நின் நயந்தனம் எனினும், எம்
5
ஆய்நலம் வாடுமோ அருளுதி எனினே?
வரையாது வந்தொழுகும் தலைமகன் இடையிட்டு வருதலால், எதிர்ப்பாடு பெறாத தோழி குறியிடத்து எதிர்ப்பட்டு, அவன் கொடுமை கூறி, நெருங்கிச் சொல்லியது. 5
 

 
276
மந்திக் காதலன் முறி மேய் கடுவன்
தண் கமழ் நறைக் கொடி கொண்டு, வியல் அறைப்
பொங்கல் இள மழை புடைக்கும் நாட!
நயவாய்ஆயினும் வரைந்தனை சென்மோ
5
கல் முகை வேங்கை மலரும்
நல் மலை நாடன் பெண்டு எனப் படுத்தே!
வரையாது வந்தொழுகும் தலைமகனைத் தோழி நெருங்கிச் சொல்லியது. 6
 

 
277
குறவர் முன்றில் மா தீண்டு துறுகல்
கல்லா மந்தி கடுவனோடு உகளும்
குன்ற நாட! நின் மொழிவல்; என்றும்,
பயப்ப நீத்தல் என் இவள்
5
கயத்து வளர் குவளையின் அமர்த்த கண்ணே.
வரையாது வந்தொழுகும் தலைமகன் புணர்ந்து நீங்குழி, எதிர்ப்பட்ட தோழி வரைவு கடாயது. 7
 

 
279
கல் இவர் இற்றி புல்லுவன ஏறிக்
குளவி மேய்ந்த மந்தி துணையொடு
வரைமிசை உகளும் நாட! நீ வரின்,
கல் அகத்தது எம் ஊரே;
5
அம்பல் சேரி அலர் ஆங்கட்டே.
இரவுக்குறி வேண்டும் தலைமகனைத் தோழி வரவு அருமை கூறி மறுத்தது. 9
 

 
280
கரு விரல் மந்திக் கல்லா வன் பார்ப்பு
இரு வெதிர் ஈர்ங் கழை ஏறி, சிறு கோல்
மதி புடைப்பது போல் தோன்றும் நாட!
வரைந்தனை நீ எனக் கேட்டு யான்
5
 த்தனென்அல்லெனோ அஃது என் யாய்க்கே?
புணர்ந்து உடன்போகிய தலைமகன் தலைமகளைக் கரண வகையான் வரைந்தானாக, எதிர் சென்ற தோழிக்கு, 'இனி யான் இவளை வரைந்தமை நுமர்க்கு உணர்த்த வேண்டும்' என்றானாக, அவள் சொல்லியது. 10
 

 
282
சாரல் புறத்த பெருங் குரல் சிறு தினைப்
பேர் அமர் மழைக்கண் கொடிச்சி கடியவும்
சோலைச் சிறு கிளி உன்னும் நாட!
ஆர் இருள் பெருகின; வாரல்
5
கோட்டு மா வழங்கும் காட்டக நெறியே.
இரவுக்குறி நேர்ந்த தோழி தலைமகன் வந்து புணர்ந்து நீங்குழி, அவனை எதிர்ப்பட்டுச் சொல்லியது. 2
 

 
283
வன்கட் கானவன் மென் சொல் மட மகள்
புன்புல மயக்கத்து உழுத ஏனல்
பைம் புறச் சிறு கிளி கடியும் நாட!
பெரிய கூறி நீப்பினும்,
5
பொய்வலைப் படூஉம் பெண்டு தவப் பலவே.
தோழி வாயில் மறுக்கவும், தலைமகன் ஆற்றாமை கண்டு, தலைமகள் வாயில் நேர, அவன் பள்ளியிடத்தானாய் இருந்துழிப் புக்க தோழி கூறியது. 3
 

 
284
அளியதாமே, செவ் வாய்ப் பைங் கிளி
குன்றக் குறவர் கொய் தினைப் பைங் கால்
இருவி நீள்புனம் கண்டும்.
பிரிதல் தேற்றாப் பேர் அன்பினவே.
தினை அரிந்துழி, கிளியை நோக்கிக் கூறுவாள் போல், சிறைப்புறமாக ஒம்படுத்தது. 4
 

 
285
பின் இருங் கூந்தல் நல் நுதல் குறமகள்
மென் தினை நுவணை உண்டு, தட்டையின்
ஐவனச் சிறு கிளி கடியும் நாட!
வீங்குவளை நெகிழப் பிரிதல்
5
யாங்கு வல்லுநையோ, ஈங்கு இவள் துறந்தே?
ஒருவழித் தணந்து வந்த தலைமகற்குத் தோழி கூறியது. 5
 

 
287
நெடு வரை மிசையது குறுங் கால் வருடை
தினை பாய் கிள்ளை வெரூஉம் நாட!
வல்லை மன்ற பொய்த்தல்;
வல்லாய் மன்ற, நீ அல்லது செயலே.
'இன்ன நாளில் வரைவல்' எனக் கூறி, அந்நாளில் வரையாது, பின் அவ்வாறு கூறும் தலைமகற்குத் தோழி கூறியது. 7
 

 
289
'கொடிச்சி இன் குரல் கிளி செத்து, அடுக்கத்துப்
பைங் குரல் ஏனல் படர்தரும் கிளி' எனக்
காவலும் கடியுநர் போல்வர்
மால் வரை நாட! வரைந்தனை கொண்மோ!
இற்செறித்த பின்னர்த் தோழி வரைவு கடாவுழி, 'முதிர்ந்த தினைப்புனம் இவள் காத்தொழிந்தால் வரைவல்' என்றாற்கு அவள் சொல்லியது. 9
 

 
290
அறம் புரி செங்கோல் மன்னனின் தாம் நனி
சிறந்தன போலும், கிள்ளை பிறங்கிய
பூக் கமழ் கூந்தல் கொடிச்சி
நோக்கவும் படும்; அவள் ஓப்பவும் படுமே.
காவல் மிகுதியான் இரவுக்குறி மறுக்கப்பட்டு நீங்கிய தலைமகன் வந்துழி, அவன் கேட்டு வெறுப்புத் தீர்த்தற் பொருட்டால், தினைப்புனம் காவல் தொடங்காநின்றாள் என்பது தோன்ற, தோழி கூறியது. 10
 

 
294
எரி மருள் வேங்கை இருந்த தோகை
இழை அணி மடந்தையின் தோன்றும் நாட!
இனிது செய்தனையால்; நுந்தை வாழியர்!
நல் மனை வதுவை அயர, இவள்
5
பின் இருங் கூந்தல் மலர் அணிந்தோயே!
வதுவை செல்லாநின்றுழித் தலைமகற்குத் தோழி கூறியது. 4
 

 
296
கொடிச்சி காக்கும் பெருங் குரல் ஏனல்
அடுக்கல் மஞ்ஞை கவரும் நாட!
நடுநாள் கங்குலும் வருதி;
கடு மா தாக்கின், அறியேன் யானே.
இரவுக்குறி வருகின்ற தலைமகற்குத் தோழி ஆற்றருமை கூறி மறுத்தது. 6
 

 
297
விரிந்த வேங்கைப் பெருஞ் சினைத் தோகை
பூக் கொய் மகளிரின் தோன்றும் நாட!
பிரியினும், பிரிவது அன்றே
நின்னொடு மேய மடந்தை நட்பே.
ஒருவழித் தணந்து வரைய வேண்டும் என்ற தலைமகற்குத் தோழி கூறியது. 7
 

 
300
கொடிச்சி கூந்தல் போலத் தோகை
அம் சிறை விரிக்கும் பெருங் கல் வெற்பன்
வந்தனன்; எதிர்ந்தனர் கொடையே;
அம் தீம் கிளவி! பொலிக, நின் சிறப்பே!
தலைமகன் தானே வரைவு வேண்டிவிட, சுற்றத்தார் கொடை நேர்ந்தமை தலைமகட்குத் தோழி சொல்லியது.
 

 
301
மால் வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர்,
அருஞ் சுரம் செல்வோர், சென்னிக் கூட்டும்
அவ் வரை இறக்குவை ஆயின்,
மை வரை நாட! வருந்துவள் பெரிதே.
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகற்குச் சொல்லியது 1
 

 
302
அரும்பொருள் செய் வினை தப்பற்கும் உரித்தே;
பெருந் தோள் அரிவை தகைத்தற்கும் உரியள்;
செல்லாய் ஆயினோ நன்றே
மெல்லம் புலம்ப! இவள் அழப் பிரிந்தே.
பொருள்வயிற் பிரியும் தலைமகன், 'பிரிவு உடன்படுத்த வேண்டும்' என்றானாக, அவற்குத் தோழி சொல்லியது. 2
 

 
303
புதுக் கலத்தன்ன கனிய ஆலம்
போகில்தனைத் தடுக்கும் வேனில் அருஞ் சுரம்
தண்ணிய இனிய ஆக;
எம்மொடும் சென்மோ, விடலை! நீயே.
சுரத்து அருமை கூறி உடன் செலவு மறுக்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. 3
 

 
304
கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய
ஆன் நீர்ப் பத்தல் யானை வௌவும்
கல் அதர்க் கவலை செல்லின், மெல் இயல்
புயல் நெடுங்கூந்தல் புலம்பும்;
5
வய மான் தோன்றல்! வல்லாதீமே.
பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. 4
 

 
305
களிறு பிடி தழீஇப் பிற புலம் படராது,
பசி தின வருந்தும் பைது அறு குன்றத்து,
சுடர்த் தொடிக் குறுமகள் இனைய,
எனைப்பயம் செய்யுமோ விடலை! நின் செலவே?
'உடன்போக்கு ஒழித்துத் தனித்துச் செல்வல்' என்ற தலைமகற்குத் தோழி கூறியது. 5
 

 
306
வெல்போர்க் குருசில்! நீ வியன் சுரன் இறப்பின்,
பல் காழ் அல்குல் அவ் வரி வாட,
குழலினும் இனைகுவள் பெரிதே
விழவு ஒலி கூந்தல் மாஅயோளே.
பிரியும் தலைமகற்குத் தோழி தலைமகள் பிரிவாற்றாமை கூறியது. 6
 

 
307
ஞெலி கழை முழங்குஅழல் வயமா வெரூஉம்
குன்றுடை அருஞ் சுரம் செலவு அயர்ந்தனையே;
நன்று இல, கொண்க! நின் பொருளே
பாவை அன்ன நின் துணைப் பிரிந்து வருமே.
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் அதன் சிறப்புக் கூறியவழி, தோழி அதனை இழித்துக் கூறியது. 7
 

 
308
பல் இருங் கூந்தல் மெல்லியலோள்வயின்
பிரியாய் ஆயினும் நன்றே; விரிஇணர்க்
கால் எறுழ் ஒள் வீ தாஅய
முருகு அமர் மா மலை பிரிந்தெனப் பிரிமே.
'பிரிவல்' என்ற தலைமகற்குத் தோழி, 'பிரியாதொழியப் பெறின் நன்று; பிரிவையாயின் இப் பருவத்து இம் மாமலை எங்களை விட்டுப் பிரிந்தால் பிரி', எனச் சொல்லியது. 8
 

 
309
வேனில் திங்கள் வெஞ் சுரம் இறந்து
செலவு அயர்ந்தனையால் நீயே; நன்றும்
நின் நயந்து உறைவி கடுஞ் சூல் சிறுவன்
முறுவல் காண்டலின், இனிதோ
5
இறு வரை நாட! நீ இறந்து செய் பொருளே?
'பொருள் வயிற் பிரிவல்' என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. 9
 

 
310
பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல்,
இலங்கு வளை மென் தோள், இழை நிலை நெகிழப்
பிரிதல் வல்லுவைஆயின்,
அரிதே விடலை! இவள் ஆய்நுதல் கவினே!
பிரிகின்ற தலைமகற்குத் தோழி, 'நீ நினைக்கின்ற கருமம் முடித்தாய் ஆயினும், இவள் நலம் மீட்டற்கு அரிது' எனச் சொல்லி, செலவு அழுங்குவித்தது. 10
 

 
331
அம்ம வாழி, தோழி! அவிழ் இணர்க்
கருங் கால் மராஅத்து வைகு சினை வான் பூ
அருஞ் சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள,
இனிய கமழும் வெற்பின்
5
இன்னாது என்ப, அவர் சென்ற ஆறே.
தலைமகன் பிரிந்துழி, 'செல்லும் வழியிடத்து மலையின் உளதாகிய நாற்றத்தால் நம்மை நினைத்து முடியச் செல்லார், மீள்வரோ?' எனக் கேட்ட தலைவிக்கு, 'அவர் முடியச் சென்றார்' என்பது அறிந்து, இரங்கித் தோழி கூறியது. 1
 

 
351
அத்தப் பலவின் வெயில் தின் சிறு காய்,
அருஞ் சுரம் செல்வோர், அருந்தினர் கழியும்
காடு பின் ஒழிய வந்தனர்; தீர்க, இனி
பல் இதழ் உண்கண் மடந்தை! நின்
5
நல் எழில் அல்குல் வாடிய நிலையே.
பிரிந்த தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. 1

 
352
விழுத் தொடை மறவர் வில் இடத் தொலைந்தோர்
எழுத்துடை நடுகல் அன்ன விழுப் பிணர்ப்
பெருங் கை யானை இருஞ் சினம் உறைக்கும்
வெஞ் சுரம் 'அரிய' என்னார்,
5
வந்தனர் தோழி! நம் காதலோரே!
இதுவும் அது. 2

 
353
எரிக் கொடி கவைஇய செவ் வரை போலச்
சுடர்ப் பூண் விளங்கும் ஏந்து எழில் அகலம்
நீ இனிது முயங்க, வந்தனர்
மா இருஞ் சோலை மலை இறந்தோரே.
இதுவும் அது. 3

 
354
ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை
மறியுடை மான் பிணை கொள்ளாது கழியும்
அரிய சுரன் வந்தனரே
தெரிஇழை அரிவை! நின் பண்பு தர விரைந்தே.
இதுவும் அது. 4

 
357
குரவம் மலர, மரவம் பூப்ப,
சுரன் அணி கொண்ட கானம் காணூஉ,
'அழுங்குக, செய்பொருள் செலவு!' என விரும்பி, நின்
அம் கலிழ் மாமை கவின
5
வந்தனர் தோழி! நம் காதலோரே.
பொருள்வயிற் பிரிந்து ஆண்டு உறைகின்ற தலைமகன் குறித்த பருவ வரவு கண்டு, கடிதின் மீண்டு வந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது. 7

 
358
கோடு உயர் பல் மலை இறந்தனர் ஆயினும்,
நீட விடுமோ மற்றே நீடு நினைந்து,
துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி,
உடைத்து எழு வெள்ளம் ஆகிய கண்ணே?
தலைமகள் ஆற்றாமை கண்டு பிரிந்த தலைமகன் வந்தனனாகத் தோழி சொல்லியது. 8

 
362
பதுக்கைத்து ஆய ஒதுக்கு அருங் கவலை,
சிறு கண் யானை உறு பகை நினையாது,
யாங்கு வந்தனையோ பூந் தார் மார்ப!
அருள் புரி நெஞ்சம் உய்த்தர
5
இருள் பொர நின்ற இரவினானே?
சேணிடைப் பிரிந்த தலைமகன் இடைநிலத்துத் தங்காது இரவின்கண் வந்துழித் தோழி சொல்லியது. 2
 

 
364
முளவு மா வல்சி எயினர் தங்கை
இளமா எயிற்றிக்கு, நின் நிலை அறியச்
சொல்லினென் இரக்கும்அளவை
வென் வேல் விடலை! விரையாதீமே!
உடன்போக்கு நயந்த தலைமகன் அதனைத் தோழிக்கு உணர்த்த, அவள் முடிப்பாளாய்ச் சொல்லியது. 4
 

 
366
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! 'என் தோழி
பசந்தனள் பெரிது' எனச் சிவந்த கண்ணை,
கொன்னே கடவுதி ஆயின், என்னதூஉம்,
அறிய ஆகுமோ மற்றே
5
முறி இணர்க் கோங்கம் பயந்தமாறே?
தலைமகளை நோக்கி, 'இவ் வேறுபாடு எற்றினான் ஆயிற்று?' என்று வினவிய செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது. 6
 

 
367
பொரி அரைக் கோங்கின் பொன் மருள் பசு வீ,
விரிஇணர் வேங்கையொடு, வேறு பட மிலைச்சி,
விரவு மலர் அணிந்த வேனில் கான் யாற்றுத்
தேரொடு குறுக வந்தோன்
5
பேரொடு புணர்ந்தன்று அன்னை! இவள் உயிரே.
நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 7
 

 
368
எரிப் பூ இலவத்து ஊழ் கழி பல் மலர்
பொரிப் பூம் புன்கின் புகர் நிழல் வரிக்கும்
தண் பத வேனில் இன்ப நுகர்ச்சி
எம்மொடு கொண்மோ, பெரும! நின்
5
அம் மெல்லோதி அழிவிலள் எனினே!
'வேனிற்காலத்து நும்மொடு விளையாட்டு நுகர வருவல்' என்று, பருவம் குறித்துப் பிரியலுற்ற தலைமகற்குத் தோழி கூறியது. 8
 

 
398
'புள்ளும் அறியாப் பல் பழம் பழுனி,
மட மான் அறியாத் தட நீர் நிலைஇ,
சுரம் நனி இனிய ஆகுக!' என்று
நினைத்தொறும் கலிழும் என்னினும்
5
மிகப் பெரிது புலம்பின்று தோழி! நம் ஊரே.
தலைமகள் மீண்டு வந்துழி, அவட்குத் தோழி கூறியது. 8
 

 
423
மா மழை இடியூஉத் தளி சொரிந்தன்றே;
வாள் நுதல் பசப்பச் செலவு அயர்ந்தனையே;
யாமே நிற் துறந்து அமையலம்;
ஆய் மலர் உண்கணும் நீர் நிறைந்தனவே.
கார்ப் பருவத்தே பிரியக் கருதிய தலைமகற்குத் தோழி தலைமகளது ஆற்றாமை கூறிச் செலவு அழுங்குவித்தது. 3
 

 
424
புறவு அணி நாடன் காதல் மட மகள்
ஒள் நுதல் பசப்ப நீ செலின், தெண் நீர்ப்
போது அவிழ் தாமரை அன்ன நின்
காதல்அம் புதல்வன் அழும், இனி முலைக்கே.
இதுவும் அது. 4
 

 
431
நன்றே, காதலர் சென்ற ஆறே!
அணி நிற இரும் பொறை மீமிசை
மணி நிற உருவின தோகையும் உடைத்தே.
'பிரிவு உடம்பட்டும் ஆற்றாயாகின்றது என்னை?' என்று வினவியவழி, 'அவர் போன சுரம் போகற்கு அரிது என்று ஆற்றேனாகின்றேன்' என்ற தலைமகட்கு, 'வேனிற்காலம் கழிந்தது; கார்ப்பருவத் தோற்றத்திலே பிரிந்தாராகலான், அச் சுரம் நன்று'
இனி வருகின்ற பாட்டு ஒன்பதிற்கும் இஃது ஒக்கும்.
 

 
432
நன்றே, காதலர் சென்ற ஆறே!
சுடு பொன் அன்ன கொன்றை சூடி,
கடி புகுவனர்போல் மள்ளரும் உடைத்தே. 2
 

 
433
நன்றே, காதலர் சென்ற ஆறே!
நீர்ப்பட எழிலி வீசும்
கார்ப் பெயற்கு எதிரிய கானமும் உடைத்தே. 3
 

 
434
நன்றே, காதலர் சென்ற ஆறே!
மறியுடை மான்பிணை உகள,
தண் பெயல் பொழிந்த இன்பமும் உடைத்தே. 4
 

 
435
நன்றே, காதலர் சென்ற ஆறே!
நிலன் அணி நெய்தல் மலர,
பொலன் அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே. 5
 

 
436
நன்றே, காதலர் சென்ற ஆறே!
நன் பொன் அன்ன சுடர் இணர்க்
கொன்றையொடு மலர்ந்த குருந்துமார் உடைத்தே. 6
 

 
437
நன்றே, காதலர் சென்ற ஆறே!
ஆலித் தண் மழை தலைஇய,
வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்தே. 7
 

 
438
நன்றே, காதலர் சென்ற ஆறே!
பைம் புதல் பல் பூ மலர,
இன்புறத் தகுந பண்புமார் உடைத்தே. 8
 

 
439
நன்றே, காதலர் சென்ற ஆறே!
குருந்தங் கண்ணிக் கோவலர்
பெருந் தண் நிலைய பாக்கமும் உடைத்தே. 9
 

 
440
நன்றே, காதலர் சென்ற ஆறே!
தண் பெயல் அளித்த பொழுதின்
ஒண் சுடர்த் தோன்றியும் தளவமும் உடைத்தே. 10
 

 
461
வான் பிசிர்க் கருவியின் பிடவு முகை தகைய,
கான் பிசிர் கற்ப, கார் தொடங்கின்றே;
இனையல் வாழி, தோழி; எனையதூஉம்
நிற் துறந்து அமைகுவர்அல்லர்,
5
வெற்றி வேந்தன் பாசறையோரே.
பிரிவிடை வேறுபட்ட கிழத்தியைத் தோழி வரவு கூறி, ' த்த பருவம் வந்ததாகலான், அவர் வருவர்; என வற்புறீஇயது. 1
 

 
462
ஏதில பெய்ம் மழை கார் என மயங்கிய
பேதைஅம் கொன்றைக் கோதை நிலை நோக்கி,
எவன் இனி, மடந்தை! நின் கலிழ்வே? நின்வயின்
தகை எழில் வாட்டுநர் அல்லர்,
5
முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே.
பருவங் கண்டு வேறுபட்ட கிழத்தியைத் தோழி, 'பருவம் அன்று' என வற்புறீஇயது. 2
 

 
463
புதல்மிசை நறு மலர் கவின் பெறத் தொடரி, நின்
நலம் மிகு கூந்தல் தகை கொளப் புனைய
வாராது அமையலோ இலரே; நேரார்
நாடு படு நன்கலம் தரீஇயர்,
5
நீடினர் தோழி! நம் காதலோரே.
குறித்த பருவம் வரவும் தலைமகன் தாழ்த்துழி, தோழி காரணம் கூறி, வற்புறீஇயது. 3
 

 
464
கண் எனக் கருவிளை மலர, பொன் என
இவர் கொடிப் பீரம் இரும் புதல் மலரும்
அற்சிரம் மறக்குநர் அல்லர் நின்
நல் தோள் மருவரற்கு உலமருவோரே.
வரைந்த அணுமைக்கண்ணே பிரிந்த தலைமகன் குறித்த பருவம் வந்துழி, 'இதனை மறந்தார்' என்ற தலைமகட்குத் தோழி, 'வரைவதற்கு முன்பு அவர் அன்புடைமை இதுவாகலான் மறத்தல் கூடாது' எனச் சொல்லி வற்புறீஇயது. 4
 

 
465
நீர் இகுவன்ன நிமிர் பரி நெடுந் தேர்,
கார் செய் கானம் கவின் பட, கடைஇ,
மயங்கு மலர் அகலம் நீ இனிது முயங்க,
வருவர், வாழி, தோழி!
5
செரு வெங் குருசில் தணிந்தனன் பகையே.
பருவம் கண்டு வேறுபட்ட தலைமகளை, 'வேந்தன் வினைமுடித்தான்' எனக் கேட்ட தோழி, 'வருவர்' என வற்புறீஇயது. 5
 

 
466
வேந்து விடு விழுத் தொழில் எய்தி, ஏந்து கோட்டு
அண்ணல் யானை அரசு விடுத்து, இனியே
எண்ணிய நாளகம் வருதல் பெண் இயல்
காமர் சுடர் நுதல் விளங்கும்
5
தே மொழி அரிவை! தெளிந்திசின் யானே.
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகளை, 'அவர் போன காரியம் இடையூறு இன்றி முடிந்து வருதல் பல்லாற்றானும் தெளிந்தேன்' எனத் தோழி சொல்லி ஆற்றுவித்தது. 6
 

 
467
புனை இழை நெகிழச் சாஅய், நொந்துநொந்து
இனையல் வாழியோ இகுளை! 'வினைவயின்
சென்றோர் நீடினர் பெரிது' என: தங்காது
நம்மினும் விரையும் என்ப,
5
வெம் முரண் யானை விறல் போர் வேந்தே.
தலைமகன் வினைவயிற் பிரிய ஆற்றாள் ஆகிய தலைமகளைத் தோழி வற்புறீஇயது. 7
 

 
468
வரி நுணல் கறங்க, தேரை தெவிட்ட,
கார் தொடங்கின்றே காலை; இனி, நின்
நேர் இறைப் பணைத் தோட்கு ஆர் விருந்து ஆக,
வடி மணி நெடுந் தேர் கடைஇ,
5
வருவர் இன்று, நம் காதலோரே.
பிரிவு நீட ஆற்றாள் ஆய தலைமகட்குத் தோழி பருவங்காட்டி, 'இன்றே வருவர்' என வற்புறீஇயது. 8
 

 
469
பைந் தினை உணங்கல் செம் பூழ் கவரும்
வன்புல நாடன் தரீஇய, வலன் ஏர்பு
அம் கண் இரு விசும்பு அதிர, ஏறொடு
பெயல் தொடங்கின்றே வானம்;
5
காண்குவம்; வம்மோ, பூங் கணோயே!
பிரிவு நீட ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி 'அவரை நமக்குத் தருதற்கு வந்தது காண் இப் பருவம்' எனக் காட்டி வற்புறீஇயது. 9
 

 
470
இரு நிலம் குளிர்ப்ப வீசி, அல்கலும்
அரும் பனி அளைஇய அற்சிரக் காலை
உள்ளார், காதலர், ஆயின், ஒள்ளிழை!
சிறப்பொடு விளங்கிய காட்சி
5
மறக்க விடுமோ, நின் மாமைக் கவினே?
பருவம் வந்தது கண்டு, 'தாம் குறித்த இதனை மறந்தார்' என வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறீஇயது. 10
 

 
471
எல் வளை நெகிழ, மேனி வாட,
பல் இதழ் உண்கண் பனி அலைக் கலங்க,
துறந்தோன் மன்ற, மறம் கெழு குருசில்;
அது மற்று உணர்ந்தனை போலாய்
5
இன்னும் வருதி; என் அவர் தகவே?
பருவ வரவின்கண் தூதாகி வந்த பாணன் கூறிய வழி, தோழி சொல்லியது. 1
 

 
472
கை வல் சீறியாழ்ப் பாண! நுமரே
செய்த பருவம் வந்து நின்றதுவே;
எம்மின் உணரார்ஆயினும், தம்வயின்
பொய் படு கிளவி நாணலும்
5
எய்யார் ஆகுதல், நோகோ யானே?
குறித்த பருவம் வரவும் தலைமகன் வாரானாகியவழி, தூதாய் வந்த பாணற்குத் தோழி கூறியது. 2
 

 
496
மா புதல் சேர, வரகு இணர் சிறப்ப
மா மலை புலம்ப, கார் கலித்து அலைப்ப,
பேர் அமர்க் கண்ணி! நிற் பிரிந்து உறைநர்
தோள் துணையாக வந்தனர்;
5
போது அவிழ் கூந்தலும் பூ விரும்புகவே.
குறித்த பருவத்தின்கண் தலைமகன் வந்துழி, தோழி தலைமகட்குச் சொல்லியது. 6
 

 
497
குறும் பல் கோதை கொன்றை மலர,
நெடுஞ் செம் புற்றம் ஈயல் பகர,
மா பசி மறுப்ப, கார் தொடங்கின்றே
பேர் இயல் அரிவை! நின் உள்ளிப்
5
போர் வெங் குருசில் வந்தமாறே.

 
498
தோள் கவின் எய்தின; தொடி நிலை நின்றன;
நீள் வரி நெடுங் கண் வாள் வனப்பு உற்றன
ஏந்து கோட்டு யானை வேந்து தொழில் விட்டென,
விரை செலல் நெடுந் தேர் கடைஇ,
5
வரையக நாடன் வந்தமாறே.
இதுவும் அது. 8
 

 
499
பிடவம் மலர, தளவம் நனைய,
கார் கவின் கொண்ட கானம் காணின்,
'வருந்துவள் பெரிது' என, அருந் தொழிற்கு அகலாது,
வந்தனரால், நம் காதலர்
5
அம் தீம் கிளவி! நின் ஆய் நலம் கொண்டே.
இதுவும் அது. 9
 

 
500
கொன்றைப் பூவின் பசந்த உண்கண்,
குன்றக நெடுஞ் சுனைக் குவளை போல,
தொல் கவின் பெற்றன இவட்கே வெல் போர்
வியல் நெடும் பாசறை நீடிய
5
வய மான் தோன்றல் நீ! வந்தமாறே.
 

 
மேல்